தயவு செய்து நம்புங்க, இவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நிஜம்!!!

தயாரித்து, நடித்து, வசனம் பேசி அவர் செய்யும் 'சில்மிஷங்களைப்' பார்த்து தமிழ் திரையுலகமே புளகாங்கிதமடைந்து போய் நிற்கிறது!!.
லத்திகா என்ற படத்தைத் தயாரித்தார். அதில் ஹீரோவாகவும் நடித்தார். இப்போது வில்லனாகவும் ஆனந்தத் தொல்லை படத்தில் அதகளம் செய்ய வருகிறார், தான் எதைப் பேசினாலும் அதை சீரியஸாக கருதிப் பேசும் டாக்டர் சீனிவாசன். இவர் தனக்குத் தானே வைத்துக் கொண்ட பெயர் 'பவர் ஸ்டார்'.
பிரபல நடிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ரசிகர்கள்தான் போட்டா போட்டி போடுவார்கள்.ஆனால் சீனிவாசனோ அதற்கு ஒரு படி மேலே போய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதோடு, விளம்பரமாகவும் பத்திரிகைகளில் பிரசுரித்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இவர் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் வரும் ஒவ்வொரு வார்த்தையும் நம்ப முடியாதது போலத்தான் தோன்றும். ஆனால் அதை நம்புபம்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறார் சீனிவாசன்.
நீங்களும் படியுங்கள் சீனி சொன்னதை...!
என்னை பொறுத்தவரை ஏனோ தானோ என்று படம் பண்ண விருப்பம் இல்லை. நல்ல கதை தான் ரொம்ப முக்கியம்.
ஆனந்தத் தொல்லைப் படத்தைத் தொடர்ந்து அடுத்து தேசிய நெடுஞ்சாலை என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் சங்கவி தான் என் ஜோடி. படத்தை நானே இயக்கி நடிக்கிறேன்.
இதற்கு அடுத்து படைத்தலைவன். இந்தபடம் ஒரு போலீஸ் ஸ்டோரி. மாரி மைந்தன் இப்படத்தை இயக்குகிறார்.
கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்க ஆசை உள்ளது. அதை விட ரொம்ப முக்கியம் சங்கவி மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் கிடைத்தால் மன்மத ராசா பாட்டு மாதிரி, என்னாலையும் ஆட முடியும்.
சினிமா மட்டும் இல்ல, சொந்தமா பிசினஸ் இருக்கு, கிளினிக் இருக்கு, அதை தவிர எனக்கு கல்லூரி மாணவர்கள் ரசிகர்கள் அதிகம்.
தமிழ் சினிமாவில் நல்ல கதை உள்ள படங்கள் பண்ணி மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்க விரும்புகிறேன். நீங்க தான் அடுத்த எம்.ஜி.ஆரா என்று கேட்காதீங்க. நான் அப்படி சொல்ல வரவில்லை. அவருக்கு அடுத்து நான் தான் வருவேன். இன்னும் ரசிகைகள் மனதில் இடம் பிடிப்பேன்.
எனக்கு கூட ஒரு சமயம் பாரதிராஜா சார் படத்தில் நடிக்க வேண்டும் என்று தோணுச்சு, அப்புறம்தான் அவர்கிட்ட போய் வாய்ப்பு கேட்டு நிக்குறது பதிலா நாமலே படம் டைரக்ட் செய்யலாம் என்று முடிவு பண்ணி, படம் இயக்க தொடங்கினேன்.
இப்பகூட தினமும் பத்து கதைகள் கேட்கிறேன், ஆனால் எனக்கு செட் ஆனா மட்டும் தான் அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன்...
இப்பவே கண்ணைக் கட்டிக்கிட்டு வருதா...???!!!


Click it and Unblock the Notifications











