சீரியலில் நடக்கும் அட்டூழியங்கள்.. மனம் நொந்து பேசிய தேவிப்பிரியா!
சென்னை: சின்னத்திரை பிரபல டப்பிங் கலைஞரும், நடிகையுமான தேவிப்பிரியா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகை ஆவார். மதுரையை சேர்ந்த இவர், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே, டாக்குமெண்ட்ரி நடித்திருந்தார். அதன் பின், ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997ல் வெளியான மின்சார கனவு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பின் அஜித் நடித்த வாலி படத்தில், அவரது கேரக்டர் நன்றாக பேசப்பட்டது.
தொடர்ந்து ஊரு விட்டு ஊரு வந்து, ஏரிக்கரை பூங்காற்றே போன்ற பல படங்களில் நடித்து வந்த இவர், சன்டிவியில் ஒளிபரப்பான சக்தி சீரியலில் மூலம் தான் என்ட்ரி ஆனார். அதைத் தொடர்ந்து, சின்னத்திரையில் அத்திப்பூக்கள், ஆசைகள், அச்சம் மடம் நாணம், சொர்க்கம் போன்ற தொடர் என 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். Galatta Tamil பேட்டி அளித்துள்ள இவர் பல விஷயத்தை மனம் விட்டு பேசி உள்ளார்.

நடிகை தேவி பிரியா: அதில், முன்பு இருந்த சினிமாவில் ஒரு மரியாதை கலந்த பயம் இருக்கும், அந்த பயம் ஏன் வரும் என்றால், அப்போது சினிமாவில் வாய்ப்பு வருவதே ரொம்ப கஷ்டம், இதனால் வந்த வாய்ப்பை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும், இதை இழந்தவிடக்கூடாது என்கிற பயத்தோடு இருப்பார்கள். ஆனால், இப்போது சினிமாவிற்கு வருவது ரொம்ப ஈசியாகிவிட்டது. இன்ஸ்டாகிராமில் அழகான பெண்ணை பார்த்துவிட்டால், அடுத்து அந்த பெண்ணுக்கு வாய்ப்பு கொடுத்துவிடுகிறார்கள். இந்த வாய்ப்பு அப்போது எங்களுக்கு கிடைக்கவில்லை. கஷ்டப்படாமல் வீடுதேடி வாய்ப்பு வருவதால், அவர்களுக்கு சினிமாவில் மீது மரியாதையோ, பயமோ இல்லை.
மரியாதையே இல்லை: எங்க காலத்தில் ஒரு நாளைக்கு 13 சீனில் நடிப்போம், எல்லாத்துக்கும் டையலாக் பேப்பர் இருக்கும். அதை படித்துவிட்டுத்தான் நடிப்போம். இப்போது ப்ராம்ட் இருக்கு, உதவி இயக்குநர் சீனை பற்றி சொன்னால் கூட, அதை காது கொடுத்து கேட்காமல், சார் டைம் இல்ல சார், டேக் போய்விடலாம் என்று சொல்லிவிட்டு, நேரா வராங்க நடிச்சி முடிச்சிட்டு அடுத்து போனை நோண்டா சென்று விடுகிறார்கள். அப்படி நடிப்பவர்களுக்கும் அதே சம்பளம் தான், எங்களுக்கும் அதே சம்பளம் தான் அதை நினைக்கும் போது தான், ஆத்திரமாக வரும். ஆனால், என்ன செய்வது பல வருஷமாக நடிப்பதால், தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவரும் நண்பர்களாகி விட்டதால், அவர்களிடம் கறார் காட்டி சம்பளத்தை வாங்க முடியவில்லை. நாங்களும் சம்பளத்தை பற்றி பேசாமல் ஆத்ம திருப்திக்காக நடித்து கொடுக்கிறோம். சம்பளத்தை விட சீனியர் நடிகர்களுக்கு மரியாதையே இல்லை என்று தேவி பிரியா ஆதங்கப்பட்டு பேசினார்.


Click it and Unblock the Notifications











