காப்பி ரைட்ஸ் விவகாரம்.. எங்க சொத்தை ஏன் திருடுன? எங்க கிட்ட இல்லாத பணமா? கங்கை அமரன் பேச்சு!
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் கேங்ஸ்டரா நடித்திருக்கும் 'குட் பேட் அக்லி' படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தில், 'இளமை இதோ இதோ', 'ஒத்த ரூபா தார்றேன்', 'என் ஜோடி மஞ்சக் குருவி ' ஆகிய பாடல்கள் படத்தின் முக்கியக் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டு இருந்தது. தன்னுடைய பாடல்களை படத்தில் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுபப்பட்டுள்ளது.
மேலும், ரூ.5 கோடி நஷ்ட ஈடும் கொடுக்க வேண்டும், இல்லையெனில் அந்தப் பாடல்களை படத்திலிருந்து நீக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய இளையராஜாவின் சகோதர் கங்கை அமரன், அது எங்கள் சொத்து அதை எப்படி நீ திருடலாம் என பேசி உள்ளார்.

கங்கை அமரன்: நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கை அமரன், எப்போதுமே இசை நிகழ்ச்சிகளுக்கு அண்ணன் என்னை அழைத்துச் செல்ல மாட்டார். அதற்கு அவர் சொல்லும் காரணம், நீ நடக்க முடியாமல் நடந்து வருவாய் அதை பார்க்கும் போது எனக்கு மேடையில் கவனம் இருக்காது. அதனால், நீ வர வேண்டாம் என்று என்னிடம் சொல்லி விடுவார். ஆனால், நான் வேண்டுமென்று அவர் முன்னால் நடனம் ஆடி காட்டி இருக்கிறேன். அதேபோல அண்மையில் சிம்போனி அமைக்க லண்டன் சென்று இருந்தார். அப்போது கூட, எனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி, என்னை விட்டுவிட்டு சென்று விட்டார். இப்படி எங்களுக்குள் பல சண்டைகள் எல்லாம் நடக்கும். இதே போல, நாங்கள் இருவரும் பேசிக் கொள்வது போல அவரிடம் பேசுவதற்கு ஆட்கள் இல்லை, இளையராஜாவிற்கு இருக்கும் ஒரே ஒரு தம்பி நான் தான் இதற்கு மேல் வேறு ஏதாவது வேண்டுமா? உலகம் புகழக்கூடிய ஒரு சிம்போனியை எழுதி, வெளிநாட்டுக்காரர்கள் மூக்கில் விரலை வைக்கக் கூடிய அளவிற்கு அவர் சாதனை படைத்துவிட்டு இந்தியா வந்திருக்கிறார் இளையராஜா.
மிகப்பெரிய பாக்கியம்: தற்போது உலகம் முழுவதும் அவருடைய இசை பரவ வேண்டும் என்பதற்காக, பல நாடுகளில் சிம்போனிக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். ஜூன் மாதம் இரண்டாம் தேதி இங்கே சிம்போனி இசை நடைபெற இருக்கிறது. அப்படி புகழ்பெற்ற அண்ணனும் நானும் ஒரே வயிற்றில் பிறந்திருக்கிறோம் என்பதே கடவுள் எனக்கு கொடுத்த மிகப்பெரிய பாக்கியம். எல்லாமே என்னுடைய அண்ணன் எனக்கு கொடுத்தது தான், முதல் முதலாக கோழி கூவுது படத்தை என்னிடம் கொடுத்து அதை இயக்க சொன்னார். நான் யாரிடமும் உதவி இயக்குனராக இருந்தது இல்லை, எனக்கு முன் அனுபவமே இல்லை. இருந்தாலும் எப்படி படத்தை எடுப்பது என்பதை கற்றுக்கொண்டு படம் எடுத்தேன் படம் வெற்றி பெற்று விட்டது. அதே போலத்தான் கரகாட்டக்காரன் படத்தை தில்லானா மோகனாம்மாள் படத்தை சற்று மாற்றி எடுத்தேன் படம் மகத்தான வெற்றி பெற்றது.

