கடனில்லாத ஒரு வீடு.. கனவு காணும் 'இதயம் திரையரங்கம்'!

பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா... ஏன் இந்தத் தலைப்பு? படத்தை இயக்கும் ராம்கி ராமகிருஷ்ணனிடமோ கேட்டோம்.
"மனிதனின் மனசே ஒரு தியேட்டர்தான். அதில் அவன் தன் கனவுகளை படமாகப் பார்க்கிறான். அப்படியொரு கனவைத்தான் இந்தக் கதையில் சொல்கிறேன்.
சென்னை போன்ற நகரங்களில் பெரும்பாலானோர் வாடகை வீடுகளில்தான் குடியிருக்கிறார்கள். அப்படிக் குடியிருப்போர், கடன் பெற்றோ, வேறு சொத்தை அடமானம் வைத்தோ தங்களுக்கென ஒரு வீட்டை வாங்குகிறார்கள்.
ஆனால், கடனே பெறாமல், சொந்த உழைப்பு - கையில் கிடைக்கும் பணத்தை மட்டும் வைத்து தனக்கென ஒரு சிறிய வீட்டை வாங்க முயற்சிக்கிறது ஒரு குடும்பம். அவர்களின் கனவை என் இதயத் திரையரங்கில் ஓடவிட்டேன். இப்போது படமாக்கிக் கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொரு நடுத்தரவாசியின் கனவையும் இந்த இதயம் திரையரங்கில் நீங்கள் பார்க்கலாம்.." என்றார்.
சோதிடத்தை நம்பி மோசம் போகும் நபர்களையும் இதில் ஹைலைட் செய்திருக்கிறாராம்.
எஸ் ஏ சந்திரசேகரன், ஏ வெங்கடேஷ் போன்ற இயக்குநர்களிடம் 20 படங்களுக்கு மேல் பணியாற்றியவர் ராம்கி ராமகிருஷ்ணன்.
ஹீரோவாக ஆனந்த் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மீராவுடன் கிருஷ்ணா, கம்பன் கழகம் படங்களில் நடித்த ஸ்வேதாதான் ஹீரோயின். இரண்டாவது நாயகியாக வேலன்டினா நடிக்கிறார் (விண்ணைத்தாண்டி வருவாயாவில் நடித்தவர்).
வில்லியாக வருபவர் கவிதா. இன்னொரு வில்லனாக கஜினி ராஜேஷ் நடிக்கிறார்.
என் ரவி ஒளிப்பதிவு செய்ய, மரியா மனோகர் இசையமைக்கிறார். எஸ் ஏ சந்திரசேகரன் மனைவி ஷோபா இதில் ஒரு நாட்டுப்புறப் பாடலைப் பாடியுள்ளாராம்.
இயக்குநர் சொல்வதைப் பார்த்தால் இந்தக் கனவு பலருக்கும் ஆறுதலாகத்தான் இருக்கும்!


Click it and Unblock the Notifications











