Exclusive: 'இந்த தலைமுறைக்கு எதை, எதுக்கு சாப்பிடறோம்னே தெரியலை...' சர்வர் சுந்தரம் இயக்குனர் பேட்டி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரிலீஸ் ஆக இருக்கிறது, சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்'. படத்தின் ஸ்டில்களும் சந்தானத்தின் கேரக்டரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், திடீரென தள்ளிப் போனது ரிலீஸ். இப்போது பிரச்னை முடிந்து, வரும் 31 ஆம் தேதி முடிவாகி விட்டது வெளியீட்டுத் தேதி. இதுவரை காமெடியாக பார்த்த சந்தானத்தை இதில் வேறு மாதிரி பார்க்கலாம் என்கிற இந்தப் படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி, இன்றைய தலைமுறைக்குத் தேவையான படம் இது என்கிறார்.
எப்படி?

தமிழர்களுக்கான உணவு பழக்கங்களுக்கு ஒரு தனித்துவம் இருந்தது. வாழை இலை போட்டு, இலையோட நுனியை இடது கை பக்கமா வச்சு, ஓரத்துல உப்பு வச்சு.. இப்படி இங்க ஆரம்பிச்சு, அதுல முடிக்கணுங்கற சாப்பாடு முறை இருந்தது. இன்னைக்கு அது எங்க போச்சுன்னு தெரியலை. இப்போ இருக்கிற தலைமுறை எதை, எதுக்கு சாப்பிடறோம்னு தெரியாம கண்டதை சாப்பிட்டுட்டு இருக்காங்க. அவங்களுக்கு நம்ம உணவோட மேன்மையை சொல்ற படமா, சர்வர் சுந்தரம் இருக்கும். அதாவது உணவே மருந்துன்னு சொல்ற படமா இருக்கும்.
சந்தானம் சர்வரா வர்றாரா?
இல்லை. அவர் என்ஜினீயர். சாப்பிடறதை தவிர அதுபற்றி எதுவுமே தெரியாம இருக்கிறவர். ஒரு கட்டத்துல, சாப்பாடு பற்றி ஒன்னும் தெரியாத அவர் எப்படி சாப்பாட்டு கிங்கா மாறுறார்ங்கறதுதான் கதை. இதுவரை சந்தானத்தை காமெடியனாதான் பார்த்திருக்கோம். அவரோட கவுன்டர் காமெடியை ரசிச்சிருக்கோம். அதைத்தாண்டி அவர் சிறந்த நடிகர் அப்படிங்கறதை இந்தப் படம் உணர்த்தும். சில இடங்கள்ல கண்கலங்க வச்சிருவார்.
பழைய 'சர்வர் சுந்தரம்' டைட்டில் ஏன்?
தமிழ்ல சமையல் பற்றிய படம்னா, சர்வர் சுந்தரம், மாயா பஜார்தான் ஞாபகத்துக்கு வரும். சர்வர் சுந்தரம் படத்துல நாகேஷ் சப்ளையரா வருவார். கையில காபி தம்பளர்களை அடுக்கி வச்சுகிட்டு அவர் வர்றதுதான் நமக்கு தோணும். அவர் எனக்கு இன்ஸ்பிரஷன். சின்ன வயசுல இருந்தே அவர் படங்கள் எனக்குப் பிடிக்கும் அதனால என்னோட முதல் படத்துக்கு அவர் படத்து டைட்டிலை வைக்கலாம்னு நினைச்சேன். அதோட இது சமையல் பற்றிய கதை அப்படிங்கறதால இந்த டைட்டில் செட் ஆச்சு.
அனுமதி எப்படி கிடைச்சது?

ஏவிஎம்-மோட டைட்டில். கேட்டதும் உடனடியா அனுமதி கிடைக்கலை. ஸ்கிரிப்டை சொல்லி, போராடிதான் அனுமதி வாங்கினேன். அதோட, இந்த டைட்டில் வைக்கறதுக்கு ரொம்ப யோசிச்சேன். ஏன்னா, இந்த பட டைட்டில்லாம் தமிழ் சினிமாவுல காவியம். அதை மீண்டும் பயன்படுத்தும்போது படத்துக்கு நியாயம் சேர்க்கணும். அந்த நம்பிக்கை வந்தபிறகுதான் டைட்டிலை வாங்கினேன்.
துபாய்ல நடக்கிற கதையா?
இல்லை. சென்னையில ஆரம்பிச்சு, துபாய் போய், இங்க கிராமத்துக்கு வந்து மீண்டும் சென்னையில முடியற கதை. துபாய்லயும் ஷூட் பண்ணியிருக்கோம்.
ஹீரோயின் வைபவி ஷாண்டில்யா...
நடன கலைஞர் அவங்க. மராத்தியில நிறைய மேடை நாடகங்கள்ல நடிச்சிருக்காங்க. நான் தான் தமிழ்ல அறிமுகப்படுத்தினேன். இந்தப் படம் வெளிவர்றதுக்குள்ள மற்ற படங்கள்ல கமிட் ஆகி அந்தப் படங்கள் ரிலீஸ் ஆயிடுச்சு. அவங்ககிட்ட பெண்மைக்கான நளினம் இருக்கும். அது இந்தக் கதைக்குத் தேவைப்பட்டதால, அவங்களைத் தேர்வு பண்ணினோம்.
நாகேஷ் பேரன் பிஜேஷ் நடிக்கிறாராமே?
ஆமா. ஆனந்த்பாபு மகன். இரண்டாவது ஹீரோ மாதிரி வருவார். ஒவ்வொரு காட்சியிலயும் அவர் நாகேஷை ஞாபகப்படுத்துவார். இவரில்லாம ராதாரவி, சண்முகராஜன், மாயா, மயில்சாமின்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க.
முதல் படம் இவ்வளவு லேட்டா வர்றது வருத்தமா இல்லையா?
வருத்தம்தான். இருந்தாலும் இப்ப ரிலீஸ் தேதி அறிவிச்சதுமே, கிடைச்ச ரெஸ்பான்ஸ் பார்த்ததும் அந்த வருத்தம் மறந்து போச்சு. இந்த வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு. படம் கண்டிப்பாக சிறப்பானதா இருக்கும்.
நீங்க நடிகராத்தான் சினிமாவுக்கு வந்தீங்க...
உண்மைதான். சரத்குமார் நடிச்ச பாறை படத்துல இரண்டாவது ஹீரோவா நடிச்சிருந்தேன். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். அடுத்து மணிரத்னம் சாரோட ஆயுத எழுத்துல ஒர்க் பண்ணினேன். கே.எஸ்.ரவிகுமார்ட்ட இருந்து வேகத்தையும் மணி சார்ட்ட இருந்து ஸ்டைலையும் கத்துக்கிட்டு வந்து இந்தப் படத்தை உருவாகியிருக்கேன்.


Click it and Unblock the Notifications











