சிடி கடையில் வேலை.. திருமணங்களில் திருட்டுத்தனமா சாப்பிட்டுருக்கேன்.. கொட்டுக்காளி இயக்குநர் ஓபன்!
சென்னை: சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் இந்த வாரம் ஆகஸ்ட் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், அந்த படத்தின் இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கொட்டுக்காளி படம் குறித்தும் சினிமாவுக்குத் தான் வந்த கதை குறித்தும் கூறியுள்ளார்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் விருது விழாக்களில் வரவேற்பை பெற்றது. ஆனால், அந்த படம் கமர்ஷியலாக வெற்றிப் பெறவில்லை.

இந்நிலையில், சூரி மற்றும் அன்னா பென்னை வைத்து அடுத்ததாக அவர் இயக்கியுள்ள கொட்டுக்காளி திரைப்படமும் சர்வதேச விருது விழாக்களில் திரையிடப்பட்ட நிலையில், திரையரங்குகளில் எப்படி பெர்ஃபார்ம் பண்ணும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அப்பா இல்லை: சிறு வயதிலேயே அப்பா தவறிட்டாரு, அம்மாவால் அதன் பிறகு என்னை படிக்க வைக்க முடியவில்லை. 4வது மட்டுமே படித்திருக்கிறேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி சிலர் கேமரா வைத்து படம் எடுப்பதை சிறு வயதில் பார்த்த போது எப்படியாவது சினிமாவில் சேர்ந்து விட வேண்டும் என நினைத்து சென்னைக்கு வந்தேன்.
சிடி கடையில் வேலை: சென்னையில் லாரிக்கு க்ரீஸ் அடிக்கும் வேலையை செய்திருக்கிறேன். அதன் பின்னர், சினிமாவில் சேர வேண்டும் என்றால் இயக்குநர்கள் அதிகம் சிடி வாங்க வருவார்கள் என நினைத்து சிடி கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். சிட்டி சென்டரில் இருந்த சிடி கடைக்கு நடிகர்கள் வந்தாலும், இயக்குநர்கள் அதிகம் வரவில்லை. அதனால், ஓனரிடம் விருகம்பாக்கத்தில் உள்ள சிடி கடைக்கு மாற்றச் சொல்லிக் கேட்டேன். அங்கே தான் பல இயக்குநர்களை சந்திக்க ஆரம்பித்தேன். சிடி வாங்க வருபவர்களிடம் எல்லாம் ரெஸ்யூம் கொடுப்பேன். படங்களையும் பார்க்க ஆரம்பித்தேன். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களை தாண்டி உலக சினிமாவையும் சிடி கடையில் வேலை செய்யும் போது தான் பார்க்க ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு 3 படங்களுக்கு மேல் ஓடும் என்றார். சில நேரங்களில் என் பாதையே மாறி போயிருக்கும் சூழ்நிலைகளும் உருவாகின. தவறான பாதைக்கு சென்று அழிந்து போயிருப்பேன். ஆனால், சினிமா மீது இருந்த ஆர்வம் மற்றும் ஏதோ ஒரு நம்பிக்கை என்னை இங்கே அழைத்து வந்து விட்டது என்றார்.

திருமண மண்டபங்களில் திருட்டுத்தனமாக: அதன் பின்னர் மஞ்சப்பை படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். சினிமாவை கற்றுக் கொண்டாலும், வறுமையில் வேலையில்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலம். சென்னையில் உள்ள திருமண மண்டபங்களில் ஆரம்பத்தில் கூச்சப்பட்டுக் கொண்டே சென்று சாப்பிட ஆரம்பித்தேன். அதன் பின்னர், மணமக்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு சொந்தக்காரங்க போலவே சாப்பிட ஆரம்பித்தேன். ஒரு சில இடங்களில் சிக்கிக் கொண்டு சாப்பிடாமல், அப்படியே வெளியே வந்த அனுபவங்களும் உண்டு எனக் கூறியுள்ளார்.
கொட்டுக்காளி ரிலீஸ்: 'சப் வே' எனும் குறும்படத்தின் மூலமாகத்தான் கூழாங்கல் படத்திற்கு தயாரிப்பாளர்கள் கிடைத்தனர். அந்த படம் எனக்கு கொடுத்த அங்கீகாரத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென்னை வைத்து கொட்டுக்காளி படத்தை இயக்கியிருக்கிறேன். இந்த படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தமிழ் சினிமா ரசிகர்கள் உலக தரம் வாய்ந்த படங்களை பார்த்து வருகின்றனர். கண்டிப்பாக எங்களுடைய கொட்டுக்காளி படமும் அவர்களுக்கு புரியும் என்றும் பார்ப்பார்கள் என்றும் நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











