மாஸ்கோவின் காவிரி
ஒளிப்பதிவாளராக வெற்றி பெற்ற ரவி வர்மன் அடுத்து இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். மாஸ்கோவின் காவிரி என்ற பெயரில் புதிய படம் ஒன்றை அவர் இயக்கவுள்ளார்.
அந்நியன், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல பிரமாண்டப் படைப்புகளின் கேமராமேனாக இருந்தவர் ரவி வர்மன். தற்போது கலைஞானி கமல்ஹாசனின் தசாவதாரம் படத்திற்கும் இவர்தான் கேமராமேன்.
இந்த நிலையில் ரவி வர்மனும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். படத்திற்கு மாஸ்கோவின் காவிரி என்று பெயரிட்டுள்ளார். முற்றிலும் புதுமுகங்களுடன் இந்தப் படம் உருவாகிறது. ரவிவர்மன் கதை, திரைக்கதை, வசனம், கேமரா ஆகிய பணிகளையும் கவனிக்கிறார்.
படப்பிடிப்பு முழுவதும் கனடா, இத்தாலியில் நடைபெறவுள்ளதாம். இந்தப் படம் குறித்து ரவிவர்மன் கூறுகையில், இது ஒரு காதல் கதை. கதைக்குப் புதுமுகங்கள் தேவைப்பட்டதால் புதுமுகங்களை வைத்துப் படத்தை இயக்கவுள்ளேன்.
படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்து விட்டது. இரண்டாவது ஷெட்யூல் தீபாவளிக்குப் பின்னர் தொடங்கும். மாஸ்கோ ரஷ்யாவின் தலைநகரப் பெயர் மட்டுமல்ல, அங்கு ஓடும் நதியின் பெயரும் கூட.
காவிரி என்ற பெயருக்கு விளக்கம் தரத் தேவையில்லை. மாஸ்கோ மற்றும் காவிரி ஆகிய இரு நதிகளும் இப்படத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால்தான் படத்திற்கு இப்படி பெயர் வைத்தேன்.
இன்றைய தலைமுறையினருக்குத் தேவையான பல நல்ல செய்திகள் படத்தில் இடம் பெறும். எந்தப் படமாக இருந்தாலும் அதில் நல்ல செய்தி இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். காரணம், கார்க்கியின் கொள்கைகள் மீது எனக்கு நிறைய பிடிப்புண்டு என்றார்.
படத்திற்கு வைரமுத்து பாடல் எழுதுகிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். கனல் கண்ணன் சண்டைப் பயிற்சியைக் கவனிக்கிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.


Click it and Unblock the Notifications











