கோடிக்கணக்கில் செலவு பண்ணி மகளுக்கு திருமணம் பண்ணேனா.. விஜய் காதில் சொன்னது என்ன?.. டி. சிவா ஓபன்!
சென்னை: கேப்டன் விஜயகாந்தை வைத்து சொல்வதெல்லாம் உண்மை, பூந்தோட்ட காவல்காரன் என பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் டி. சிவாவின் ஒரே மகள் திருமணம் சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சி திடீரென தேசிய மீடியா அளவுக்கு செய்தியாக பரவ காரணமே நடிகரும் தவெக தலைவருமான விஜய் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது தான்.
தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இறப்புக்கு செல்லாத நடிகர் விஜய் தயாரிப்பாளர் டி. சிவாவின் மகள் திருமணத்துக்கு மட்டும் வந்திருக்காரே என பல பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், நிகழ்ச்சிக்கு விஜய் வந்தது ஏன் என்பது குறித்தும் திருமண வரவேற்பில் விஜய் காதில் என்ன சொன்னார் என்பது குறித்தும் டி. சிவா பேட்டியளித்துள்ளார்.

தயாரிப்பாளர் சிவாவின் தயாரிப்பில் விஜய் ஒரு படத்தில் கூட நடிக்காத நிலையில், திருமணத்தில் அவர் பங்கேற்க இப்படியொரு காரணம் உள்ளதா என ரசிகர்கள் வியந்துள்ளனர்.
ஒரேயொரு மகள்: .அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் தயாரிப்பாளர் டி. சிவா தனக்கு ஒரே ஒரு மகள் தான். அவளுடைய திருமணத்தை கோலாகலமாக நடத்த வேண்டும் என நினைத்தேன். ஆனால், ஆடம்பர செலவுகளை தவிர்த்தேன். சுமார் 1500 பேருக்கு அழைப்பு விடுத்து திருமணத்தை நடத்தினேன். பிரபலங்கள் எல்லாம் வந்த நிலையில், இது பிரமாண்ட திருமணமாகி விட்டது என்றார்.
மாப்பிள்ளை சொந்த ஊரில் திருமணம்: தயாரிப்பாளர் டி. சிவா மற்றும் அருணா தம்பதியரின் மகள் டாக்டர் தக்ஷிணா சிவாவுக்கும் - டாக்டர் சந்தீப் பிரபாகருக்கு கடந்த மாதம் 27ம் தேதி மாப்பிள்ளையின் சொந்த ஊரான தஞ்சையில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா பங்கேற்றனர். பிரபுவின் மனைவி கலந்துக் கொண்டார். சென்னையில் திருமண வரவேற்பை சினிமா பிரபலங்களுக்காக கடந்த வாரம் இறுதியி சிவா ஏற்பாடு செய்திருந்தார். பல சினிமா பிரபலங்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.
விஜய் காதில் சொன்னது: தளபதி விஜய் சினிமா, அரசியல் என படுபிசியாக இருக்கும் நிலையில், அவருக்கு பத்திரிகை வைக்கும் போதே, நீங்க வந்தா நல்லாருக்கும்னு சொன்னேன், "அது என்ன வந்தா.. நான் வரேன்னு" சொன்னார். அவர், எப்போதுமே சொன்னதை செய்யக்கூடியவர். அது சினிமாவில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், ஏதாவது சூழல் காரணமாக வராமல் விட்டு விடுவார் என நினைத்தேன், ஆனால், ஷார்ப்பா வந்துட்டு, எப்படி சொன்ன மாதிரி வந்தேனா" என்று தான் என் காதில் அவர் சொன்னார் என பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் டி. சிவா கூறியுள்ளார். விஜய்யின் கோட் படத்தில் டி. சிவா தூதரக அதிகாரியாக கடைசியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நட்பின் பேரில் தான் விஜய் சிவாவின் மகள் திருமண வரவேற்பில் பங்கேற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











