மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்.. 3 ஸ்கிரிப்ட் ரெடி.. அஜித்துக்காக காத்திருக்கும் இயக்குநர் ரவி அரசு!
நடிகர் அஜித்திற்காக மூன்று ஸ்கிரிப்டுகளுடன் தயாராக இருக்கிறாராம் இயக்குநர் ரவிஅரசு.
சென்னை: நடிகர் அஜித்திற்காக மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்டில் மூன்று ஸ்கிரிப்டுடன் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ரவிஅரசு.
நடிகர் அதர்வாவை வைத்து ஈட்டி என்ற ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் ரவிஅரசு. தற்போது தனது இரண்டாவது படமான ஐங்கரனில் பிசியாக இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், எடிட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஐங்கரனைத் தொடர்ந்து மாஸ் ஹீரோ சப்ஜெக்டில் மூன்று ஸ்கிரிப்டுடன் அடுத்த படத்திற்கு தயாராக இருக்கிறார் ரவி அரசு. நடிகர் அஜித்திடம் நேரம் கேட்டு நம்பிக்கையுடன் காத்திருக்கும் அவரை ஒன் இந்தியாவுக்காக சந்தித்தோம்.
இதோ அவரது சிறப்புப் பேட்டி...

ஐங்கரன் என்ன மாதிரியான படம்?
இது இளம் விஞ்ஞானிகளை பற்றிய கதை. இந்த படத்துல மெக்கானிக்கல் இன்ஜினியரா ஜி.வி. நடிச்சிருக்கார்.
இளம் விஞ்ஞானிகள் பற்றி படம்னு சொல்றீங்க... அப்படினா இது சயின்ஸ் பிக்ஷன் மூவியா?
நிச்சயமா இல்ல. இந்த படத்துல கிராபிக்ஸ் காட்சிகள் கூட கிடையாது. ஒரு படம் பண்ணும்போது, அது பெருவாரியான மக்களுக்கு கனக்ட் ஆகுற மாதிரிதான் இருக்கனும். அப்பதான் படம் பார்க்கும் ஆடியன்ஸ் பாதியில எழுந்துபோகாம இருப்பாங்க.

நிலைமை மாறும்...
நம்ம வீடுகள்ல, சின்ன பசங்க எப்ப பார்த்தாலும் ஏதாவது செஞ்சுகிட்டே இருப்பாங்க. புதுசா ஏதாவது ஆராய்ச்சி பண்ணிட்டே இருப்பாங்க. ஆனா நாம அத பாராட்டி ஊக்கப்படுத்தாம உதாசீனப்படுத்திடுவோம். இந்த படம் வந்ததுக்கு அப்புறம் இந்த நிலை மாறும்னு நம்புறேன். இந்த படத்துக்காக நிறைய இளம் விஞ்ஞானிகளை சந்திச்சு பேசியும் இருக்கேன். அந்த வகையில இந்த படம் சாதாரண மக்களுடன் தொடர்பு கொண்டதாக இருக்கும்.

அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் ரெடியா?
மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்டுக்காக மூன்று ஸ்கிரிக்ப்ட ரெடி பண்ணிருக்கேன். பெரிய ஹீரோஸ்கிட்ட முயற்சி பன்றேன். அஜித் சார்கிட்ட டைம் கேட்டிருக்கேன். விரைவில் நடக்கும்னு நம்புகிறேன்.

விவேகம் பட ரிலீஸ் அப்போ வெளியிட்ட வீடியோ பத்தி சொல்லுங்க..
நான் விமர்சனங்களுக்கு எதிரானவன் கிடையாது. ஆனா, அந்த விமர்சனம் தரம் தாழ்ந்து தனி மனித தாக்குதலாக மாறும்போது, ஒரு இயக்குநரா அதைக் கண்டிக்க வேண்டியது என் பொறுப்பு. அதைத் தான் நான் செஞ்சேன். விவேகம் விமர்சனத்துல அஜித் சாரை ஒருமையில திட்டுற மாதிரி இருந்தது. அதனால் எனக்கு கோபம் ஏற்பட்டது. அந்த ஆதங்கத்தை வீடியோவா பதிவு செஞ்சு வெளியிட்டேன்.

உண்மை சம்பவங்களை படமாக்கும் ஐடியா இருக்கா?
என்னோட படத்துக்கான கதைக்கருவை நான் கேள்விப்பட்ட, படிச்ச, நேரில் பார்த்த சம்பவங்களில் இருந்துதான் எடுப்பேன். முழுக்க முழுக்க உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படம் எடுக்கும் ஐடியாவும் இருக்கு. அதற்கான தேடல் தொடர்ந்துகிட்டே இருக்கு" என தன் பேட்டியை முடித்துக் கொண்டார் ரவிஅரசு.

விசுவாசம்:
நடிகர் அஜித் தனது கடந்த நான்கு படங்களிலும் இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்து நடித்து வருகிறார். வீரத்தில் தொடங்கிய இவர்களது வெற்றிக் கூட்டணி தற்போது விசுவாசம் படம் வரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தனது அடுத்த படத்தில் புதிய இயக்குநருடன் அஜித் நடிக்க விரும்புவதாகத் தெரிகிறது. எனவே, அவருக்கு கதை சொல்ல இயக்குநர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











