தூக்கி எறிங்க அந்த தேசிய விருதுகளை!- தங்கர் பச்சான்

விதார்த்- சஞ்சிதா ஷெட்டி நடித்த 'கொள்ளைக்காரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடந்தது. விழாவில் இயக்குநர்கள் அமீர், சீனு ராமசாமி, செல்வமணி, தங்கர்பச்சான், கவிஞர் வைரமுத்து, நடிகை நமீதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
படத்தின் ட்ரெயிலரே வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்தது. ட்ரெயிலருக்குள் ஒரு ட்ரெயிலர் என புதுமை செய்திருந்தார் புதிய இயக்குநர் தமிழ்ச் செல்வன். இவர் சீனு ராமசாமியிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.
விழா தொடங்கியதுமே, விஐபிக்களை பேச அழைத்தனர்.
இயக்குநர் செல்வமணி பேசுகையில், தமிழில் சிறந்த படங்கள் எனப் போற்றப்பட்டு, தேசிய விருதும் வாங்கிய தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்களை சென்னை திரைப்பட விழாவில் திரையிடாததற்கு கண்டனம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேச வந்த தங்கர்பச்சான், "இந்த நாட்டிலும் உலகிலும் தமிழன் எப்படி வஞ்சிக்கப்படுகிறானோ அதே மாதிரி தமிழ் சினிமாவும் புறக்கணிக்கப்படுகிறது. தேசிய விருதை நாம் கவுரவமாக நினைத்துக்கொள்ளக்கூடாது. மத்திய அரசு நமக்கு கொடுத்திருக்கும் தேசிய விருதுகளை நாம் தூக்கி வீசுவோம்.
எனக்கு அப்படி ஒரு விருது கொடுத்திருந்தால், முகத்தில் வீசி எறிந்திருப்பேன். என்றைக்கு காவிரி பிரச்சனை தீர்க்கப்படுகிறதோ? என்றைக்கு முல்லைப் பெரியாறு பிரச்சனை தீர்க்கப்படுகிறதோ? என்றைக்கு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படுகிறதோ? அன்றைக்கு வாங்கிக் கொள்வோம் தேசிய விருதுகளை.. அதுவரை எந்த விழாவும் வேண்டாம்.
டெல்லியில்தான் நம்மை மதிக்கமாட்டேன் என்கிறார்கள். தமிழ்நாட்டிலும் கூட அது தொடர்வதுதான் வேதனை," என்றார். இப்படி பேசிவிட்டு பாதியிலேயே வெளியில் சென்றுவிட்டார் தங்கர் பச்சான்.
தொடர்ந்து பேசிய கவிஞர் வைரமுத்து, "தங்கர் பச்சான் ஆதங்கம் நியாயமானதுதான். ஆனால் அதற்காக இதுபோன்ற விழாக்களே வேண்டாம் என்றால் எப்படி... இந்த மாதிரி மேடைகள் இருந்தால்தான் நமது மனக்குமுறல்களை வெளிக்காட்ட முடியும்," என்றார்.
கடைசியாகப் பேசிய அமீர், "தங்கர் பச்சான் விழாக்களே வேண்டாம் என்றது இது போன்ற இசை வெளியீட்டு விழாக்களை அல்ல. திரைப்பட விழாக்களை... அரசியல் கட்சிகளில் போர்வாள் என்று சில பேச்சாளர்களைச் சொல்வார்கள். அந்த மாதிரி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட போர்வாள். அதில் தங்கர் பச்சான், செல்வமணி, நான், பசங்க பாண்டிராஜ் எல்லோரையும் சேர்த்துக்கலாம்," என்றார் சிரிப்புடன்.


Click it and Unblock the Notifications











