தலைவருக்கு சொல்லும்போது ஒரு எனர்ஜி வந்துடுது.. விஜய் உடன் கனெக்ட் ஆகல - கார்த்திக் சுப்புராஜ்!
சென்னை: ஜிகர்தண்டா படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் பாராட்டி கார்த்திக் சுப்புராஜிடம் கதைக் கேட்டு பேட்ட படத்தில் நடித்தார். ஆனால், ஜிகர்தண்டா பார்த்து பாராட்டிய விஜய்யுடன் என்னால் படம் பண்ண முடியவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவுக்கு ஏகப்பட்ட நல்ல இயக்குநர்கள் கிடைத்தனர். அதில், முக்கியமானவர் தான் கார்த்திக் சுப்புராஜ். பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

விஜய் சேதுபதி எனும் நடிகனையும் கோலிவுட்டுக்கு வரப்பிரசாதமாக கமர்ஷியல் ஹீரோவாக மாற்றிக் கொடுத்தவரும் கார்த்திக் சுப்புராஜ் தான். வரும் மே 1ம் தேதி சூர்யாவை வைத்து அவர் இயக்கியுள்ள ரெட்ரோ திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாக காத்திருக்கிறது. இந்நிலையில், விஜய்யுடன் ஏன் படம் பண்ணவில்லை என்கிற கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் அளித்துள்ள பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
லியோ பட பூஜையில்: லியோ படத்தின் பூஜைக்கே கார்த்திக் சுப்புராஜ் கலந்துக் கொண்ட காட்சிகளை ரசிகர்கள் பார்த்தனர். கோட் படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் தான் விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியாக அந்த வாய்ப்பு எச். வினோத் வசம் சென்று அவர் ஜனநாயகன் படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஜய்க்கு பல முறை தான் கதை சொல்லியிருக்கிறேன் என்றும் அது வொர்க்கவுட் ஆகவில்லை என்றும் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தலைவருக்கு சொல்லும்போது: ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா நடித்த கதாபாத்திரத்துக்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த கதையையும் கதாபாத்திரம் குறித்தும் தன்னிடம் சொல்லியிருந்தால், தானே நடித்திருப்பேன் என்றும் கூறினார். ரஜினிகாந்துக்காக பேட்ட படத்தின் கதையை உருவாக்கி சொன்னதும் அவர் ஓகே சொல்லி நடித்துவிட்டார். தலைவருக்கு சொல்லும் போது அது எப்படியோ எனர்ஜி வந்து சொல்லி ஓகே பண்ணிட்டேன். ஆனால், விஜய் சாருக்கு சொல்லும் போது அந்த மேஜிக் நடக்கவில்லை.

விஜய் சாரே ஃபீல் பண்ணாரு: நான் பெரிய நரேட்டர் கிடையாது. ஜிகர்தண்டா படம் பார்த்துட்டு விஜய் சார் பாராட்டினார். நமக்கும் ஒரு கதை பண்ணுங்கன்னு சொன்னார். நான் பல தடவை விஜய் சாரை சந்தித்து கதை சொல்லியிருக்கேன். நமக்கு மட்டும் ஏன் கதை செட்டே ஆகமாட்டுது என்று விஜய் சாரே ஃபீல் பண்ணி சொல்லியிருக்கிறார். தளபதி 69 படத்துக்கும் நான் கதை சொன்னேன். ஆனால், எங்களுக்குள் ஏதோ கனெக்ட் ஆகவில்லை என கார்த்திக் சுப்புராஜ் ஓபனாக பேசியுள்ளார்.
மீண்டும் ரஜினியுடன்?: சூர்யாவை வைத்து ரெட்ரோ படத்தை இயக்கி முடித்துள்ள கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் அந்த படத்தை முடித்த பிறகு கார்த்திக் சுப்புராஜுக்குத்தான் கால்ஷீட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