நல்ல கதைகள் இல்லை: அந்த காலத்தில் கேட்கக்கூடிய பாடல்கள் எல்லாம் மிகவும் ரசிக்கும்படி அமைதி கொடுத்தது. ஆனால், இந்த காலத்தில் வரும் பாடல்களை கேட்கவே முடியவில்லை. அதேபோல, படத்தில் அனைவரும் துப்பாக்கியை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது, வெளிவரும் படங்களில் வன்முறை அதிகமாக இருக்கிறது. நல்ல நடிகர் கமலஹாசன் அவர்களே இப்போது இந்த காலத்திற்கு ஏற்றபடி மாறிவிட்டார். விக்ரம் படத்தில் அவர் பலவிதமான துப்பாக்கிகளை வைத்திருந்தார். இதனால், மக்களிடம் நல்ல படத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற எண்ணம் குறைந்துவிட்டது. நல்ல கதைகளோடு இளையராஜாவிடம் வந்தால், அவர் நிச்சயம் இலவசமாகவே இசையமைத்துக் கொடுப்பார், நானும் இலவசமாகவே பாடல் எழுதி கொடுப்போன் என்று பேசினார்.
காப்பி ரைட்ஸ் விவகாரம்: இப்போது செய்தியாளர் ஒருவர் காப்பி ரைட்ஸ் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கங்கை அமரன், காப்பி ரைட்ஸ் விவகாரத்தில், உலக அளவில் என்ன விதி இருக்கிறதோ அதைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். இந்திய விதியை நாங்கள் பின்பற்றவில்லை. கதை ஆசிரியருக்கு கதையில் உரிமை உண்டு, அந்தப் படம் தெலுங்கு, இந்தி என எத்தனை மொழிகளில் வெளிவந்தாலும், அவர்களுக்கு அதில் உரிமை உண்டு. ஆனால், பாட்டுக்கும் அவர்களுக்கும் அதில் சம்பந்தமில்லை. நாங்கள் ஒரு நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தோம். அவர்கள் பூஜை போடும்போது எங்களுக்கு 10,000 ரூபாயை கொடுப்பார்கள். அவ்வளவு தான், ஆனால், அன்னக்கிளி பாடல் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியவந்தது. ஆனால், அந்த ரெக்கார்டிங்கில் இருந்து எங்களுக்கு ஒரு பைசா கூட வரவில்லை.

ஏன் கேட்கவில்லை: அதன் பிறகு தான், இளையராஜா படத்திற்கு ஒம்பந்தம் ஆகும் போதே, இசையின் உரிமையை அவர் வாங்கிக் கொள்வார், படத்தின் இசைக்கு வேண்டுமானால் பணத்தை குறைத்துக்கொள்ளுங்கள். ஆனால், இசையின் உரிமை என்னிடம் இருக்க வேண்டும் என்றார். அப்போது தான், என் பாடலை மேடையில் பாடக்கூடாது என்று, எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன், சில பிரச்சனைகள் வந்தன. நான் தலையிட்டு பேசிய பிறகு தான், மேடையில் எனது பாடலை பாடுவதற்கு ராயல்டி வேண்டாம் என்றார். ஏழு கோடி ரூபாய் கொடுத்து மியூசிக் போட்ட இசையமைப்பாளரின் பாடல்களுக்கு கைதட்டல் வரவில்லை. நாங்கள் போட்ட பாடல்களை ரசிகர்கள் ரசித்து கொண்டாடி கைதட்டுகிறார்கள். அப்படியென்றால், அது எங்களுடைய பாட்டு தானே, அப்படி இருக்கும்போது எங்களுக்கு அதில் பங்கு உண்டு. அந்தப் பாடலை பயன்படுத்துகிறோம் என்று அனுமதி கேட்டு இருந்தால் அண்ணன் நிச்சயமாக கொடுத்திருப்பார். ஆனால் அனுமதி கேட்காதது தான் பிரச்சனை.
அது எங்கள் சொத்து: அஜித் படமாக இருந்தால் என்ன, அது எங்களின் சொத்து அதை எப்படி நீ திருடலாம், என் வீட்டுக்குள் நீ எப்படி அனுமதி இல்லாமல் வரலாம். அந்த படத்திற்கு என்று ஒரு இசையமைப்பாளர் இருக்கிறாரா... அவரிடம் இப்படி ஒரு மியூசிக் வேண்டும் என்று கேட்டு போடசொல்ல வேண்டியது தானே... அதை செய்யாமல், அனுமதி வாங்காமல், எங்கள் பாட்டை எப்படி அந்த படத்தில் பயன்படுத்தலாம். கேட்டு இருந்தால் நிச்சயம் சந்தோஷமாக கொடுத்து இருப்போம். எங்களுக்கு நிச்சயமாக பணத்தாசை இல்லை எங்களிடம் அதிகமாக பணம் இருக்கிறது என்று கங்கை அமரன் அந்த நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











