எனது பலமே வேகம்தான், அது இருக்கும் வரை நடிப்பேன்- ரஜினிகாந்த்
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சங்கர ரத்னா விருது பெற்றுள்ளார். இதற்கான விழா சென்னை ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென வருகை தந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். படு டிரி்ம்மாக, ஆரோக்கியமாக, உற்சாகமாக காணப்பட்டார். அவரைப் பார்த்து அனைவரும் உற்சாகமடைந்தனர்.
ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் பேசும்போது எனது உடலில் வேகம் இருக்கும் வரை நான் ஓய்வ பெற மாட்டேன் என்று கூறி அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
ரஜினியின் பேச்சு:
சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். எனக்கு சங்கர ரத்னா விருது வழங்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் நீ கலந்து கொள்ளாவிட்டாலும், உன் வாழ்த்து மடலையாவது அனுப்ப வேண்டும் என்றும், அதை மேடையில் மகிழ்ச்சியுடன் படிப்பேன் என்றும் கூறினார். அதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன்.
பின்புதான் யோசித்தேன், உடல் நிலை சரியான பிறகு, ஏதாவது ஒரு நல்ல நிகழ்ச்சியில்தான் கலந்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன். அப்படி பார்த்தால், என்னை சினிமாவில் வளர்த்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியை விட வேறு நல்ல நிகழ்ச்சி எதுவும் கிடையாது.
நான் முழுமையாக குணம் அடைய மக்களின் அன்பும், ரசிகர்களின் வேண்டுதலும்தான் காரணம். நான் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது வீட்டோடு இருந்து ரெஸ்ட் எடுக்கத்தான் விரும்பினேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. என்னை உருவாக்கிய ஜாம்பவான்கள் இருக்கிற இந்த மேடையில், நான் அதிகம் பேசினால், அது அதிக பிரசங்கித்தனம் ஆகிவிடும்.
எனக்கு வெற்றிப் படங்களை கொடுத்தார் என்பதால் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 25 படங்களில் நடிக்கவில்லை. அவர் மீது கொண்ட அன்பினால் தான் 25 படங்களில் நடித்தேன்.
என்னை உருவாக்கியவர்கள் என்னிடம் பேசும்போது, நீ தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்க வேண்டும், தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் சிவாஜியோ, கமல்ஹாசனோ கிடையாது. அவர்களை போல் நடிப்பாற்றல் எனக்கு கிடையாது. அவர்களைப் போல என்னால் நடிக்கவும் முடியாது. நான் ஒரு ஹீரோவாக மட்டுமே இருக்க முடியும். சினிமா துறையில் என் மூலதனம் என் உடலின் வேகம்தான். எனவே, என் உடலில் வேகம் இருக்கும் வரை நடிப்பேன் என்றார் ரஜினி.
நிகழ்ச்சியில் பேசிய எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பேசுகையில், எஸ்.பி.முத்துராமனின் தந்தை ராமசுப்பையா எனக்கு அரசியல் தந்தை. ஆகவே அவரை எனக்கு 70 ஆண்டுகளாக தெரியும். ஒரே நேரத்தில் ரஜினியையும், கமல்ஹாசனையும் இயக்கியவர். எஸ்.பி.முத்துராமனை பார்த்து உழைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications












