ஜெயித்துவிட்டுத்தான் சாவேன்.. மனதில் அவ்வளவு வலி இருக்கு.. பருத்தி வீரன் சரவணன் பேட்டி!
சென்னை: அமீர் இயக்கிய பருத்தி வீரன் படத்தில் சித்தப்பு கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் தான் பருத்திவீரன் சரவணன். இந்த படத்திற்கு முன்வே வைதேஹி வந்தாச்சு, பொண்டாட்டி ராஜ்யம் என பல படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தாலும். இவருக்கு தனி ஒரு அடையாளத்தை தந்தது பருத்திவீரன் படம் தான். தற்போது குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் சரவணன் நடித்த "சட்டமும் நீதியும்" என்ற வெப் தொடரில் லீட் ரோலில் நடித்துள்ளார்.
7 எபிசோடுகள் கொண்ட இந்த வெப்தொடர் ஜீ 5 தளத்தில் கடந்த மாதம் வெளியானது. இதில் பருத்திவீரன் சரவணன், சுந்தரமூர்த்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
ஒரு சாமானியனுக்காக மற்றொரு சாமானியன் தான் வர வேண்டும் என்கிற யதார்த்த கதையுடன் பொதுநல வழக்கறிஞராக சரவணன் நடித்துள்ளார். இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கிய இந்த தொடர் ZEE5ல் 51 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளதால், தெலுங்கு இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது.

பருத்திவீரன் சரவணன்: அண்மையில் இவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல விஷயத்தை பகிர்ந்து கொண்டார். அதில், நான் இயக்குனர் பாக்யராஜ் போல கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் செய்து நானே நடிக்க வேண்டும் என்பதற்காக தான் சென்னைக்கு வந்தேன். அப்போது தான் நடிகை லட்சுமி அவர்கள் உன்னுடைய கண்ணும், நிறமும் அழகாக இருக்கிறது. நீ பேனாவை மூடி வைத்துவிட்டு, நடிகராக மாறு, ஹீரோவாக மாறினால் நிறைய சம்பாதிக்க முடியும். பேனாவில் எழுதி அவ்வளவாக சம்பாதிக்க முடியாது என்றார். அதற்காக இயக்குனராக ஜெயிக்க முடியாது என்று சொல்லவில்லை நீ ஹீரோவாகிவிட்டால், அது தானாகவே நடக்கும் என்றார். லட்சுமி அம்மா அவர்கள் எனக்கு அப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்கள், அவர்கள் சொல்லியதை வேதவாக்காக நினைத்துக் கொண்டுதான் நான் சினிமாவில் நடிகராக மாறினேன்.
ஜெயித்துவிட்டுத்தான் சாவேன்: ஒரு சில படங்களில் நடித்த பிறகு இயக்குனராக ஒரு திரைப்படத்தை எடுத்தேன். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை. மறுபடியும் நான் ஒரு படத்தை நிச்சயமாக இயக்குவேன். ஜெயித்து விட்டு தான் சாகவேண்டும் என்றால் வைராக்யம் இருக்கிறது. தோற்று விட்டு, சாகக்கூடாது என்பதற்காக இத்தனை வருஷமாக என் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறேன். எதில், ஜெயிக்க வேண்டும் என்றால் முதலில் நடிக்க வேண்டும், அதன் பிறகு இயக்க வேண்டும், அதன் பிறகு தயாரிக்க வேண்டும். எதிலெல்லாம் நான் தோற்று துவண்டு போனேனோ அதிலெல்லாம் நான் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி என் மனதிற்குள் இருக்கிறது.
ஜெயித்து விட்டு தான் சாகவேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. அதற்கு இறைவனும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார். ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைவன் அதற்கான வாய்ப்பு எனக்கு கொடுக்கிறார். நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். தற்போது நான் ஒரு நடிகராக வளர்ந்து விட்டேன். அடுத்து ஹீரோவாகத்தான் நடிப்பீர்களா என்றெல்லாம் இல்லை. எனக்கு யார் நல்ல கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் நான் நிச்சயமாக நடிப்பேன் என்று பருத்திவீரன் சரவணன் பேட்டியில் பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











