ஸ்ரீரெட்டி செயல் விபச்சாரத்திற்கு ஈடானது: போலீசில் புகார் அளித்த பின்னணி குறித்து வாராகி பேட்டி
சமூகத்தின் மீதுள்ள அக்கறையின் காரணமாகவே ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்துள்ளதாக வாராகி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பாலியல் புகார் கூறி ஸ்ரீரெட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாகவும், சமூகத்தின் மீதுள்ள அக்கறையின் காரணமாகவே அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் நடிகர் வாராகி ஒன் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தெலுங்குத் திரையுலகைத் தொடர்ந்து தமிழ் சினிமா இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. தமிழில் முன்னணி இயக்குநர்களான முருகதாஸ், சுந்தர்.சி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீரெட்டி மீது விபச்சார பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையரிடம் நடிகரும், சமூக ஆர்வலருமான வாராகி இன்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஒன் இந்தியாவிற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் வாராகி கூறியதாவது;
ஸ்ரீரெட்டி என்பவர் தெலுங்கு திரையுலகினரை மிரட்டி பணம் பறித்தார் என்பது பலரும் அறிந்தது. அவர் தானாக முன்வந்து தான் படவாய்ப்புகளுக்காக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் பாலியல் உறவு கொண்டார். எனவே, இது எந்த வகையிலும் ஏமாற்றுவது ஆகாது.
அவரது செயலுக்கு அவர் பணம் வாங்கினாரா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. அவரே பலருடன் பாலியல் உறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார். இது ஏறக்குறைய விபச்சாரத்திற்கு ஈடானது ஆகும். எனவேதான் அவர் மீது விபச்சார தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என போலீசில் புகார் கொடுத்துள்ளேன்.
ஸ்ரீரெட்டியின் செயல்பாடுகள் இந்திய கலாச்சாரத்தையும், பெண்களையும் இழிவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதோடு தெலுங்கு திரையுலகைப் போலவே தமிழிலும் அவர் பாலியல் புகார் கூறி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதாகவே தெரிகிறது. ஆகவே அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
ஸ்ரீரெட்டி புகார் கூறிய சம்பந்தப்பட்டவர்களே அமைதியாக இருக்கும் போது, நீங்கள் அவர் மீது போலீசில் புகார் அளிக்க காரணம் என்ன? என்ற சந்தேகத்தை அவர் முன் வைத்தோம்.
அதற்கு அவர், "விளம்பரத்திற்காக நான் இதை செய்யவில்லை. நான் ஏற்கனவே பிரபலமானவன் தான். எனக்கு இது போன்ற புதிய விளம்பரம் எல்லாம் தேவையில்லை. சமூகத்தின் மீதுள்ள அக்கறையின் காரணமாகவே நான் இந்தப் புகாரை அளித்துள்ளேன்" எனப் பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











