அவ வருவானு நினைச்சேன்.. அம்மாவின் கடைசி ஆசையை கூட நிறைவேத்தல.. கண்கலங்கிய ராபர்ட்!
சென்னை: மம்முட்டி நடித்த அழகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய ராபர்ட் மாஸ்டர். அதன் பின், மாறன், டான்சர் ஆகிய படத்தில் நடித்தார். பின் பிரபு தேவாவின் டான்ஸ் குரூப்பில் இணைந்த இவர், போடா போடி படத்தில் நடன இயக்குநராக பணியாற்றி விருதை வென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ராபர்ட் மாஸ்டர், வனிதாவுடன் இணைந்து மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார்.
கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டரின் அம்மா அண்மையில் உயிரிழந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் ராபர்ட் மாஸ்டர் அழுதபடி நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி பார்ப்பவர்களை கவலையில் ஆழ்த்தியது. இந்நிலையில், அம்மாவின் திடீர் மரணம் பற்றி ராபர்ட் மாஸ்டர், Galatta Pink யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். ஆனால், திடீரென அவருக்கு மஞ்ச காமாலை வந்துவிட்டது. அதற்காகவும் அவர் சிகிச்சை எடுத்து வந்தார். 74வயதில் அந்த சிகிச்சையை அம்மா செய்து கொண்டார். அதைப்பார்த்து மருத்துவர்களே பாராட்டினார்கள். என் அம்மா உண்மையில் தைரியமானவர்கள், எதற்குமே பயப்பட மாட்டார்கள்.

ராபர்ட் மாஸ்டர்: நான் படப்பிடிப்புக்காக ஈ.சி.ஆரிலிருந்தேன் அப்போதுதான் காலையில் அப்பா அம்மாவிற்கு ஏதோ ஆகிவிட்டது என அழுது கொண்டே பேசினார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நான் சிறு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டேன் என்னை ஆளாக்கி ஓரளவுக்கு நடக்க வைத்தது என் அப்பாவும் அம்மாவும் தான். இருந்தாலும் அதே காலை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு அங்கிருந்து நானே காரை ஓட்டிக்கொண்டு வந்தேன். அதன் பிறகு ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு அம்மாவை மருத்துவமனையில் அனுமதித்த உடனே அவரது உயிர் பிரிந்து விட்டது. நான் அன்னைக்கு அழுததற்கு காரணம், அப்பா அம்மாவை விட்டு இருக்கவே மாட்டார். 60 வருடமாக ரெண்டு பேரும் அவ்வளவு அன்யோமான கணவன் மனைவியாக இருப்பார்கள். இப்போது அம்மா இல்லை, அப்பா எப்படி இருக்கப்போகிறார் என்று நினைத்துத்தான் நான் அழுதேன்.
அம்மாவின் கடைசி ஆசை: நான் தான் இந்த வீட்டின் கடைகுட்டி, என்கூடத்தான் அம்மா இருந்தார்கள். என்னோட எல்லா ஆசையையும் என் அம்மா செய்துவிட்டார்கள். ஆனால் நான், என் அம்மாவின் கடைசி ஆசையே நிறைவேற்றவில்லை. எனக்கு திருமணம் செய்து வைத்து பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள். என்னுடன் பிறந்த அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கும் போது நான் மட்டும் தனியாக இருப்பதை நினைத்து அம்மா மிகவும் வருத்தப்பட்டார்கள். அந்த ஆசையே நான் நிறைவேற்றவில்லையே என்ற வருத்தமும், ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்கிற வருத்தம் எனக்குள் இருக்கிறது.
என் முதல் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்த போது, அம்மா சொன்ன ஒரே ஒரு வார்த்தை அந்த பெண்ணிற்கு வாழ கொடுத்து வைக்கவில்லை என்றார். ஏனென்றால் என்னுடன் அவர் வாழ்ந்து பார்க்காமலேயே பிரிந்து சென்று விட்டார். அம்மா இறந்த விஷயம் தெரிந்தும் அந்த பெண் வந்து நிற்கவில்லை. யார் யாரோ எல்லாம் வந்து நின்றபோது அந்தப் பெண் வந்து நின்று இருக்க வேண்டும் என்று ராபர்ட் மாஸ்டர் அந்த பேட்டியில் கண்கலங்கி பேசினார்.


Click it and Unblock the Notifications











