Bayilvan Review: பாட்ஷா பிளஸ் விக்ரம்.. கூலி படம் எப்படி இருக்கு? பயில்வான் விமர்சனம்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், பாலிவுட் நடிகர் ஆமிர்கான், கன்னட நடிகர் உபேந்திரா, தெலுங்கு உச்ச நட்சத்திரமான நாகார்ஜுனா, மலையாள நடிகர் சோபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து இருந்த இந்த படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் பற்றி பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தை பார்க்கலாம்.
ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அந்த திரைப்படத்தைப் போல கூலி திரைப்படமும் ஒரு வெற்றி பெற்ற திரைப்படமாக அமையும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. கூலி படத்தில் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடக்கின்றன. ஒரு முடிச்சு அவிழ்ந்த பின், அடுத்து எதிர்பாராத வகையில் இன்னொரு முடிச்சியை போட்டு படத்தை சுவாரஸ்யமாக ஆக்கியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கூலி : இதில், நாகார்ஜுனா கடத்தல் மன்னனாக கிட்னி திருடுவது, இதயத்தை திருடுவது என அனைத்து சட்ட விரோதமான செயல்களை எல்லாம் செய்து கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்கிறார். ஆனால் படத்தின் மெயின் வில்லன் நாகார்ஜுனா இல்லை. அவருக்கு மேல் ஒரு வில்லன் இருக்கிறார் அதுதான் யார் என்பது ஒரு ட்விஸ்ட். சத்யராஜும் ரஜினிகாந்த்தும் ஒரு கூலி தொழிலாளியாக வேலை பார்க்கிறார்கள் அங்கு நடக்கும் மோசமான சில விஷயங்களை இருவரும் கண்டுபிடித்து விடுகிறார்கள். அதன் பிறகு இருவரையும் நாடு கடத்த முதலாளி உத்தரவிடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் கூலி படத்தின் சுவாரஸ்யமான கதை.
அட்டகாசமான நடிப்பு: சத்யராஜின் மகளாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். ஆனால், சத்யராஜ் மகள் ஸ்ருதிஹாசன் அல்ல. அதன் பின்னாலும் ஒரு மர்ம முடிச்சு இருக்கிறார். பல படங்களில் தன்னை கவர்ச்சி பிம்பமாக காட்டிக்கொண்ட ஸ்ருதிஹாசனுக்கு லோகேஷ் கனகராஜ் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். நாமே வியர்ந்து பார்க்கும் அளவிற்கு பல இடங்களில் சிறப்பாக நடித்து நம்மையே அழ வைத்துவிட்டார் ஸ்ருதி. படத்தில் ரஜினிக்கு மட்டுமில்லாமல் கன்னட நடிகர் உபேந்திரா, நாகார்ஜுனா, சோபின் சாஹிர், சத்யராஜ் என அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார். இதனால், படத்தில் ரஜினி அப்பப்போ வந்து போகிறார்.
பாட்ஷா பிளஸ் விக்ரம்: கிட்டத்தட்ட கூலி திரைப்படத்தை பார்க்கும் போது விக்ரம் பிளஸ் பாட்ஷா இரண்டு படமும் சேர்ந்த கலவையாக தெரிகிறது. ஆனால், புத்திசாலித்தனமாக கதையை நகர்த்தி போட்ட முடிச்சுகளை படத்தின் சஸ்பென்சை கடைசி வரை கொண்டு சென்று கதையின் சுவாரஸ்யத்தை கூட்டி இருக்கிறார். அதுதான் கூலி திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், விக்ரம் திரைப்படத்தில் வந்தது போல 20க்கும் மேற்பட்ட சண்டை காட்சிகள் இருக்கின்றன. சண்டே காட்சிகள் என்றால் சாதாரணமான சண்டை காட்சிகள் இல்லை ரத்தம், சதையுமான சண்டை காட்சிகளாக இருக்கிறது. அதற்காக தான் இந்த திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். ஆனாலும், விக்ரம் படம் போல இந்த திரைப்படம் இருப்பதால் ரிப்பீட் ஆடியன்ஸ் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. விக்ரம் படம் பிடிக்கும் என்றால், இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும், லாஜிக் இல்லாத மேஜிக்கை படத்தில் காட்டி நல்ல பொழுதுபோக்கு படமாக கொடுத்து இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.


Click it and Unblock the Notifications











