வடிவேலுவை கடவுளா பார்த்தாரு எங்கப்பா.. ஆனால், கடைசி வரை அவர் உதவல.. போண்டா மணி மகன் உருக்கம்!
சென்னை: நகைச்சுவை நடிகர் போண்டா மணி சில தினங்களுக்கு முன்னதாக வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. சென்னை, குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நடந்த இறுதிச்சடங்குக்கு அவருடன் இணைந்து நடித்த சில காமெடி துணை நடிகர்களும் நகைச்சுவை நடிகர் செந்தில் உள்ளிட்டோரும் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இலங்கையில் இருந்து சினிமா ஆர்வத்தின் காரணமாக சென்னை வந்த கேத்தீஸ்வரன் தனது பெயரை போண்டா மணி என கவுண்டமணி ஸ்டைலில் மாற்றிக் கொண்டு பாக்கியராஜ் இயக்கி நடித்த பவுனு பவுனுதான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சிறுநீரக பாதிப்பு காரணமாக டயாலிசிஸ் செய்து வந்த அவர் திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மகன் சாய் யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டி ரசிகர்களை உருகச் செய்துள்ளது.

போண்டா மணி மரணம்: காமெடி நடிகர் போண்டா மணி கடந்த டிசம்பர் 23ம் தேதி இரவு வீட்டு வாசலில் விழுந்த நிலையில், அவரது உயிர் பிரிந்து விட்டது. மயங்கிக் கிடந்த நிலையில் இருந்த அவரை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக குடும்பத்தினர் கொண்டு சென்ற நிலையில், உங்க அப்பா இறந்துட்டாருப்பா என போண்டா மணியின் மகனிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். வீட்டில் இருந்து கொண்டு சென்ற போது கால் லேசாக அசைந்த நிலையில், எப்படியாவது அப்பாவை காப்பாற்றி விடலாம் என நினைத்தோம் ஆனால், முடியவில்லை என போண்டா மணியின் மகன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
வறுமையிலும் திறமை: 1963ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்தில் பிறந்தவர் போண்டா மணி. பாக்கியாராஜ் இயக்கி நடித்த பவுனு பவுனுதான் படத்தில் நடித்து 1991ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். வடிவேலு, விவேக், மயில்சாமி உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் பல படங்களில் நடித்தார். சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட சில படங்களில் போண்டா மணி தனித்து தெரிந்தார்.

சில சீரியல்கள்: சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள போண்டா மணி சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்த கங்கா யமுனா சரஸ்வதி தொடரில் நடித்து பிரபலமானார் போண்டா மணி. பூவே பூச்சூடவா, எங்க வீட்டு மீனாட்சி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.
கதறி அழுத மகன்: போண்டா மணியின் இறுதிச்சடங்கில் அவரது உடலுக்கு அருகே மனைவியும் மகளும் அழுது கொண்டு நிற்கின்றனர். கூடவே போண்டா மணியின் மகனும் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார். அப்பா தான் இதுவரை குடும்பத்தை பார்த்துக் கொண்டார். இப்போ அவரும் போய் விட்டார் எங்கள் குடும்பத்தை இனிமேல் யார் பார்த்துக் கொள்வார். நடிகர் சங்கம் மற்றும் அரசாங்கம் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
வடிவேலு உதவவில்லை: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் எங்கப்பா வடிவேலு சாரை தான் கடவுள் போல நினைத்து வந்தார். ஆனால், கடைசி வரை எங்கப்பாவை அவர் வந்து சந்திக்கவோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கவோ வரவில்லை என போண்டா மணிக்கும் அவரது குடும்பத்துக்கும் வடிவேலு உதவவில்லை என்பதை அவரது மகன் சாய் பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











