Don't Miss!
- Finance 3 பெரிய வங்கிகளின் திடீர் முடிவு.. சேவை கட்டணத்தில் புதிய மாற்றம்.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!
- News வீடுகள், நகைகளை கூட காங்கிரஸ் பறித்துக் கொள்ளும்.. சர்ச்சைக்கு நடுவே பிரதமர் மோடி மீண்டும் பேச்சு
- Technology ஒரே ரீசார்ஜ்.. 84 நாட்களுக்கு நோ டென்ஷன்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அசத்தும் BSNL..
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Lifestyle இந்த ஆரோக்கியமான உணவுகளை பச்சையாக சாப்பிடுவது உங்கள் இரைப்பையை கடுமையாக பாதிக்கமாம்... ஜாக்கிரதை...!
- Automobiles உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
- Sports IPL 2024 : சிஎஸ்கே அணியின் அடுத்த போட்டி எப்போது? எந்த அணியுடன்? வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறதா?
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தேசிய விருது பெறும் 'டூ லெட்' படத்தில் நடித்தது எப்படி? - சந்தோஷ் நம்பிராஜன் பேட்டி #Exclusive
Recommended Video
சென்னை : இன்று 65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது செழியன் இயக்கியிருக்கும் 'டூ லெட்' திரைப்படம்.
இன்னும் திரையில் வெளியாகாத 'டூ லெட்' திரைப்படம் சர்வதேச அளவில் விருதுகளைக் கைப்பற்றி வருகிறது. இப்படத்தில் லீட் ரோலில் நடித்திருக்கும் சந்தோஷ் நம்பிராஜன் கவிஞர் விக்ரமாதித்யனின் இரண்டாவது மகன்.
'டூ லெட்' படத்தில் நடித்து ரசிகர்களின் பரவலான கவனத்திற்கு உள்ளாகியிருக்கும் சந்தோஷ் நம்பிராஜனிடம் 'டூ லெட்' படம் குறித்தும், தேசிய விருது பெற்றது குறித்தும் பேசினோம்.
டூ லெட் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது பற்றி?
" 'டூ லெட்' வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து மாறுபட்ட இன்டிபென்டன்ட் மூவி. தேசிய விருது கிடைத்திருப்பதன் மூலமாக இந்தப் படம் இன்னும் அதிகமான பார்வையாளர்களைச் சென்றடையும். ஒரு சரியான படத்தை விருதுக்குத் தேர்ந்தெடுத்ததுக்கு ஷேகர் கபூர் தலைமையிலான தேர்வுக் குழுவுக்கு நன்றிகளைத் தெரிவிச்சுக்குறோம்."
அருவி, அறம் மாதிரி நிறைய நல்ல படங்களுக்கு மத்தியில் டூ லெட் படத்துக்கு விருது..?
"சிறந்த படங்கள் நிறைய இருக்கும்போது நிச்சயம் பலத்த போட்டி உருவாகியிருக்கும். 'அருவி', 'அறம்' மாதிரி நல்ல படங்களோட போட்டியா இடம்பிடிச்சிருக்கு 'டூ லெட்'. வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் அவை. எங்க படம் இனிமே தான் தியேட்டரில் ரிலீஸ் பண்ணத் திட்டமிட்டிருக்கோம். ரசிகர்களின் பரவலான கவனத்துக்கு இப்போ வந்திருக்கிறது மகிழ்வான விஷயம்."
செழியன் உடனான உங்கள் பயணம் எங்கே தொடங்கியது?
"செழியன் சார், பி.சி.ஶ்ரீராம் சார் கிட்ட அசிஸ்டென்ட்டா இருக்கும்போது இருந்து எனக்குத் தெரியும். நான் தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல சினிமாட்டோகிராஃபி படிச்சேன். அப்போ அவர் பி.சி சார் கிட்ட இருந்தார். அவர் முதல் படமான 'கல்லூரி' பண்ணும்போது நான் அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தேன். அவருக்கும் எனக்கும் 13 வருடப் பழக்கம். எனக்கு அவர் அண்ணன் மாதிரின்னு சொல்றதை விட அண்ணன்னே சொல்லலாம்."
செழியன் இயக்கத்தில் நடித்தது?
