ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலுமகேந்திரா.. யாரு காப்பாத்துனது தெரியுமா?
சென்னை: நான் தயாரிக்கின்ற படங்களில் நடிப்பது கிடையாது. ஆனால் பாடல்கள் பாடுவேன் என்று மலையாளம் மற்றும் தமிழ் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான மோகன் சர்மா கூறியுள்ளார்.
மோகன் என்ற நபர் இல்லையென்றால் நான் இல்லை என்று பாலுமகேந்திரா தனது பயோகிராபியில் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார்.
பிலிம்சேம்பர் தலைவராகவும், திருட்டு விசிடியில் ஈடுபடுவோருக்கான எதிரான சட்டம் உருவாக காரணமாக இருந்தவருமான மோகன் சர்மா, நமது பிலீம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு நேர்காணலை இங்கு காணலாம்.

முதல் தமிழன்
கேள்வி: பல விருதுகளுக்கு சொந்தக்காரர் நீங்கள்... முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே பாராட்டியவர் நீங்கள்... உங்களை பற்றி நீங்கள் கூற விரும்புவது...
பதில்: எனது சொந்த ஊர் கோயம்புத்தூர். தென்னிந்தியாவிலிருந்து பிலிம் இன்ஸ்டிடியூட்டிற்கு சென்று படித்து முதல் ரேங்கில் தேர்ச்சி பெற்ற முதல் தமிழன் நான் என்பதில் பெருமைக் கொள்கிறேன். தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன். மலையாளத்தில் பெரிய இயக்குனர்கள் சேதுமாதவன், வின்சென்ட், பி.எம்.மேனன், பாஸ்கரன் ஆகியோரது படங்களில் நடித்துள்ளேன். 18 படங்கள் தயாரித்துள்ளேன் என்றார்.

உலகம் ஒரு சிறைச்சாலை
கேள்வி: நீங்கள் பெற்ற விருதுகள் குறித்து...
பதில்: நான் இயக்கி, தயாரித்த, நடித்த நம்ம கிராமம் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது பெருமையாக இருந்தது. நம்ம கிராமம் படத்தை தவிர மீதி நான் தயாரிக்கின்ற படங்களில் நடிப்பது கிடையாது. அதுவே எனது கொள்கையாகவும் வைத்துள்ளேன். ஆனால் எனது படங்களில் பாடல்கள் பாடுவேன் என்றார். தமிழில் புலமைப்பித்தன் வரிகளில் 1983ம் ஆண்டு வெளியான தவம் என்ற படத்தில் உலகம் ஒரு சிறைச்சாலை என்ற டைட்டில் பாடலை பாடியுள்ளதாகவும் தெரிவிவத்தார்.

பாலுமகேந்திரா பயோகிராபியில் மோகன்
கேள்வி: உங்களால் மறக்க முடியாத சம்பவம் எது?
பதில்: என்னுடைய மறக்க முடியாத சம்பவம் என்னவென்றால் இயக்குனர் பாலுமகேந்திரா மற்றும் பரதன் அவர்களின் உயிரை காப்பாற்றியது தான். கேரளாவில் பாரத புழா என்ற இடத்தில் பிரயாணம் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது அங்குள்ள ஆற்றில் இயக்குனர் பாலுமகேந்திரா, பரதன் ஆகியோர் அடித்து செல்லப்பட்டனர். அவர்களின் கூக்குரல் கேட்டு, நான் உடனடியாக ஆற்றில் இறங்கி 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு அவர்களை மீட்டேன். இரு உயிர்களை காப்பாற்றுவதற்கு கடவுள் எனக்கு கொடுத்த வரப்பிரசாதம் என்று கருதுவதாக தெரிவித்தார். இயக்குனர் பாலுமகேந்திரா தனது பயோகிராபியில் மோகன் என்ற நபர் இல்லையென்றால் பாலுமகேந்திரா இல்லை என்றும் தெரிவித்ததாக கூறினார்.

எம்.ஜி.ஆருக்கு போட்டி
கேள்வி: தமிழ் திரைப்படங்களில் நீங்கள் ஜொலிக்காதது ஏன்?
பதில்: அது எனது துரதிஷ்டம். நான் முதன்முதலில் சொல்லதான் நினைக்கிறேன் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவக்குமாருடன் இணைந்து நடித்து கொண்டிருந்தேன். ஒரு நாள் இயக்குனர் பாலச்சந்தர் வசனத்தின் காப்பியை என்னிடம் கொடுத்து படிக்க சொல்லியிருந்தார். அந்த சமயத்தில் தயாரிப்பாளர் மணியனும், எம்.ஜி.ஆரும் எனது முன்னால் நின்று கொண்டிருப்பதை கவனிக்காமல், நான் படித்துக் கொண்டிருந்தேன். பின்பு தான் அவர்களை கவனித்தேன். உடனே நான் எம்.ஜி.ஆருக்கு வணக்கம் தெரிவித்து, கைகுலுக்கினேன். அந்த சம்பவத்தை ஒரு சில பத்திரிகைகள் தவறாக எம்.ஜி.ஆருக்கு போட்டியாக ஒரு நபர் உருவாகியுள்ளார் என்றும், பத்திரிகையின் முதல்பக்கத்தில் ஒரு பாகத்தில் எம்.ஜி.ஆரும், மறுபாகத்தில் என்னுடைய போட்டோவை பிரசுரம் செய்தனர். இங்கு தான் எனது துரதிஷ்டம் உருவானது.
ஆம்பூரிலிருந்து ஒரு நபர் எனக்கு போன் செய்து, எம்.ஜி.ஆரிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டுள்ளீர்கள். இனி உங்கள் படம் தமிழகத்தில் ரிலீசாகாது என்றார். நான் உடன் தயாரிப்பாளர் மணியனிடம் இது குறித்து தெரிவித்தேன். அவர் கூறுகையில், இது போன்ற சூழ்நிலை ஏற்படும் என்று நான் நினைத்தேன். தற்போது எம்.ஜி.ஆரை வைத்து சிரித்து வாழ வேண்டும் என்று படத்தை தயாரித்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். என்னால் உங்களுக்கு எந்த சிரமம் ஏற்பட வேண்டாம். நான் இந்த படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறி விலகினேன் என்றார். சம்பவம் குறித்த கவிஞர் கண்ணதாசன், ஏ.எம்.சீனிவாசன், நடிகர் சிவாஜி கணேசன் போன்றோரும் எனக்கு ஆறுதல் கூறினர்.

நாடகமே உலகம்
கேள்வி: நீங்கள் திரும்ப எப்பொழுது தமிழில் நடிக்க ஆரம்பித்தீர்கள்?
பதில்: தமிழ் திரைப்படத்தில் சின்ன அண்ணாமலை என்பவர் மூலம் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த ஜெனரல் சக்கரவர்த்தி படத்தில் சிவாஜியின் மருமகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு நடிகை கே.ஆர்.விஜயாவின் நாடகமே உலகம் படத்தில் நடித்துள்ளேன்.
கேள்வி: பிலிம்சேம்பர் தலைவராக நீங்கள் என்ன பணி செய்தீர்கள்?
பதில்: இந்தியாவில் திரைப்படத்துறையில் 70 சதவீதமான முடிவை இந்த அமைப்பே தான் எடுக்கும். 2002 & 2003ம் ஆண்டு காலக்கட்டங்களில் தென்னிந்திய மொழிகள் நான்கிலும் படம் தயாரித்தேன். இதன் காரணமாக 2003ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் (பிலிம் சேம்பர்) தலைவராக என்னை தேர்ந்தெடுத்தார்கள். அதில் ஓராண்டு காலம் எனது பணியை சிறப்பாக செய்தேன். குறிப்பாக சொல்லப்போனால் அந்த காலத்தில் பிலிம்சேம்பர் சொத்து மதிப்பு 500 கோடி. தற்போது 1000 கோடியை தாண்டும். அந்த சூழ்நிலையில் பிலிம்சேம்பரை ஆக்ரமித்திருந்த 7 நபரை எனது காலத்தில் வெளியேற்றினேன். அப்போது தமிழகத்தில் ஜெயலலிதா அவர்களின் ஆட்சி நடைபெற்றதால் இது சாத்தியமாயிற்று என்றார்.
ரவிசங்கர் பிரசாத் எனது நண்பர்
கேள்வி: திருட்டு விசிடி சட்டம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: நான் பிலிம்சேமர் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் நான் அடிக்கடி டெல்லி சென்று வருவேன். தற்போது தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருக்கும் ரவிசங்கர் பிரசாத்துடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அவருடன் உதவியுடன் எல்.கே.அத்வானியை சந்திக்கும் தருணம் உருவானது. அத்வானியிடம் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் திருட்டு விசிடியால் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தேன். அதன் காரணமாக திருட்டு விசிடி செயலில் ஈடுபடுவோர் மீது 5 வருட சிறைத்தண்டையும், 5 லட்சம் அபராதமும் விதிப்பது தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டது.
இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/EoLxpJDoNHg இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான மோகன் சர்மா இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்..


Click it and Unblock the Notifications











