பாரதிராஜாவிடம் பெரிய பொய் சொல்லி மாட்டிக்கிட்டேன்.. ’நிழல்கள்’ ரவி சொன்ன சூப்பரான மேட்டர்!
சென்னை: நிழல்கள் படத்திற்கு முன்பாக தான் நடித்த படம் குறித்தும் பாரதிராஜாவிடம் பெரிய பொய் சொல்லிவிட்டு நிழல்கள் படத்தில் நடித்த சுவாரசியமான விஷயம் குறித்தும் நிழல்கள் ரவி தனது புதிய பேட்டியில் ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படந்தான் நிழல்கள் ரவியின் முதல் படம். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் ஒரு படத்தில் நடித்துள்ளார். ஆனால், அவர் நடித்த முதல் படம் முழுதாக உருவாகாமல் பாதியிலேயே நின்று போய் விட்டது தான் சோகம்.

வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் சந்தானம் மற்றும் மறைந்த லொள்ளு சபா சேசுவுடன் நிழல்கள் ரவியின் காமெடி காட்சிகள் வேற லெவலில் ரசிகர்களை சிரிக்க வைத்தது. தனது பேட்டியில் கூட பாண்டு மாதிரியும் பாரதிராஜா மாதிரியும் மிமிக்ரி செய்து அவர் பேசுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பது போல தோன்றுகிறது.
முதல் படம் வெளியாகவில்லை: 1957-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கோவையில் பிறந்தவர் நிழல்கள் ரவி. கோயம்புத்தூரில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் சென்னைக்கு சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசையுடன் வந்தார். ஆரம்பத்தில் இயக்குநர் டிஎன் பாலு இயக்கத்தில் தான் அறிமுகமாக இருந்தார் ரவிசந்திரன். கமல்ஹாசனை வைத்து சட்டம் என் கையில், சங்கர்லால் உள்ளிட்ட படங்களை இயக்கிய டிஎன் பாலு 1981 ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார். அந்த படத்தில் நடித்து வந்த ரவிச்சந்திரன் முதல் படத்தின் இயக்குநர் இறந்துவிட்ட நிலையில், அடுத்ததாக களிமண்ணையும் நடிக்க வைப்பேன் என விளம்பரப்படுத்திய பாரதிராஜாவை போய் சந்திக்கலாம், நாமும் ஒரு களிமண் தானே என நினைத்து அவரது அலுவலகத்துக்கு சென்றேன் என்றார்.
மனோபாலா செய்த உதவி: பாரதிராஜா படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி சென்றபோது அங்கே அவரது உதவி இயக்குநராக இருந்த மனோபாலாவிடம் நட்பாகிவிட்டேன். பாரதிராஜா சில போட்டோக்களை எடுத்து வர சொன்னார். அதற்கு எனக்கு உதவி செய்ததை மனோபாலா தான். அவனது அறையிலே அழைத்துச் சென்று அந்தப் படத்திற்கு என்ன கெட்டப் தேவையோ அதேபோல உடைகளை அணிவித்து 35 போட்டோக்கள் விதவிதமாக எடுத்து மத்தியானமே சுடச்சுட கையில் கொடுத்து விட்டான். அதை எடுத்துக்கொண்டு உடனடியாக பாரதிராஜாவை போய் சந்தித்தேன். அந்த புகைப்படங்களை பார்த்ததும், தான் நினைத்த கதாபாத்திரம் அப்படியே இருக்கிறது என நினைத்தவர் முகத்தில் சிரிப்பை பார்த்தேன். அந்த படத்தில் நடிக்க அப்படித்தான் வாய்ப்பு கிடைத்தது.
பெரிய பொய் சொல்லிவிட்டேன்: இதற்கு முன் சினிமாவில் நடித்து இருக்கிறாயா என பாரதிராஜா கேட்டார். இல்லவே இல்லை இதுதான் முதல் முறை என சொன்னதும் நிழல்கள் படத்தில் என்னை அறிமுகம் செய்தார். ஏற்கனவே நடித்த படத்தை பற்றி சொன்னால், கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும் என்கிற பயத்தில் அந்தப் பெரிய பொய்யை சொல்லி விட்டேன். "பூங்கதவே தாழ் திறவாய்" பாடல் படப்பிடிப்பின் போது தண்ணியில இருந்து பூவை எடுத்து வந்து தலையை ஆட்டினேன்.. கேமரால இப்படி பார்த்துட்டு, என்னய்யா எக்ஸ்பிரஷன் சூப்பர்யான்னு பாராட்டி முடிப்பதற்குள் இவன் ஏற்கனவே நடிச்சிருக்கான்னு ஒருத்தன் போட்டுக் கொடுத்துட்டான். அதனால், பாரதிராஜா டென்ஷன் ஆகிட்டார். அதன் பின்னர் அவரிடம் மன்னிப்புக் கேட்டு நடந்ததை சொல்லி மீண்டும் நடித்தேன் என நிழல்கள் படத்தில் அறிமுகம் ஆனது குறித்து நிழல்கள் ரவி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











