Sundar c: என் படத்தில் கிளாமர் இருக்கும்.. ஆனா, அருவருப்பு இருக்காது.. சுந்தர் சி பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனரான சுந்தர் சி, ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படத்தை கொடுத்து இருக்கிறார். தற்போது வரை தொடர்ந்து கமர்ஷியல் படங்களை கொடுத்துக்கொண்டு இருக்கும் சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் எடுத்த கேங்கர்ஸ் படம் 24ந் தேதி வெளியாக உள்ளது. இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல விஷயம் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.
மத கஜ ராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு சுந்தர் சி இயக்கி இருக்கும் திரைப்படம் 'கேங்கர்ஸ்'. இத்திரைப்படத்தின் மூலம் சுந்தர் சியுடன் வடிவேலு 14 வருடத்திற்கு பிறகு இணைந்துள்ளனர். இப்படத்தை குஷ்பூ சுந்தர் மற்றும் சுந்தர் சி-யின் 'அவ்னி சினிமேக்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. சத்யா சி இசையமைத்து இருக்கும் இப்படத்தில், வடிவேலு, முனிஷ்காந்த், பகவதி பெருமாள், அருள்தாஸ், வெங்கட்ராகவன், கேதரின் தெரசா, ஹரீஷ் பெரடி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் வடிவேலு பலவிதமான கெட்டப்பில் வந்து ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து இருக்கிறார்.

சுந்தர் சி பேட்டி: 'கேங்கர்ஸ்' படம் 24ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்படைந்து வருகிறது. அதில், சுந்தர் சி மற்றும் வடிவேலு இருவரும் இணைந்து சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். அதில், சுந்தர் சிக்கும் எனக்கும் ஒரு நூலிழை விரிசல் தான் . அதை வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் பெரிதாக்கி விட்டார்கள். கடைசியில் ஒரு மிகப்பெரிய பூகம்பமே வந்து, அந்த விரிசல் சரியாகி நானும் சுந்தரும் ஒன்று சேர்ந்து விட்டோம். நம்மூரில் யாராவது சேர்ந்து இருந்தால் பலருக்கு பிடிக்காது, ஏதாவது சொல்லி பிளவை ஏற்படுத்தி விடுவார்கள். இப்படி தான் பல ஆண்டுகள் நாங்கள் இருவரும் பிரிந்து இருந்தோம். ஆனால், எங்களுக்கு 14வருடம் போனதே பெரிதாக தெரியவில்லை என்றார்.
மேலும், அரண்மனை இரண்டு, மூன்று எல்லாம் எடுக்கிறீர்கள், அதில் எல்லாம் எனக்கு வாய்ப்பு இல்லையா என்று சுந்தர்சியிடம் கேட்டேன். அவர் அரண்மனை பத்தாம் பாகம் எடுக்கும் அளவிற்கு என்னிடம் கதை இருக்கிறது. எந்த கதையும் எனக்கு வொர்க் அவுட் ஆகவில்லை என்றால், கைவசம் எனக்கு ஒரு வெப்பன் இருக்கு, அதுதான் அரண்மனை சீரிஸ். நாலு பாகம் வந்துருச்சு. அப்படியே 10 பார்ட் வரைக்கும் எடுத்துவிடுவேன் என்று சொல்லி இருக்கிறார் என்றார்.

அருவருப்பு இருக்காது: அதைத்தொடர்ந்து பேசிய, சுந்தர் சி, என்னுடைய படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெருவதை நான் விரும்பியது இல்லை. என்னுடைய படத்தில் கிளாமர் காட்சிகள் இருக்கும். ஆனால், அது அருவருப்பாக இருக்காது. நடிகைகள் கிளாமராக வந்தாலும், அது அருவருப்பாக தெரியாது. முடிந்தவரை அழகான காட்சிகள் இருக்க வேண்டும், ஆடியன்சுக்கு சங்கடமே இல்லாமல் குடும்பத்தோடு படம் பார்க்க வேண்டும் என்பது தான் படம் எடுக்கும் போது, என் நோக்கமாக இருக்கும் என்று சுந்தர் சி அந்த பேட்டியில் பேசி உள்ளார். சுந்தர்.சி மற்றும் வடிவேலுவின் கூட்டணியில் வின்னர், லண்டன், கிரி, ரெண்டு, தலைநகரம், நகரம் மறுபக்கம் ஆகிய படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











