என்னை ஓரம்கட்டுவது நியாயமா?-ப்ரியாமணி ஆவேசம்

கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமான ப்ரியாமணிக்கு, தொடர்ந்து, அது ஒரு கனாக்காலம், பருத்தி வீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என வாய்ப்புகள் கிடைத்தன.
பருத்தி வீரன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது. ஆனால் அந்தப் படத்தின் இயக்குநர் அமீருடன் மோதலில் ஈடுபட்டார்.
கடந்த ஒரு வருடமாக தமிழில் புதிய படங்களில் கதாநாயகி வாய்ப்பு அவருக்கு வரவில்லை. ராவணன் படத்தில் மட்டும் சிறு வேடத்தில் தலைகாட்டி விட்டுப் போனார். இப்போது தமிழ் சினிமாவில் அவருக்குப் படங்களே இல்லை.
இதுபற்றி பிரியாமணி அளித்த பேட்டி வருமாறு:
பருத்தி வீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளியிட்டேன். அதற்காக தேசிய விருதும் கிடைத்தது. ஆனாலும் எனக்கு தமிழ்ப்பட வாய்ப்புகள் வரவில்லை.
தமிழ் பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என்ன நினைத்து இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று புரியவில்லை. நான் நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளேன். ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வருவதில்லை.
மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. ராவணன் படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. மலையாளத்தில் வெளியான 'திரக்கதா' படத்தில் எனக்கு விருது கிடைத்திருக்க வேண்டும். சொந்த குரலில் டப்பிங் பேசாததால் அந்த வாய்ப்பை இழந்தேன்.
ஏதோ நான் மட்டும்தான் கவர்ச்சியாக நடிப்பது போல பேசுகிறார்கள். எல்லா நடிகைகளுமே இப்போது கவர்ச்சியாகத்தானே நடிக்கிறார்கள்...
நான் ஒருத்தி மட்டும்தானா பிகினி உடையில் நடித்திருக்கிறேன்? தெலுங்கில் துரோணா படத்தில் ஒரு கனவு காட்சியில்தான் அப்படி நடித்து இருக்கிறேன். எனது உடல் அமைப்புக்கு கவர்ச்சி உடை அணிவது பொருத்தமாக இருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை.
நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சியில் நீச்சல் உடையைத்தான் அணிய வேண்டும். சேலை உடுத்திக் கொண்டா குளிப்பார்கள்...?" என்றார்.


Click it and Unblock the Notifications











