ஹீரோயின் ஆசையில்லை, டைரக்டர் ஆகப் போகிறேன்: ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ கீர்த்தனா பார்த்திபன்
சென்னை: சினிமாவில் மிகச்சிறந்த இயக்குநராக உருவாவதே தனது லட்சியம் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் பார்த்திபனின் மகளும், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவருமான கீர்த்தனா.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் குழந்தை கதாநாயகியாக அறிமுகமானவர் பார்த்திபன்-சீதா நட்சத்திர தம்பதிகளின் மகள் கீர்த்தனா.
விரைவில் கதாநாயகியாக வலம் வருவார் என சினிமா வட்டாரம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இயக்குநராவதே தனது லட்சியம் எனத் தெரிவித்துள்ளார் கீர்த்தனா.

சினிமாக் குடும்பம்...
என் அப்பா பார்த்திபன் இயக்குனராகவும், அம்மா சீதா நாயகியாகவும் இருந்ததால் சிறு வயதிலேயே சூட்டிங் போய் சினிமா விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

அப்போ எனக்கு 10 வயசு...
5-வது வகுப்பு படிக்கும்போது மணிரத்னம் எங்கள் வீட்டுக்கு வந்து என்னை அவர் படத்தில் நடிக்க கேட்டார். அப்பாவும் சம்மதித்தார்.

சித்தார்த் கற்றுத்தந்த நடிப்பு...
இப்போது கதாநாயனாக உள்ள சித்தார்த் அப்போது மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்தார். அவர் என் வீட்டுக்கு வந்து எனக்கு நடிப்பு பயிற்சி அளித்தார். அதில் நடித்ததற்காக பாராட்டுகள் கிடைத்தன.

நடிக்க ஆர்வம் இல்லை...
அதன் பிறகு எனக்கு நடிக்க விருப்பம் இல்லை. இசை, நடனங்கள் கற்றேன். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினேன்.

ஒரு இயக்குநர் உதயமாகிறார்...
அடுத்து டைரக்டராக முடிவு செய்துள்ளேன். விரைவில் நல்ல கதையொன்றுடன் டைரக்டராக அறிமுகமாக உள்ளேன் என இவ்வாறு கீர்த்தனா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











