இந்தியாவிலேயே பெரிய நடிகரான்னு கேட்டாங்க.. ஜாவா சுந்தரை விட எகிறிய சூரியின் மார்க்கெட்!
சென்னை: வெற்றி என்பது பட்டாம்பூச்சி மாற்றி மாற்றி மலர்கள் அமரும் உனக்கு மட்டும் இன்று நினைத்தால் சரி அல்ல என அட்டகாசம் படத்தில் நடிகர் அஜித் குமார் சொன்னது போல சினிமாவில் காமெடி நடிகராக இருப்பவர்கள் ஹீரோவாக ஜொலிப்பார்கள், வெள்ளிவிழா நாயகர்களும் ஒரு காலத்துக்கு மேல் வீதிக்கு வந்துவிடும் நிலைமையும் உருவாகும்.
பரோட்டா சூரியின் காமெடி படங்களை கலாய்த்து வந்த தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது அவரை ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர். துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள கருடன் திரைப்படம் இரண்டு நாட்களில் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டார் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டை கவின் கம்பேக் நிலைமைக்கு கொண்டு வருவார் என்றும் அரண்மனை 4 படம் ஓடாது என்றும் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அதற்கு உல்டாவாக அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தியது. கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் வெறும் 20 கோடி வசூலுடன் ஓட்டத்தை நிறுத்தியது.
உயரப் பறக்கும் கருடன்: சூரி நடித்த கருடன் திரைப்படத்தை வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ரசிகர்கள் தியேட்டர்களில் பார்த்து கொண்டாடி வருகின்றனர். சென்னையில் மட்டும் இன்றி தமிழ்நாடு முழுவதும் சூரியின் கருடன் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிராமத்து சப்ஜெக்ட்டை பக்காவாக சூரிக்காக பட்டை தீட்டி கொடுத்திருக்கிறார் துரை செந்தில்குமார். சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் இருவரும் துணை நடிகர்களாக நடிக்காமல் சூரியுடன் இணைந்து மல்டி ஸ்டார் படமாகவே கருடன் வந்திருக்கிறது.

சர்வதேச அளவில் ரசிகர்கள்: வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சூரி. அந்தப் படத்தை முடித்த கையோடு விடுதலை 2, கொட்டுக்காளி மற்றும் ஏழு கடல் ஏழுமலை என அதிரடியாக மூன்று படங்களில் கருடனுக்கு முன்பாகவே நடித்து முடித்துள்ளார். அதிலும், சூரி நடித்த விடுதலை 1 மற்றும் 2, கொட்டுக்காளி படங்கள் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் ஸ்க்ரீன் செய்யப்பட்டன. பெர்லின் திரைப்பட விழாவில் ஏழு கடல் ஏழுமலை திரைப்படம் போட்டி போட்டது. ஒரே ஆண்டில் 3 படங்கள் இப்படி தேர்வாவது பெரிய விஷயம் என சூரி பேசியுள்ளார்.

இந்தியாவிலேயே பெரிய நடிகரா?: அந்த மூன்று படங்களையும் தொடர்ந்து பார்த்த சர்வதேச ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். சினிமாவை ரொம்பவே விரும்பி பார்ப்பவர்கள் எல்லாம் ரோட்டர்டாமுக்கும் வந்திருந்தனர். அங்கிருந்து 6 மணி நேரம் டிராவல் ஆகி செல்லும் பெர்லின் திரைப்பட விழாவிலும் வந்து படங்களை பார்த்தனர். 3 படங்களிலும் என்னை பார்த்த சில ரசிகர்கள் இவர் என்ன இந்தியாவிலேயே பெரிய நடிகரா என விசாரிக்க ஆரம்பித்து என்னிடம் பேச ஆரம்பித்து விட்டனர். நான் இப்போதான் நடிக்கவே ஆரம்பிச்சிக்கிறேன் என்பது அவர்களுக்கு தெரியாது. ஆனால், சர்வதேச அளவில் ரசிகர்கள் நம்முடைய நடிப்பை பாராட்டும் போது எதையோ பெரிதாக சாதித்தது போன்ற சந்தோஷம் ஏற்பட்டது. தொடர்ந்து இது போன்ற நல்ல படங்களில் நடித்தால் போதும் என்கிற எண்ணமும் தோன்றியது என சூரி சூப்பராக பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











