Exclusive: நிறைய பணம் தர்றேன்னு சொல்றாங்க.. ஆனா நா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்: நாஞ்சில் சம்பத்
தன்னால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தனக்கு அதிக பணம் தருகிறேன் என பிரபல தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ந்து அழைப்பதாக முன்னாள் அரசியல்வாதியும், தற்போதைய சினிமா நடிகருமான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
திமுக, மதிமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் முக்கிய பதவி வகித்தவர் நாஞ்சில் சம்பத். தமிழகம் முழுவதும் பிரச்சார பீரங்கியாக மேடைகளில் முழங்கி வந்த அவர், ஒரு கட்டத்தில் அரசியலே வேண்டாம் என ஒதுங்கிவிட்டார். இலக்கியத்தில் முழுக்கவனம் செலுத்தி வந்த அவரை எல்கேஜி படம் மூலம் சினிமாவுக்கு அழைத்து வந்தார் ஆர்ஜே பாலாஜி.
எல்கேஜி படத்தை தொடர்ந்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நாஞ்சில் சம்பத்.
முழு சினிமா நடிகராக மாறிவிட்ட நாஞ்சித் சம்பத்தை, ஒன்இந்தியாவுக்காக சந்தித்தோம். அவருடன் உரையாடியதில் இருந்து,

அரசியல் நையாண்டி படம்:
"நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஒரு அரசியல் நையாண்டி படம். இதில் நான் ஒரு அரசியல் கட்சித் தலைவராக நடித்துள்ளேன். சமூக வலைதளங்களில் என்னை நாசா என செல்லமாக அழைப்பார்கள். அதையே கட்சியின் பெயராக, "நாசா முன்னேற்றக் கழகம்" என படத்தில் வைத்துவிட்டனர். ஏதோ எனக்கு தெரிந்த அளவுக்கு நடித்துள்னேன்.

ஆசை:
மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை என்பது போல, நான் அரசியலைவிட்டு ஒதுங்கிவிட்டாலும், அரசியல் என்னை விட மறுக்கிறது. தொடர்ந்து அரசியல்வாதி வேடங்களே வருகிறது. ஆனால் எனக்கு அரசியல்வாதி வேடம் மட்டுமல்ல, மற்ற வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. டாக்டர், வக்கீல், பேராசிரியர் உள்ளிட்ட வேடங்கள் தந்தால் சிறப்பாக நடிப்பேன்.

பிக் பாஸ் வாய்ப்பு:
பிக் பாஸ் முதல் சீசனில் இருந்தே என்னை அழைக்கிறார்கள். நிறைய சம்பளம் தருகிறோம் என்றார்கள். ஆனால் நான் தான் மறுத்துவிட்டேன். என்னால் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு இடத்தில் இருக்க முடியாது. அதுவும் இன்றைய சூழலில் செல்போன் இல்லாமல் இருப்பது எல்லாம் சாத்தியமில்லை. இன்று செல்போன் ஆடம்பரம் அல்ல, அத்தியாவசியம்.

வதந்தி:
என்னை பொறுத்தவரை பிக் பாஸ் நிகழ்ச்சியே நாட்டுக்கு தேவையில்லாத ஒன்று. அதில் இருந்து கிடைக்கும் புகழ் ஒரு மாயை. பிக் பாஸ் மூலம் கிடைக்கும் புகழ் உண்மை என்றால், கமல் இந்நேரம் முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டும். ஆனால் இந்த தேர்தலில் அவர் கானல் நீராகிவிட்டார். எனவே தான் எனக்கு பிக் பாஸ் வேண்டாம் என்கிறேன். அதனால் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக செய்தி வந்தால், அது வெறும் வதந்தியே, யாரும் நம்ப வேண்டாம்" என்றார் அவர்.


Click it and Unblock the Notifications











