வெத்து பிரம்மாண்டம் வேலைக்கு ஆகாது.. ஷங்கர் சறுக்குவது எங்கே?.. கேம் சேஞ்சர் பற்றி அந்தணன் பளிச்!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது. ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, அஞ்சலி உள்ளிட்ட பல பிரபலங்கள் அந்த படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் படத்துக்கு பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை என பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ராஜமெளலியே நேற்று நடைபெற்ற விழாவில் ஷங்கர் தான் ஓஜி டைரக்டர் என புகழ்ந்து பேசினார். அவர் சொன்னது எல்லாம் சும்மா வாய் வார்த்தைக்காக எல்லாம் இல்லை. அது முழுக்க முழுக்க உண்மை தான். அந்த காலத்திலேயே இந்திய சினிமாவையே வியக்க வைத்தவர் ஷங்கர் தான்.

ஆனால், ரஜினிகாந்த், கமல்ஹாசன் எல்லாம் அப்டேட் ஆகிக்கொண்டது போல அவர் அப்டேட் ஆகாமல் கதை விஷயத்தில் இன்னமும் இந்தியன், முதல்வன், அந்நியன் பாணியிலேயே படம் எடுப்பது தான் அவர் செய்யும் பெரிய தவறு என அந்தணன் தனது கருத்தை முன் வைத்துள்ளார்.
கேம் சேஞ்சர் பாக்ஸ் ஆபிஸை நிரப்புமா?: புஷ்பா 2 திரைப்படம் 1800 கோடி வசூலை அள்ளி மிகப்பெரிய சாதனையை படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டோலிவுட் நடிகர் ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் அட்லீஸ்ட் 1000 கோடி வசூல் வந்தால் கூட மிகப்பெரிய வெற்றிப் படமாக கருதப்படும். அட்லீ செய்த 1000 கோடி சாதனையை அவரது குருநாதரான ஷங்கரால் இன்னமும் செய்ய முடியவில்லையே என்கிற ட்ரோல்களுக்கும் அவர் முடிவு கட்டுவாரா? மாற்றுவாரா? என ஒட்டுமொத்த திரையுலகமும் காத்துக்கிடக்கிறது.
பணத்தை வாரி இறைக்கும் தில் ராஜு: கேம் சேஞ்சர் படத்தை தில் ராஜு பார்த்தாரா? இல்லையா? என தெரியவில்லை. புரமோஷனுக்காக கோடிக் கணக்கில் பணத்தை வாரி இறைக்கிறார். பாலிவுட் ரசிகர்களை கவர்வதற்காக இன்று மாலை மும்பையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்பாடு செய்திருக்கிறார். ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலே போதும் மிகப்பெரிய வசூலை அள்ளிவிடும். ஆனால், இந்தியன் 2 படம் போல சொதப்பி விட்டால் ஷங்கர் இனிமேல் படம் எடுப்பது கஷ்டம் தான் எனக் கூறியுள்ளார்.
ஷங்கர் சறுக்குவது எங்கே?: இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநர்கள் சென்று இதுபோன்ற காட்சிகளை ஏற்கனவே உங்கள் படங்களில் வைத்திருக்கிறீங்கள். அதை மாற்றிவிடலாம் என்று சொன்னால், உடனடியாக அந்த உதவி இயக்குநரை வெளியே அனுப்பிவிடுவாராம். என்னை விட உனக்கு சினிமா நல்லா தெரியுமா? என்கிற ஈகோ அவருக்கு வந்துவிடுவது தான் பிரச்சனை என்கின்றனர். தயாரிப்பாளர், ஹீரோ என யாருக்குமே படத்தின் கதையை முழுதாகவோ படம் எடுத்த பின்னர் போட்டுக் காட்டுவதோ செய்ய மாட்டார் என்றும் அந்தணன் கூறியுள்ளார்.
கேம் சேஞ்சர் கதி என்ன?: தமிழ்நாட்டில் இதுவரை கேம் சேஞ்சர் படத்துக்கான எந்தவொரு ஹைப்பும் இல்லை. புஷ்பா 2 படத்தையே இங்கே யாரும் மதிக்கவில்லை. அதே நிலைமை தான் ஷங்கரின் கேம் சேஞ்சருக்கும் உள்ளது. ஆனால், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ராம் சரண் படத்துக்காக ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதை ஷங்கர் பூர்த்தி செய்து விட்டார் என்றால் கேம் சேஞ்சர் பெரிய கலெக்ஷனை அள்ளும். அதே போல புஷ்பா 2 இந்தி ரசிகர்களை ஈர்த்தது போல கேம் சேஞ்சர் படமும் ஈர்க்க வேண்டும். அப்போதுதான் 1000 கோடி வசூல் சாத்தியமாகும் இல்லை என்றால் தேவரா கதிதான் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











