நோன்பு கஞ்சி,பிரியாணி தான் முஸ்லீம் நண்பர்களுடன் இணைக்கும்...ஏன் தெரியுமா ? இட்ஸ் பிரசாந்த் பேட்டி
சென்னை: சினிமாத்துறையில் ஈகோ இருக்கவே கூடாது என்று திரைப்பட விமர்சகரும், எப்.ஐ.ஆர். திரைப்படத்தில் நடித்து உள்ள நடிகருமான பிரசாந்த் ரெங்கசாமி பில்மிபீட் பேட்டியில் பல கருத்துக்களை பதிவு செய்து உள்ளார் .
Recommended Video

திரைப்படங்களை ரிவ்யூ செய்வது வேறு. நடிப்பது வேறு. நடிப்பது கஷ்டம் என்றும், நாம் ஜெயிப்பதை விட, நம்முடைய டீம் ஜெயிப்பது தான் முக்கியம் என்றும் தெரிவித்தார்.
நமது இந்திய ஜனநாயக நாட்டில், நம்முடைய அடையாளத்தை யாரும் அழித்து விடக்கூடாது என்றும் எப்.ஐ.ஆர். படத்தில் ஆழமான விஷயங்களை பற்றி நிறைய பகிர்ந்து உள்ளார் .

முதல் நாள் சரியாக பண்ணலை
கேள்வி: பல திரைப்படங்களை ரிவ்யூ செய்த நீங்கள், எப்.ஐ.ஆர். படத்தில் நடித்தது குறித்து...
பதில்: இந்த படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷம். முதலில் நாம் இந்த படத்தை கெடுத்து விடுவோமோ என்று பயந்தேன். ஏனென்றால் நான் நிறைய படங்களில் நடித்தது கிடையாது. இந்த படத்தில் பெரிய நடிகர்கள் ஒர்க் பண்ணி மிகவும் நேர்த்தியாக நடித்து உள்ளார்கள். நம்மால் முடியுமா என்று பயந்தேன். படங்களை ரிவ்யூ பண்றது வேறு . நடிப்பது வேறு. முதல் நாள் ஷூட்டிங்கில் நான் சரியாக பண்ணலை. இன்னும் நடிக்கணுமா என்று இயக்குனரிடம் கேட்டேன். நீ நடிக்க கூடாது. சூழ்நிலைக்கேற்ப நீ நடந்து கொண்டால் போதும் என்றார்.

குட்டி வடிவேல் கேரக்டர்
கேள்வி: எப்.ஐ.ஆர். படத்தில் உங்கள் கதாபாத்திரம் குறித்து....
பதில்: நான் இந்த படத்தில் நடிக்க வரட்டுமா என்று நானாக கேட்கவில்லை. அவர்கள் என்னை அழைத்து, என்னை நம்பி, எனக்காக செலவு செய்றாங்க என்பதை உணர்ந்தேன். அதனால் என்னவென்றாலும் பார்த்து விடலாம் என்று களமிறங்கினேன். எப்படியாவது சிரிக்க வைத்து விட வேண்டும் என்று நினைத்தேன். இந்த படத்தில் ஒரு ஹேகர் ( computer hacker ) கதாபாத்திரத்தில், கிறுக்கன் போன்று நடித்திருப்பேன். அதாவது எல்லோரிடம் அடிவாங்கும் நடிகர் வடிவேல் போல் என்று சிரித்து கொண்டே குட்டி வடிவேல் போல் நடித்திருப்பேன் என்றார்.

ஈகோ கூடாது
கேள்வி: இந்த படத்தில் ஐஸ்கட்டியில் நீங்கள் உட்கார்ந்திருந்தது எப்படியிருந்தது?
பதில்: நிஜ ஐஸ்கட்டியில் என்னை உட்கார வைத்து ஷூட் பண்ணும்போது முதல் 30 நிமிடம் ரொம்ப கஷ்டப்பட்டேன். அழுகை வந்து விட்டது என்றே கூறலாம். அன்று இரவு 2 மணிக்கு இயக்குனர் மனு எனக்கு மெசேஜ் அனுப்பிருந்தார். பிரசாந்த் இதை தான் நான் எதிர்பார்த்தேன். நன்றாக வந்துள்ளது என்றார். அப்பொழுது எனக்கு நூறு விருது வாங்கியது போல் உணர்வு ஏற்பட்டது. சினிமாத்துறையில் ஈகோ இருக்கவே கூடாது. நாம் நடிக்கும் கதாபத்திரத்தில் சிறிதளவும் ஈகோ இருக்கக்கூடாது. இயக்குனர் சொல்வதை கேட்டு நடிக்க வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொண்ட தருணம் அது .

டீம் ஜெயிக்கணும்
கேள்வி: இசையமைப்பாளர் குறித்து...
பதில்: அஸ்வத் மியூசிக்கில் வேற லெவலில் செய்திருப்பார். பிஜிஎம் ஒன்றே படத்திற்கு போதுமானது. அஸ்வத் மிகவும் திறமைசாலி. அவருக்கு எதிர்காலம் நன்றாக இருக்கும். ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன். நாம் ஜெயிப்பதை விட, நம்முடைய டீம் ஜெயிப்பது தான் முக்கியம் என்றார்.

வாழ்க்கை மாறும்
கேள்வி: தயாரிப்பாளர், இயக்குனர் குறித்து....
பதில்: இந்த படத்தில் 10 முதல் 15 பேர் புதியவர்கள். தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் நினைத்திருந்தால் பெரிய நடிகர்களை கொண்டும், பெரிய மியூசிக் டைரக்டரையும் கொண்டும் படத்தை தயாரித்திருக்கலாம். வியாபார நோக்கிலும் அது சரியாக இருந்திருக்கும். ஆனால் புதியவர்களை கொண்டு இந்த படம் தயாரித்திருப்பதால் 15 பேருக்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இப்படம் மாபெரும் வெற்றி பெறும்பொழுது, 15 பேரின் வாழ்க்கையும் வேற மாதிரியாக இருக்கும் என்றார்.

நோன்பு கஞ்சி, பிரியாணி
கேள்வி: இந்தியா முழுவதும் தற்போது டிரெண்ட்டிங் ஆக இருக்கும் இஸ்லாமியர்களின் சில பிரச்சனைகள் மற்றும் இந்த படம் ரீலீஸ் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: நம்முடைய இந்தியாவில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என்று பார்த்து நாம் யாரும் வளரவில்லை. நமக்கு முஸ்லிம் நண்பர்கள் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது நோன்பு கஞ்சி, பிரியாணி அவ்வளவு தான். நோன்பு கஞ்சி, பிரியாணிக்காக மட்டும் அல்லாமல் அந்த உணவு பரிமாற்றம் பல நல்ல நண்பர்களை உருவாக்கி வாழ்க்கை முழுவதும் ஒருவருக்கு ஒருவர் நேசிப்பர் .நான் மனப்பூர்வமாக இஸ்லாமிய நண்பர்களுடன் பழகுகிறேன். அவர்களும் எனக்கு சிரமம் ஏற்படுகின்ற நேரத்தில் எனக்கு கைகொடுத்து உதவுகின்றனர். இந்த படத்தை நீங்கள் தியேட்டரில் பார்க்கும்பொழுது இஸ்லாமிய நண்பர்களுக்கும், நமக்கும் உள்ள உறவை ஞாபகப்படுத்தும் விதமாக இருக்கும் என்றார்.
கத்திக் குத்து , இரத்த காயம்
கேள்வி: நீங்கள் ரசிகர்களுக்கு கூற விரும்புவது...
பதில்: நம்முடைய ஜனநாயக நாட்டில் வாழ்வதற்காக ஒருவன் பயந்து வாழக்கூடாது. நாம் தூங்கும்பொழுது, நம்முடைய அடையாளத்தை எவனோ அழித்து விடுவோனோ என்ற பயம் இருக்கக்கூடாது. அவ்வாறு நடைபெற்றால் அதைபோன்ற கொடுமை வேறு எதுவும் கிடையாது. சோசியல் மீடியாவிற்கு ஒரு வேண்டுகோள்: நீங்கள் போடும் சில தவறான பதிவின்போது அடிப்படையில் ஒருவனுக்கு கத்திக் குத்து அல்லது இரத்த காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே நீங்கள் கவனமாக ஒவ்வொரு பதிவையும் போட வேண்டும் என்று பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் பிரஷாந்த் .இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனல் சென்று https://youtu.be/4yolizqe1ew இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்


Click it and Unblock the Notifications











