மொக்கை வாங்கிய நடிகர்.. RJ பாலாஜியிடம் விட்ட சவால்.. பந்தாவுக்கு இப்படி ஒரு வேலையா?
சென்னை: நடிகர் மற்றும் இயக்குனரான ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் மே மாதம் 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படத்தைத் தயாரித்து, எழுதி, இயக்கியது மட்டுமல்லாமல், படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்திலும் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ளார். சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் புரோமோஷன் பணிகள் கடந்த வாரத்தில் இருந்து வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்காகத் தொடர்ந்து பல பேட்டிகள் கொடுத்து வரும் ஆர்.ஜே. பாலாஜி, சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் இதற்கு முன்னர் பணியாற்றிய படத்தில் ஏற்பட்ட அனுபவம் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக, ஒரு படத்திற்காக பாண்டிச்சேரியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, அந்தப் படத்தின் நடிகருடன் கடற்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரசிகர்கள் ஆர்.ஜே. பாலாஜியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர், ஆனால் அந்த நடிகருடன் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கான காரணம் ஆர்.ஜே. பாலாஜிக்குத் தெரியவில்லை. அந்த ரசிகர்கள் சென்ற பின்னர், ஆர்.ஜே. பாலாஜியை நோக்கி அந்த நடிகர், "சமூக சேவை என்ற பெயரில் ஏதோ செய்து வைத்திருக்கிறாய், அதனால்தான் உன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்; இனி நான் என்ன செய்கிறேன் என்று பார்" என்று கூறியுள்ளார்.
சமூக வலைதள ஆக்டிவ்: அந்த நடிகர் ஏன் இப்படி கூறுகிறார் என்று ஆரம்பத்தில் புரிந்து கொள்ளாத, ஆர்.ஜே. பாலாஜி, அதன் பின்னர் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நடிகர் அவ்வாறு கூறி சில மாதங்களுக்கு உள்ளாகவே, அவரது சமூக வலைதள பக்கங்களில் சமூகத்தில் நடக்கும் பல சம்பவங்கள், நிகழ்வுகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து கருத்து தெரிவித்துக் கொண்டே வந்தார்.

பந்தாவுக்கு அரசியலா?: இப்படி இருக்கையில் ஒரு நாள் அந்த நடிகர் ஆர்.ஜே. பாலாஜியை சந்திக்கையில், "இப்ப எப்படி? என்னோட சோசியல் மீடியா பக்கத்தைப் பார்த்தியா? எப்படி இருக்கு? பார்த்தல்ல எவ்வளவு ஃபாலோவர்ஸ்!" என்று பந்தாவாக தெரிவித்துள்ளார்.
யார் அந்த நடிகர்: அதன் பின்னர் இது குறித்து ஆர்.ஜே. பாலாஜி கூறுகையில், "இது மிகவும் சிரமமான ஒரு விஷயம். ஏனென்றால் சமூகத்தில் நடக்கும் எல்லாவற்றிற்கும் நாம் கருத்து கூறிக் கொண்டே இருக்க முடியாது. ஒன்றுக்குக் கூறினால் மற்றொன்றுக்கு ஏன் கூறவில்லை என்று கேள்விகள் வரும். இது ஒரு மிகப்பெரிய தலைவலி. என்னைப் பொறுத்தவரையில், அரசியல் என்பது நேரடியாக தேர்தல் அரசியலில் செயல்பட்டு தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இல்லை; நம்மால் முடிந்த எதையாவது சக மனிதனுக்கு செய்தாலே அதுவே ஒரு சிறந்த சேவைதான் என்று நான் புரிந்து வைத்துள்ளேன்" என்று கூறியுள்ளார். அவரது இந்தப் பேட்டிக்கு பிறகு, அந்த நடிகர் யாராக இருக்கும் என்று ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications