காக்க காக்க 90%.. அதையும் தாண்டி ஒரு படம் .. கலைப்புலி எஸ்.தாணு ஓப்பன் டாக்
சென்னை: தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், இசை என பன்முகத்திறமை கொண்டவர் கலைப்புலி எஸ்.தாணு. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் படங்களை வைத்து புது இலக்கணம் படைத்தவர். இதுவரை யாரும் எதிர்பாராத வகையில் இவரது படங்களுக்கான விளம்பரக்களை உருவாக்கி இந்திய அளவில் பெயர் பெற்றிருக்கிறார். தமிழ் சினிமாவில் இவருக்கு தெரியாத துறையே இல்லை. தற்போது சச்சின் படத்தின் ரீ ரிலீஸை ரசிகர்கள் கொண்டாடுவதற்கு இவர் முக்கிய காரணமாக இருக்கிறார். இந்நிலையில், தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்திருக்கும் இவர் புதுமுக இயக்குநர்களையும் வியக்க வைத்துள்ளார்.
விஜய், ஜெனிலியா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் உருவான சச்சின் படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை கொண்டாடும் வகையில் நேற்று இப்படம் தமிழகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இப்படத்தை இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார். விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே படங்களின் வரிசையில சச்சின் படமும் இடம்பிடித்திருக்கிறது. ரசிகர்களுக்கு பிடித்த படமாகவும், காதல் படமாகவும் இருப்பதால் இப்படத்தை ரசிகர்கள் மீண்டும் திரையரங்கில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தை ரீ ரிலீஸ் செய்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இப்படம் குறித்த பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

விஜய்யை பாதிக்காத வசனம்: பிரபல யூடியூப் சேனலுக்கு கலைப்புலி எஸ்.தாணு பேட்டியளித்தார். அதில், சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்யும் ஐடியா எப்படி வந்தது என்ற கேள்விக்கு ரசிகர்கள் தான் காரணம் என தெரிவித்தார். மேலும், இப்படத்தில் பல மாற்றங்களை செய்திருக்கிறேன். குறிப்பாக தற்போது தம்பி விஜய் அரசியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவரது அரசியலையும் பாதிக்கும் வகையில் இருந்த வசனத்தையும் எடிட் செய்து ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முதலில் பார்த்த சச்சினுக்கும் தற்போது பார்க்கும் சச்சினுக்கும் கண்டிப்பாக வித்தியாசம் தெரியும். திரையில் பார்க்கும் போது உணர்வீர்கள் என கலைப்புலி எஸ் தாணு தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இப்படம் 2005இல் வெளியாகும் போதே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதைத்தான் மீண்டும் ரசிகர்கள் தந்துள்ளனர் என்றார்.
புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு: தமிழ் சினிமாவில் சீனியர் தயாரிப்பாளராக இருக்கும் நீங்கள் முதல் இயக்குநர்களை எப்படி வாய்ப்பு கொடுப்பீர்கள் என தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த கலைப்புலி, அவர்கள் வேலை செய்யும் விதம் என்னை ஈர்த்துவிடும். எடுத்துக்காட்டாக அரிமா நம்பி ஆனந்த் சங்கர், கணிதன் பட இயக்குநர் சந்தோஷ் இவர்களுக்கு நான்தான் முதல் படம் இயக்கும் வாய்ப்பு கொடுத்தேன். துப்பாக்கி படத்தை தயாரித்த போது இவர்களது ஹார்ட்வொர்க்கை பார்ப்பேன். சினிமா என்பது ஒரு உலகம் இன்று உங்கள் கையில் உலகம் வந்து விட்டது. எடிட்டிங், கன்டினியூட்டி, காஸ்டியூம் என எல்லாத்தையும் சந்தோஷ், ஆனந்த் சங்கரும் கரைத்து குடித்தவர்கள். எனது லிஸ்டில் மிஸ் ஆனது அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தான். அவன் இன்று பெரிய இயக்குநராக இருப்பது மகிழ்ச்சி என கலைப்புலி தெரிவித்தார். மேலும், சச்சின் பட இயக்குநர் ஜான் மகேந்திரன் தமிழுக்கு அறிமுகம் தான் என்றார்.

