நடிகையர் திலகத்தில் சிவாஜி காட்சிகள் மிஸ்ஸிங் ஏன்?: இயக்குநர் நாக் அஸ்வின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
நடிகர் சிவாஜி கணேசனுக்கு இணையான முகவெட்டு கொண்ட நடிகர் கிடைக்கவில்லை என இயக்குநர் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமான நடிகர் கிடைக்காததாலேயே, அவரது படங்கள் குறித்த காட்சிகளை நடிகையர் திலகம் படத்தில் வைக்க இயலவில்லை என அப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு, நாக் அஸ்வின் இயக்கியுள்ள படம் 'நடிகையர் திலகம்'. இப்படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும், அவருடைய கணவரும், நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் சாவித்திரியின் தமிழ்த் திரைப்படங்களைவிட தெலுங்குப் படங்களைப் பற்றியே அதிகம் காட்சிகள் இடம் பிடித்துள்ளன. அதிலும் குறிப்பாக சாவித்திரி என்றாலே சட்டென நினைவுக்கு வரும் பாசமலர் படம் பற்றிய காட்சிகள் மிகவும் சுருக்கமாக இடம் பிடித்துள்ளது ரசிகர்களை மிகவும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து இயக்குநர் நாக் அஸ்வின் ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
பாசமலர் காட்சிகளை படத்தில் அதிகம் வைக்க வேண்டும் என மிகவும் விரும்பினேன். ஆனால், நடிகர் சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது முகவெட்டு கொண்ட, பொருத்தமான நடிகர் கிடைக்கவில்லை. எனவே, தான் அப்படத்தைப் பற்றி நடிகையர் திலகத்தில் அதிகம் பேச இயலவில்லை.
அதோடு, ஏற்கனவே படத்தின் நீளமும் அதிகமாக இருந்தது. அதனால், இன்னும் கூடுதலாகக் காட்சிகளைச் சேர்க்க இயலவில்லை" எனத் தெரிவித்துள்ளார். இருந்தாலும் சாவித்திரி என்றால் பாச மலர்.. பாச மலர் என்றால் சிவாஜி.. அது இல்லாம எப்படி பாஸ்?


Click it and Unblock the Notifications