"செழியன் சார் படம் இயக்குறதுக்காகத்தான் சென்னைக்கு வந்தார். உலக சினிமா பற்றி நிறைய பேசியிருக்கார். எழுதியிருக்கார். அப்படி இருக்கும்போது அவரும் உலகத்தரத்தில் ஒரு படம் பண்ணணும்னு நினைச்சார். அவரே சொந்தக் காசு போட்டுத்தான் இந்தப் படம் எடுத்தார். இந்த மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு.. நீ நடிக்கணும்னு சொன்னார்."
முக்கிய ரோல்?
"நான் ஏதோ கேரக்டர் ஆர்டிஸ்டா தான் கூப்பிடுறாரோன்னு நினைச்சேன்.ஸ்கிரிப்ட் நல்லாருக்குண்ணே.. இதுல நான் எந்தக் கேரக்டர்னு கேட்டதும், 'இந்த லீட் கேரக்டர் நீதான் பண்ற'னு சொன்னார். எனக்கு முதலில் அதிர்ச்சியா இருந்துச்சு. நம்மளை வச்சு எப்படின்னு எனக்கே நம்பிக்கை இல்லை. புதுமுகம்.. அதுவும், தமிழ் சாயல் இருக்கணும். சர்வதேச அளவுக்குப் போறதால வழக்கமான ஒரு ஹீரோவா இல்லாம ஒரு அப்பாவித்தனமான ஆள் வேணும்னு சொன்னார்."
நடித்த அனுபவம்?
"நடிக்காம, இயல்பா இருக்கிற, கேரக்டரோட ஒத்துப்போகுற ஆட்கள் தான் இந்தப் படத்துக்கு சரியா இருக்கும். நீ சரியா இருப்பனு சொன்னார். ஃபோட்டோ ஷூட், டெஸ்ட் ஷூட் வெச்சாங்க. ரெஜின் ரோஷன்னு ஒரு நடிப்பு பயிற்சியாளர் எனக்குப் பயிற்சி கொடுத்தார். அப்புறம் ஷூட்டிங் போனோம். சொல்லிக்கொடுத்ததை படத்துல பண்ணியிருக்கேன்."
பாராட்டு..? அடுத்த பட வாய்ப்பு..?
"ஒளிப்பதிவை விட நடிக்கிறதுக்கு தான் நிறைய பேர் பேசுறாங்க. அடுத்த படங்கள் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இருக்கு. கூடிய விரைவில் அதுபற்றி சொல்றோம். தேசிய விருதுக்கு தேர்வானதை அடுத்து நண்பர்கள் பாராட்டுறாங்க. 'டூ லெட்' படம் இன்னும் ரிலீஸ் ஆகாததால் யாரும் பார்க்கலை. எல்லோரும் ஆர்வமா இருக்காங்க. படம் வந்ததுக்கு அப்புறம் நல்ல ரீச் கிடைக்கும்னு நம்புறோம்."
படத்தில் உங்களுக்கு என்ன கேரக்டர்?
"நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதரா லீட் ரோல் பண்றேன். 2007-ல் நடக்கிற கதை. உலகமயமாக்கல் சென்னையில் பரவலாகும்போது அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கு என்னென்ன சிரமங்கள் ஏற்பட்டதுன்னு சொல்றதுதான் கதை. இந்தப் படத்தை பெங்களூர்ல ஸ்க்ரீன் பண்ணும்போது மொழி புரியலைன்னாலும், சப் டைட்டிலோடு படம் பார்த்த பலர் இங்கேயும் அதை அனுபவிச்சுருக்கோம்னு சொன்னாங்க. பெரிய நகரங்கள் எல்லாத்திலேயும் உலகமயமாக்கல் இது மாதிரியான விளைவுகளை உண்டாக்கி இருக்கு."
டூ லெட் டைட்டில்?
"உலகமயமாக்கலால் நடுத்தர மக்கள் நகரத்தை விட்டு வெளியேறினாங்க. சென்னையில் தங்குறதுக்கு வீடு தேடுறது அதைத் தொடர்ந்து சில பிரச்னைகள்னு இன்னும் பிரச்னைகள் இருந்துக்கிட்டே தான் இருக்கு. ஒரு குடும்பம் சென்னையில் வீடு வாடகைக்கு தேடுறப்போ என்ன என்ன விஷயங்கள் நடக்குதுங்கிறது தான் கதை. அதுக்காகத்தான் அந்த டைட்டில்." ஒளிரும் நம்பிக்கையோடு பேசி முடித்தார் சந்தோஷ் நம்பிராஜன்.