‘நடிகைகளுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்?’.. ஷூட்டிங்கில் மயங்கி விழுந்த நடிகை கேள்வி Exclusive
பனிப் பிரதேசங்களில் நடிகைகளுக்கு மெல்லிய ஆடை தரப்படுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் சாயிஷா.
Recommended Video

சென்னை: பனிப்பிரதேசங்களில் நடிகைகளுக்கு மட்டும் மெல்லிய ஆடை அளிப்பது பாரபட்சமான செயல் என கண்டித்துள்ளார் நடிகை சாயிஷா.
தமிழில் முதல்படமான வனமகனில் நடிப்போடு, நடனத்திலும் அசத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சயிஷா. அடுத்தடுத்து தமிழில் இவரது படங்கள் ரிலீஸ் ஆகி, தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார்.
கார்த்தியின் ஜோடியாக நடித்த கடைக்குட்டி சிங்கம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில், விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த ஜுங்கா படம் நேற்று ரிலீசாகி இருக்கிறது. இது தவிர அடுத்த வாரம் ஆர்யா ஜோடியாக அவர் நடித்துள்ள கஜினிகாந்த் படம் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், ஜுங்கா படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தது மற்றும் பனிப்பிரதேசத்தில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து ஒன் இந்தியாவிற்கு அவர் பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஜாலியாக நடந்த படப்பிடிப்பு:
கடைக்குட்டி சிங்கத்தில் அப்படியே முற்றிலும் வேறுபட்டது ஜுங்கா. இதுவும் குடும்பப்பாங்கான படம் தான். ஆனால் வித்தியாசமான அனுபவத்தைத் தரும். இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் ஆஸ்திரியா, பாரீஸ் என வெளிநாடுகளில் தான் நடந்தது. கோகுல், விஜய் சேதுபதி என எல்லோருமே ஒரு குடும்பமாக நன்றாக பழகினார்கள். இதனால் படப்பிடிப்பு மிக ஜாலியாக இருந்தது.

மெல்லிய உடை:
பாடல் காட்சி ஒன்றிற்காக ஐந்து நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது. மைனஸ் 15 டிகிரி குளிரில் இப்பாடல் காட்சி படமாக்கப்பட்டது. முழுவதும் பனி. பாடலுக்காக மெல்லிய சேலை அணிந்திருந்தேன். அதனால் தான் திடீர் மயக்கம் ஏற்பட்டது. பின்னர் உடல்நிலை சரியாகி விட்டது. தற்போது அப்பாடலை திரையில் பார்க்கும்போது, நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்து விட்டது. அந்தளவிற்கு அப்பாடல் நன்றாக வந்துள்ளது.

நடிகைகள் பாவம்:
பெரும்பாலும் இதுபோன்று பனிப் பிரதேசங்களில் நடிகர்களுக்கு நல்ல முழு பாதுகாப்பான உடை அளிக்கப்படுகிறது. ஆனால், நடிகைகளின் நிலை தான் பாவம். உண்மையாகச் சொல்வதென்றால் இது அநியாயம். ஆனால், எல்லோரும் செய்யும் போது நான் மட்டும் மறுக்க முடியாது. மக்களுக்கு எங்களின் இந்த கஷ்டம் புரிகிறதா என்ற சந்தேகமும் எனக்கு உள்ளது. மற்ற பாடல்களைப் போலவே இதையும் கடந்து விடுகிறார்கள்.

விஜய் சேதுபதியுடன் நடித்த அனுபவம்..
மிகச் சிறந்த நடிகர் விஜய் சேதுபதி. டயலாக் பேப்பரில் இருப்பதைத் தாண்டியும் கேமரா முன்பு சொந்தமான சமயங்களில் அவர் பேசுவார். ஆரம்பத்தில் எனக்கு அது குழப்பமாக இருந்தது. ஆனால், பின்னர் அக்காட்சியைப் பார்க்கையில் காட்சிக்கு தேவையான வகையில் அவராக பேசியது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என ஆச்சர்யமாக இருக்கும். அவரிடம் இருந்து அந்த விசயத்தை நானும் கற்றுக் கொண்டேன். மிகப்பெரிய நடிகராக இருந்தாலும், எல்லோருடனும் வெகு இயல்பாக பழகுவார்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











