காதல் திருமணம்தான்... ஆனா பொண்ணு நஸ்ரியான்னு சொல்ல மாட்டேன்!- ஜெய்
நான் காதல் திருமணம் செய்வதைத்தான் விரும்புகிறேன். ஆனால் பொண்ணு யாருன்னு இன்னும் முடிவு செய்யல. அவர் நடிகையாக இருப்பாரா என்பதையெல்லாம் கடவுள்தான் முடிவு செய்யணும்!, என்றார் நடிகர் ஜெய்.

படத்துக்கு ஒரு கிசுகிசு
இசையமைப்பாளர் தேவாவின் தம்பி மகனான ஜெய், பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்தவர். அதன் பிறகு சென்னை 28 படத்தில் பளிச்சென ஹீரோவாக வந்தார். தொடர்ந்து சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள் மூலம் பிரபல ஹீரோவானார். இவருடன் நடிக்கும் அத்தனை நடிகைகளோடும் எப்படியாவது ஒரு கிசுகிசு வருவது வழக்கமாக உள்ளது.

இப்போது நஸ்ரியா
விஜயலட்சுமி, ஸ்வாதி, அஞ்சலி ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்ட ஜெய், இப்போது நஸ்ரியாவைத் தீவிரமாகக் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இருவரும் ஜோடி சேர்ந்த முதல் படம் ராஜா ராணி. அடுத்து திருமணம் எனும் நிக்கா படத்திலும் நடிக்கிறார்கள். நஸ்ரியா முழுக்க முழுக்க ஜெய்யின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகக் கூறப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்பு
இந்த நிலையில், நடிகர் ஜெய் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நஸ்ரியாவுடனான காதல் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, "சுப்பிரமணிய புரம் படத்துக்குப்பின், நான் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்திருக்க வேண்டும். தப்பு பண்ணி விட்டேன். அதனால், ஒரு வருடமாக நடிக்கவில்லை. அந்த ஒரு வருட இடைவெளிக்குப்பின் நடித்த படம்தான், ராஜா ராணி. இதையடுத்து வட கறி, நவீன சரஸ்வதி சபதம், திருமணம் என்னும் நிக்கா ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறேன்.

ஐஸ்வர்யா ராயைக் காதலித்தேன்
ஓய்வு இல்லாமல் நடித்து வருவதால், திருமணம் பற்றி யோசிக்க நேரம் இல்லை. நான், ஐஸ்வர்யா ராயின் ரசிகன். அவரைத்தான் காதலித்தேன். என் அறையில் அவருடைய படம்தான் இருந்தது. அவர் விவேக் ஓபராயை காதலிப்பதாக செய்தி வந்தபோதே அவர் படத்தைக்கூட தூக்கிப்போட்டு விட்டேன். இப்போது என் அறையில் யாருடைய படமும் இல்லை.

கடவுள் முடிவு
எனக்கு காதல் திருமணம்தான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. என் வருங்கால மனைவி நடிகையா அல்லது நடிகை அல்லாதவரா? என்பதை கடவுள்தான் முடிவு செய்ய வேண்டும்.

காதலிச்சி கழட்டிவிட்ட அனுபவம்?
நிஜ வாழ்க்கையில் நான் எந்த ஒரு பெண்ணையும் காதலித்து, கழற்றிவிட வில்லை. சில பெண்களின் காதலை நிராகரித்து இருக்கிறேன். முன்பு என்னையும், அஞ்சலியையும் இணைத்து பேசினார்கள். அஞ்சலி எங்கே இருக்கிறார்? என்பதே எனக்கு தெரியாது. தெரிஞ்சா சொல்லுங்க.. பார்த்து நாளாச்சு,'' என்றார்.


Click it and Unblock the Notifications











