Mother’s Day: 100 சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா.. பிரபலங்களின் அன்னையர் தின வாழ்த்து
சென்னை: நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா.. கோடி கோடியாய் கொடுத்தாலும்...நீ தந்த அன்பு கிடைத்திடுமா... என்ற பாடலை யாருக்குத்தான் பிடிக்காது. அம்மா... ஒரு உன்னதமான சொல்... அது ஒரு உணர்வு, ஒரு அரவணைப்பு, ஒரு பாதுகாப்பு... இப்படி அனைத்து அன்புக்கும் சொந்தமானவள் தான் அம்மா.
அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் இன்று கொண்டாடப்படுகிறது. உலகின் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அரசியல் கட்சி பிரபலங்கள் முதல், திரைத்துறை பிரபலங்கள் வரை அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மோகன்லால்: மலையாள சினிமாவில் முக்கியமான நடிகரான மோகன்லால், அன்னையர் தினத்தை முன்னிட்டு, தனது தாய் சாந்தகுமாரியின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த போட்டோவில் அம்மாவிற்கு பின்னால் மோகன்லால் குட்டி பையனாக நின்று கொண்டு இருக்கிறார். இந்த அரிதான போட்டோ இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.
அல்லு அர்ஜூன்: நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். முதல் புகைப்படத்தில், தனது அம்மாவை இறுக்கமாக கட்டிப்பிடித்து, சிரித்துக் கொண்டிருக்கிறார். இரண்டாவது படத்தில், தனது மனைவி சினேகா ரெட்டியுடன் தனது அம்மா இருக்கும் படத்தையும் பகிர்ந்து, அனைத்து தாய் மார்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தின் மூலம் அல்லு அர்ஜூன் தனது மனைவியை தாயாக மதிக்கிறார் என்பது தெரிகிறது.

அன்னையர் தின வாழ்த்து: நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான், ராதிகாவை கட்டிப்பிடித்தபடி இருக்கும் போட்டோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தானும் ஒரு தாய் என்றும், தாய்மை மிகவும் மென்மையானது என பதிவிட்டு, தனது குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். அதே போல நடிகை சாக்ஷி அகர்வால் தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு "Every version of me has needed you" என பதிவிட்டுள்ளார்.
நான் தான் நீ: நடிகை இந்திரஜா, தனது அம்மா மற்றும் மகன் நட்சத்திரனுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், எனையே பிழிந்து, உனை நான் எடுத்தேன், நான் தான் நீ வேறில்லை என பதிவிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் அப்பாவின் போட்டோவை பகிர்ந்து அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்து கூறியுள்ளார். இவர், தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம், ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு காரணம் இவர்களது காதல் மற்றும் திருமணம் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென நடந்ததால் தான்.
அன்னையர் தினம் என்பது வருடத்தில் ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படும் தினம் இல்லை. ஒவ்வொரு நாளும் அன்னையை மதித்து போற்றி கொண்டாட வேண்டிய நாள். நம்மைப் பெற்றெடுத்த அன்னையை மனதார வாழ்த்துவோம். அவர்களின் அன்புக்கு நன்றி செலுத்துவோம். ஒவ்வொரு நாளும் அன்னையின் அன்பை உணர்ந்து அவர்களை அன்பால் மகிழ்விப்பதே, ஒவ்வொருவரின் கடமையாகும்.


Click it and Unblock the Notifications











