Exclusive - இளையராஜாவின் அந்த வார்த்தை.. வாடிவாசல் கண்டிப்பா வரும்.. பாடலாசிரியர் மணிமாறன் பிரத்யேக பேட்டி
சென்னை: தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய பாடலாசிரியர்களில் ஒருவராக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார் கருமாத்தூர் மணிமாறன். நாட்டுப்புற பாணியில் தனது பாடல்களில் வரிகளை வைக்கும் அவர் சமீபத்தில் தாய் கிழவி படத்தில் இடம்பெற்ற பாடலை எழுதி மேலும் பிரபலமடைந்திருக்கிறார்.இந்நிலையில் அவரிடம் ஃபில்மிபீட் தமிழ் சார்பாக பேட்டி எடுக்கப்பட்டது. அதனை இதில் பார்க்கலாம்.
தமிழர்களின் வாழ்வியல் பாடல்களோடு பின்னி பிணைந்தது. அதனால்தான் நல்லதோ, கெட்டதோ அங்கே தவறாமல் பாடல்கள் இருக்கும். இலக்கியங்கள் தொடங்கி சினிமா வரை அத்தனையிலும் பாடல்கள் பிரதான இடத்தை பிடித்திருக்கின்றன. ஆனால் சமீப காலமாக தமிழ் சினிமாவில் வரும் பாடல்களில் வரிகள் இருக்கின்றனவா அல்லது சொற்கள் மட்டும் இருக்கிறதா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுவடைந்துவருகிறது. அப்படிப்பட்ட காலகட்டத்தில் கார்த்திக் நேத்தா, வேல்முருகன், உமா தேவி உள்ளிட்டோர் தற்போதைய காலகட்டத்தில் நம்பிக்கை தரும் பாடலாசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் இணைந்திருக்கிறார் கருமாத்தூர் மணிமாறன்.
யார் இந்த மணிமாறன்?: மதுரை மாவட்டம் கருமாத்தூரை சேர்ந்தவர் மணிமாறன். பள்ளி படிப்பை தாண்டாத அவருக்கு சிறு வயதிலிருந்தே கலை மீது தீராத ஆர்வம். அதன் காரணமாக திசைகள் என்ற கலைக்குழுவில் இணைந்து மேடைகளில் தோன்றி பாடல்கள் பாடுவதை வழக்கமாக வைத்திருந்த அவருக்கு; திறமையின் காரணமாக சினிமா கதவு திறந்தது. முதல் பாடலான கஞ்சா பூவு கண்ணால பட்டித்தொட்டியெங்கும் ஒலிக்க சமீபத்தில் வந்த தாய் கிழவி பாடலும் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது.

மணிமாறன் பேட்டி: சூழல் இப்படி இருக்க அவரிடம் ஃபில்மிபீட் தமிழ் சார்பில் பேட்டி எடுக்கப்பட்டது. அந்தப் பேட்டியில் அவர், "நான் ஒரு தெரு நாடக கலைஞன். கலை மீது ஆர்வம் அதிகம் இருந்ததால் பள்ளி படிப்பு ஏறவில்லை. எனவே படிப்பு ஒத்து வராது என்பதால் அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். பிறகு திசைகள் குழுவில் இணைந்து நடிக்க ஆரம்பித்தேன். இடையில் இடையில் வரும் கிராமிய பாடல்களை நானே பாட ஆரம்பித்துவிட்டேன்.
சினிமாவுக்குள் வந்தது எப்படி?: எப்படியாவது சினிமாவுக்குள் சென்றுவிட வேண்டும் என்று இருந்தேன். திசைகள் குழுவினரான நாங்கள் மூன்று நாட்கள் 100 மணி நேரம் ஃபெர்ஃபார்ம் செய்து கின்னஸ் சாதனை செய்தோம். அது நடந்தது 1999ஆம் ஆண்டில். பிறகு சினிமாவில் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டிருந்தேன். மருது படத்தின் ஆடிஷனில் கலந்துகொண்டேன். இயக்குநரை பார்த்தபோது உனக்கு என்ன தெரியும் என்று கேட்டார். நடிப்பேன், பாடுவேன் என சொன்னேன். உடனே அவர் பாடு என்று சொன்னார். நான் கிராமிய பாடலை பாடினேன். அவருக்கு பிடித்துவிட்டது. ஆனால் அந்தப் பாடலை அதில் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது.
கஞ்சா பூ கண்ணால?: அடுத்தடுத்து அவர் எனது பாடலை பயன்படுத்த முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. பிறகு ஐந்து வருடங்கள் கழித்து விருமன் படத்தில் கஞ்சா பூ கண்ணால பாடலை பயன்படுத்தினார்கள். பாடலை கேட்டுவிட்டு கார்த்தி என்னிடம், 'அண்ணா பாட்டை சூப்பரா எழுதிருக்கீங்க. கேட்டதும் யார் எழுதினதுதான் என்றுதான் கேட்டேன்' என சொன்னார். கஞ்சா பூ கண்ணாலே என்ற வரிக்காக எனக்கு எதிர்ப்பும் வந்தது. இது கற்பனைக்காக எழுதியதுதான் விற்பனைக்காக எழுதவில்லை என சொன்னேன்.
யுவன் சொன்னது?: அதற்கு பிறகு யுவனை போய் சந்தித்தேன். நிறைய வாய்ப்புகள் தருகிறேன் என உறுதி தந்தார். தொடர்ச்சியாக சினிமாவில் முயற்சி செய்துகொண்டிருந்த சமயத்தில்தான் கஞ்சா பூ கண்ணாலே பாடலை கேட்டுவிட்டு சீமான் என்னை அழைத்தார். அவர் ஏற்கனவே திசைகள் கலைக்குழுவுக்கு வந்திருக்கிறார். நீண்ட யோசனைக்கு பிறகு என்னை அடையாளம் கண்டுகொண்டார். என்னிடம் பேசிக்கொண்டிருந்தவர் உனக்கு என்ன இலக்கு என்று கேட்டார். நான் உடனே இளையராஜா இசையில் பாடல் எழுத வேண்டும் என்று சொன்னேன்.

இளையராஜா சொன்னது: அப்படியா வா என்று அழைத்துக்கொண்டு வெற்றிமாறனிடம் சென்றார்.அந்த சமயத்தில் விடுதலை 2 போய்க்கொண்டிருந்தது. வெற்றிமாறனும் அந்தப் பாடலை கேட்டிருக்கிறார். நீங்கள்தானா அது என்று சொல்லி இளையராஜாவிடம் அழைத்து சென்றார். ராஜாவை பார்த்ததும் கை, கால்கள் எல்லாம் நடுங்கிவிட்டன. போனவுடன், எந்த ஊரு என்று கேட்டார். சொன்னேன். அவர் ட்யூன் கொடுத்ததும் இரண்டு, மூன்று மணி நேரங்கள் விவாதம் போய்க்கொண்டிருந்தது. நான் எழுதி அவரிடம் கொடுத்தேன். படித்து பார்த்துவிட்டு உள்ளே சென்றவர் திரும்பி பார்த்து எங்கே அவன் என்று கேட்டார். நான் தலையை காண்பித்தேன். பொழச்ச (பாடல் வரிகளை பாராட்டுகிறார்) என்று சொல்லிவிட்டு ரெக்கார்டிங்குக்கு சென்றார். ஆனாலும் சில காரணங்களால் அதனையும் அந்தப் படத்தில் பயன்படுத்த முடியவில்லை. இருந்தாலும் இளையராஜாவிடமிருந்து அந்த வார்த்தையை கேட்டதே பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
வாடிவாசல் கண்டிப்பாக வரும்: அதனையடுத்து மாஸ்க் படத்தில் எழுதிய பாடலும் ஹிட்டடித்தது. பிறகு சிவக்குமார் முருகேசன் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம் தாய் கிழவி பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் அந்தப் படத்தை வேறு தயாரிப்பு நிறுவனம் செய்வதாக இருந்தது. எப்படியோ எஸ்கே புரொடக்ஷன்ஸ் உள்ளே வந்தார்கள். அந்த நிறுவனம் பெரிய நிறுவனம். அதுவும் எனக்கு பெரிய பதற்றத்தை கொடுத்தது. இப்போது பாடல் அனைவராலும் கொண்டாடப்படுவது சந்தோஷமாக இருக்கிறது.
நிறைய பேர் பாராட்டுகிறார்கள். வாடிவாசல் படத்துக்காக ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். அதை படித்துவிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு என்னை அவரது அறைக்குள் அழைத்து பாராட்டியும், வாழ்த்தியும் அனுப்பினார் என்றவரிடம், 'வாடிவாசல் படம் ட்ராப்பாகிவிட்டதாக சொல்கிறார்களே' என்று கேள்வியை முன்வைத்தோம். அதற்கு மணிமாறன், கண்டிப்பாக இல்லை. நிச்சயம் அந்தப் படம் வரும். அதில் நான் எழுதியிருக்கும் பாடலும் நல்ல வரவேற்பை பெறும்" என்று முடித்தார். இன்னும் வளர் ஃபில்மிபீட் தமிழ் சார்பாக வாழ்த்துகள் மணிமாறன்.


Click it and Unblock the Notifications