இயக்குநர்களுக்கும் - தயாரிப்பாளருக்கும் நெரூடல்: ஒரு புதுமுக இயக்குநர் தயாரிப்பாளரிடம் கேட்க தயங்குவது எது என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, அப்படி இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் படம் வெளி வருவதில் சிக்கல் ஏற்படும். புதுமுக இயக்குநர்கள் என்னிடம் ஒரு விசயத்தை சொல்ல தயங்கும் போது என்னடா தம்பி இதுதானா. இதுக்கு ஏன் தயங்குற என்று அங்கேயே அதை சொல்லி முடித்திடுவேன். சில நேரத்தில் புரொடக்சனில் இருப்பவர்களுக்கும் உதவி இயக்குநர்களுக்கும் பிரச்னை வரும். அப்படி வரும்போது நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அதை சரி செய்திடுவேன். இல்லையென்றால் ஒரு கதை நல்ல படமாக வருவதற்கு தடையாக மாறிவிடும். சில படத்தில் ஏண்டா தலையை கொடுத்தோம் என்ற நிலையும் வந்திருக்கிறது. அதை இங்கு வெளிப்படையாக சொல்ல முடியாது. கன்னடத்தில் வெளியான மேக்ஸ் படம் 70 நாள் சூட்டிங் சொல்லி 140 நாள் நடந்தது. வேறு வழியில்லை படத்தை முடித்தாக வேண்டும் புலம்புவதால் ஒன்றும் நடக்க போவதில்லை என வெளிப்படையாக தெரிவித்தார்.
கதை சொல்லும் போதே தெரியும்: ஒரு இயக்குநர் உங்களிடம் கதை சொன்னால் இப்படம் ஹிட் என்று கணிக்க முடியுமா? இதற்கு பதில் அளித்த கலைப்புலி எஸ். தாணு, நிச்சயமாக தெரியும். எனக்கு கதையை ஸ்கிரிப்ட் கொடுத்தா படிக்க மாட்டேன். கதை சொல்ல சொல்லுவேன். அவர்கள் கதை சொல்லும் 1.30 மணி நேரத்தில் இப்படம் ஹிட் ஆகும் என்பதை கணிக்க தெரிந்தால் தான் தயாரிப்பாளராக நீடிக்க முடிகிறது. உதாரணத்திற்கு இயக்குநர் கெளதம் வாசுதேவ் வந்து என்னிடம் காக்க காக்க படத்தின் கதையை சொல்லும் போது 3.30 மணி நேரம் சொன்னார். நான் சொன்னேன் இப்படம் 4.30 மணி நேரம் வரை நீடிக்கும் என்றேன். அவர் அப்படி எல்லாம் இல்லை சார் என கூறினார். ஆனால், படம் எடுத்து முடித்து என்னிடம் 3.45 மணி நேரமாக கொண்டு வந்தார். அதன் பிறகு நான் மணிரத்னம் சார் அலுவலகத்தில் உட்கார்ந்து எடிட்டிங் செய்து ஆண்டனி என்ற எடிட்டர் காக்க காக்க படத்தின் முலம் கிடைத்தான்.

ஹிட் படங்கள் அமைவது எப்படி?: ஒரு படத்தை குறைந்த பட்சம் பாமரனுக்கு புரியும் வகையில் எடுக்க வேண்டும். சென்னையில் படித்தவர்களும் இருக்கிறார்கள் படிக்காதவர்களும் இருக்கின்றனர். எடுத்ததும் ஒரு கல்லறையை காண்பித்து ஹீரோயின் இறந்து போனது போல் காட்டினால் எப்படி புரியும். குறிப்பா ஒருத்தன் படம் பார்க்க 5 மணி நேரம் செலவிடுகிறான். அவனுக்கு புரியும் மொழியில் அரை மணி நேரத்தில் ஆடியன்ஸை தூக்கி சாப்பிடனும், அப்படி இருந்தால் மட்டுமே எந்த படமா இருந்தாலும் வெற்றி பெறும் எனக் கூறினார். 2.30 மணி நேரத்தில் ஒரு படம் இருக்க வேண்டும். மேலும், காக்க காக்க படத்தை தயாரித்த போது புன்னகை பூவே படத்தையும் தயாரித்தேன்.

உண்மையில் சொல்ல போனால் புன்னகை பூவே படம் கவிதை மாதிரி இருந்தது. இப்படம் என் மனதிற்கு பிடித்த படமாக இருந்தது. இப்படத்தை வெங்கட் என்பவர் இயக்கினார். காக்க படத்திற்கு 90% அன்பு வைத்தேன் என்றால் புன்னகை பூவே படத்திற்கு 100% அன்பு காட்டினேன். இப்படம் அன்றைக்கு தமிழ் ரசிகர்களுக்கு புதிய கதை. காக்க காக்க கமர்ஷியல் படம். விஜய் நடித்த காவலன், மலையாள படம் பாடிகார்டு படத்திற்கு முன்பே புன்னகை பூவே வெற்றி பெற்றிருக்க வேண்டும். தோல்விக்கு காரணம் க்ளைமாக்ஸ்தான். இயக்குநரிடம் கூறினேன் கேட்கவில்லை அவர் முடிவை மாற்ற முடியாது என கலைப்புலி எஸ் தாணு தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











