குந்தவை வலையில் சிக்கிய சக்தி.. மாறப்போகும் ஜனனியின் தலையெழுத்து.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ஈஸ்வரியின் அப்பா ஆதி குணசேகரனின் மணி விழாவிற்கு நிச்சயம் நீ சம்மதம் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதை அடுத்து ஈஸ்வரி தன்னுடைய மகள் தர்ஷினியை பார்த்து. நீ வீட்டுக்கு வரவேண்டும், அப்பாவின் மணி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறாள். தர்ஷினிக்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும், வேறு வழியில்லாமல், நான் உங்களுக்காக உங்க கூட நிற்கிறேன் என்று சொல்கிறாள். இவர்கள் இருவரும் இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது, ஈஸ்வரியின் அப்பாவிடம் இருந்து போன் வருகிறது. நான், ஒரு லொகேஷன் அனுப்புகிறேன். நீ அந்த இடத்திற்கு வா என்று சொல்ல, இருவரும் கிளம்பி அந்த இடத்திற்கு செல்கின்றனர்.
இதையடுத்து, ஈஸ்வரியின் அப்பா தர்ஷனுடன் அந்த இடத்திற்கு வருகிறார். மேலும் தர்ஷினியை பார்த்து உனக்கு தாத்தா மேல கோபம் இருக்கத்தான் செய்யும் என்பது எனக்கு நன்றாக புரிகிறது. ஆனால், கோபப்பட்டு நாம் எதுவும் சாதிக்கப்போவதில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆதி குணசேகரன் செய்த விஷயங்கள் எல்லாம் எனக்கும் பிடிக்காது. அதற்காக, அவருடன் நான் பலமுறை சண்டை போட்டு இருக்கிறேன். ஆனால், இப்போது அவர் மனம் திருந்தி இருக்கிறார். இனிமேலும், நாம் சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் உங்களுடைய வாழ்க்கை தான் வீணாகி போய்விடும். அதற்காக, இந்த மணி விழாவை, ஒரு சாதகமாக பயன்படுத்தி உங்களுக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம் என்கிறான்.

மணி விழா: மேலும் குணசேகரனுக்கு நாமும் சளைத்தவர்கள் இல்லை, என்பதை இந்த மணி விழா மூலம் நாம் நிரூபிக்க வேண்டும். என்னுடைய மகள் ஈஸ்வரி ஒரு நல்ல குடும்பத்திலிருந்து, வசதியான குடும்பத்திலிருந்து தான் வந்து இருக்கிறாள் என்பதை, இந்த விழாவின் மூலம் நாம் அவருக்கு புரிய வைக்க வேண்டும். அதற்காக என்னிடம் இப்போது பெரிதாக பணம் இல்லை என்றாலும், என்னுடைய சொத்து இருக்கிறது. என்னுடைய சொத்து எனக்குப்பின் பேரன், பேத்திக்குத் தான் வந்து சேர வேண்டும். அதனால், நான் இப்போது அந்த சொத்தை விற்று மணி விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்து இருக்கிறேன். அதற்கு நீங்கள் சம்மதம் சொல்ல வேண்டும் என்று கேட்கிறார். இதைக்கேட்ட, ஈஸ்வரி, என்றைக்குமே என்னுடைய குழந்தைகளுக்கு சொத்து இருக்கிறது என்று நான் சொல்லி வளர்க்கவில்லை. அது உங்களுடைய சொத்து, உங்களுக்கு தான் அதில் முழு உரிமையும் உண்டு. ஆனால், மணி விழாவிற்காக அதை விற்றுத்தான் நீங்கள் செலவு செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், உங்களுடைய விருப்பம் அது என்றால் நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று ஈஸ்வரி சொல்லி விடுகிறாள்.
இன்னைக்கு நல்ல நாள்: மறுபக்கம் வீட்டில், அண்ணன், தம்பிகள் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, சக்தி, திடீர்னு மணி விழாவிக்கு சீர் வைக்க வேண்டும் என்று சொன்னா எப்படி, இப்போது என்னிடம் பணம் இல்லை என்று சொல்ல, உடனே விசாலாட்சி, எல்லாரும் சீர் செய்யும் போது, நீ மட்டும் சீர் செய்யவில்லை என்றால், நன்றாக இருக்காது. கதிர், ஞானம் இரண்டு பேரும் உனக்கு பணம் தருவார்கள். அதை வாங்கி உன் மாமனார் வீட்டில் கொடுத்து சீர்வைக்க சொல்லு என்று சொல்கிறாள். இதைக்கேட்டு கடுப்பான சக்தி, இதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று அந்த இடத்தில் இருந்து கிளம்பி விடுகிறான். இதையடுத்து, விசாலாட்சி, இன்னைக்கு நல்ல நாள், இன்னைக்கே அண்ணனுக்கும் அண்ணிக்கும் நகை, முகூர்த்தப்புடவை எல்லாம் வாங்கிவிட்டு வந்து விடுங்கள் என்று சொல்ல ரேணுகா, நந்தினி, ஜனனி அனைவரும் துணி எடுப்பதற்காக கடைக்கு கிளம்புகின்றனர்.

