Exclusive : ரீலில் மட்டுமல்ல நிஜத்திலும் அது நான் தான்: ஷாக் தரும் கிரிஷ்ணம் பட நாயகன் அக்ஷய்!
கிரிஷ்ணம் படக் கதை என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் தான் என நடிகர் அக்ஷய் கிருஷ்ணன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: கிரிஷ்ணம் படக்கதை தன் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் தான் என அப்படத்தில் நாயகனாக நடித்த அக்ஷய் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஒருவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தான் 'கிரிஷ்ணம்'. பிஎன் பலராமன் தயாரித்துள்ள இப்படத்தில், அக்ஷய் கிருஷ்ணன், ஐஸ்வர்யா உல்லாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தினேஷ் பாபு இப்படத்தை இயக்கியுள்ளார். வரும் 15ம் தேதி இப்படம் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் நாயகன் அக்ஷய் கிருஷ்ணனை ஒன்இந்தியாவிற்காக சந்தித்தேன். அப்போது பட அனுபவங்கள் பற்றி அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டதாவது:

உண்மைச் சம்பவம்:
என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் தான் கிரிஷ்ணம் படக்கதை. 19 வயது வரை மற்ற இளைஞர்கள் போல் ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தேன். கல்லூரிக்குச் சென்றேன். காதலித்தேன். வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் எல்லாம் திடீரென மாறியது. அரிய நோயால் பாதிக்கப்பட்டேன். உயிர் பிழைக்க ஒரு சதவீதம் தான் வாய்ப்பு என டாக்டர்கள் சொல்லி விட்டனர். ஆனால், கடவுள் அருளால் அதிலிருந்து தப்பி வந்தேன்.

ஜாலியான படம்:
அந்த இடைப்பட்ட காலத்தில் என் படிப்பு வீணானது. வாழ்க்கையில் நிறைய இழப்புகளைச் சந்தித்தேன். ஆனால், இப்போது வாழ்க்கை மீண்டும் மாறி விட்டது. இப்படத்திலும் முதல்பாதி ஜாலியாக ரசிக்கும்படி இருக்கும். இரண்டாம் பாதி அப்பா, அம்மா, மகன் பாசத்தைச் சொல்லும் வகையில் காட்சிகள் இருக்கும்.

வாழ்க்கைப் படம்:
உண்மைக்கதை, குருவாயூரப்பன் அருள் எனச் சொல்வதால் இப்படம் சாமி படமா என பலர் கேட்கின்றனர். நிச்சயமாக இல்லை. இப்படத்தில் அதுவும் ஒரு பகுதியாக வருகிறது அவ்வளவு தான். தமிழில் ஹிப் ஆப் ஆதி தன் வாழ்க்கையை படமாக எடுத்தார். அதுபோல என் வாழ்க்கையும் இங்கு படமாக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் அது உங்களை ரசிக்க வைக்கும்.

உண்மை தெரிந்தது:
நான் நிஜமாகவே சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கும் போது, என் முன்னால் என் பெற்றோர் எப்போதும் சிரித்த முகமாகத் தான் இருப்பர். அது தான் நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால், இந்தப் படம் படமாக்கப்பட்ட போது தான், என்னைப் பார்த்துச் சென்ற பிறகு மருத்துவமனை அறைக்கு வெளியே அவர்கள் எப்படியெல்லாம் அழுதிருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. அது மிகவும் வேதனையாக இருந்தது.
நம்பிக்கை:
தொடர்ந்து படங்களில் நடிப்பேனா எனத் தெரியவில்லை. சுற்றுலா பற்றிய படிப்பு படித்து வருகிறேன். இதுவே ஜாலியாக ஊர் சுற்றும் படிப்பாகத் தான் இருக்கிறது. என் அண்ணன் தயாரிப்பாளராக இருக்கிறார். அவர் தொடர்ந்து படங்கள் இயக்குவார். ஆனால் என்னை வைத்து இயக்குவாரா என்பது பற்றி தெரியவில்லை. நிச்சயம் கிரிஷ்ணம் நீங்கள் ரசிக்கும்படியான படமாக இருக்கும்" என நம்பிக்கையுடன் பேசுகிறார் அக்ஷய்.


Click it and Unblock the Notifications