உதவிய குந்தவை: இதையடுத்து சக்தி, குந்தவையிடம் பண உதவி கேட்கிறான். அண்ணனுக்கு மணி விழா வருகிறது. அதற்காக சீர் செய்ய வேண்டும் கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது என்று கேட்க குந்தவை அவ்வளவுதானே எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நான் தருகிறேன் என்று சொல்கிறாள். ஆனால், சக்தி, நான் கேட்டால் நீ நிச்சயம் பணம் தருவாய் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனால், நான் உன்னை தேவைக்காக பயன்படுத்திக் கொள்வது போல இருக்கிறது. இதனால், உனக்கு தெரிந்த ஏதாவது ஒரு நிறுவனத்திடம் இருந்து எனக்கு வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்தால் போதும் என்று சொல்கிறான். உடனே குந்தவை, வேறு ஒரு கம்பெனியில் ஏன் கடன் வாங்க வேண்டும். நம்முடைய நிறுவனத்திலேயே உனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி தருகிறேன். உனக்கு, எப்போது அதை திருப்பி தர முடியுமோ, அப்போது கொடுத்தால் போதும் இல்லை என்றால் சம்பளத்தில் இருந்து கூட பிடித்துக் கொள்ளலாம் அது உன்னுடைய விருப்பம் என்று சொல்கிறாள்.
உடனே ரொம்ப தேங்க்ஸ் குந்தவை, பணம் கிடைச்சதும், அண்ணனுக்கு துணி, நகையெல்லாம் வாங்க வேண்டும் என நினைத்து இருந்தேன். இப்ப பணம் வந்துடுச்சு, இன்னைக்கு நல்ல நாளுனு அம்மா சொன்னாங்க, இன்னைக்கே நகையெல்லாம் வாங்க வேண்டும் என்று சொல்ல, உடனே குந்தவை புடவை நகையை உனக்கு பார்த்து வாங்க தெரியுமா.,.. என்று கேட்கின்றாள். அதெல்லாம் தெரியாது, ஏதாவது அப்படியே பார்த்து வாங்க வேண்டியது தான் என்று சொல்கிறான். அப்போ, நானும் கூடவே வருகிறேன். நான் புடவை, நகைகளை எல்லாம் செலக்ட் பண்ணி தருகிறேன் என்று சொல்ல இருவரும் சேர்ந்து புடவை எடுக்க கடைக்கு செல்கின்றனர். மறுபக்கம், ரேணுகா, நந்தினி, ஜனனி மூன்று பேரும் புடவை எடுக்க கடைக்கு வருகின்றனர்.
குந்தவையுடன் ஜோடியாக வந்த கதிர்: தற்போது, இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில், ரேணுகா, நந்தினி, ஜனனி மூன்று பேரும் புடவை எடுப்பதற்காக ஒரு கடைக்கு ஆட்டோவில் செல்கின்றனர். கடைக்கு சென்றதிலிருந்தே, ஜனனியின் முகம் வாடியே இருக்கிறது. நந்தினி, ரேணுகா இருவரும் புடவையை தேடி தேடி செலக்ட் செய்து கொண்டு இருக்கின்றனர். ஆனால், ஜனனி தனியாக அமர்ந்து கொண்டு எதையோ யோசித்துக்கொண்டு இருக்கிறாள். அப்போது, குந்தவை மற்றும் சக்தி இருவருமே காரில் இருந்து இறங்கி அதே கடைக்கு துணி எடுக்க வருகின்றனர். கடையில் ஜனனி இருப்பதை பார்த்து சக்தி அதிர்ச்சி அடைந்து நிற்கிறான். சக்தியை குந்தவையோடு பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். இதையடுத்து என்ன ஆனது என்பதை இன்றைய எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications











