சாகுற வரைக்கும் வைரமுத்து மீது அப்பா கோபமாவே இருந்தாரு.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சொன்ன காரணம்!
சென்னை: இளையராஜா இசையில் 'நிழல்கள்' படத்தில் இடம்பெற்ற, "இது ஒரு பொன்மாலைப் பொழுது" பாடல்தான் வைரமுத்துவின் முதல் பாடல் என கூறிவரும் நிலையில், ஆஸ்கர் மூவிஸ் தயாரிப்பில் வெளியான, சூலம் படத்தில் தான் முதன்முறையாக வைரமுத்து பாட்டு எழுதினார் என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒன் இந்தியா தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பைரவி, சூலம், தீர்ப்புகள் திருத்தப்படலாம், சட்டத்தின் திறப்பு விழா, பெளர்ணமி அலைகள், சக்கரவர்த்தி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் பாஸ்கர் ஆஸ்கர் மூவிஸ் எனும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

ராதிகா சரத்குமார், ராஜ்குமார், சுதீர் உள்ளிட்டோர் நடித்து 1980ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி வெளியான சூலம் படத்தில் தான் முதன்முதலில் வைரமுத்து 2 பாடல்களை எழுதி அறிமுகமானார் என்றும் ஆனால், அதை அவர் மறைத்து விட்டது தான் தனது அப்பாவுக்கு கடைசி வரை வைரமுத்து மீது கோபம் வரக் காரணம் என பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு கூறியுள்ளார்.
சூலம் படத்தில் வைரமுத்து: இயக்குநர் பாஸ்கர் இயக்கத்தில் வெளியான சூலம் படத்தில் தான் இளையராஜா வைரமுத்துவை அறிமுகப்படுத்தினார். முதல் 2 பாடல்களை கண்ணதாசன் எழுதிய நிலையில், 3வது பாடலை புலமைப்பித்தனை எழுத வைக்கலாமா என்கிற பேச்சுகள் ஓடிக் கொண்டிருந்த நிலையில், இளையராஜா புதிதாக ஒரு பையன் வந்திருக்கான், நல்லா எழுதுறான், வாய்ப்புக் கொடுக்கலாம் என்றதும் அப்பா அவருக்கு வாய்ப்புக் கொடுத்தார். அந்த காலத்தில் தயாரிப்பாளர் இடத்திற்கு வந்து தான் இசையமைப்பாளர்கள் இசையமைப்பார்கள். கவிஞர்கள் வந்து பாட்டெழுதுவார்கள். இன்றைக்கு லண்டனில் இருந்து மியூசிக் போடுறேன், நியூசிலாந்தில் இருந்து இசையமைக்கிறேன் என்பது போல எல்லாம் அப்போது கிடையாது. ஒரே நாளில் இளையராஜா 2 பாடல்களை கம்போஸ் செய்து விடுவார். அந்த 2 பாடலுக்கும் வைரமுத்து சூலம் படத்திற்காக பாடல் எழுதினார்.

வைரமுத்து மறைச்சிட்டாரு: சூலம் படத்தில் இடம்பெற்ற "சூலம்.. சூலம்" மற்றும் "ஜூலி" பாடல்களை வைரமுத்து எழுதினார். முதலில் அவரது இயற்பெயரில் தான் அறிமுகமானார். ஆனால், திடீரென ரெக்கார்டிங் நடப்பதற்கு முன்னதாக வைரமுத்து என்கிற பெயரை மாற்றிக் கொண்டார். அதற்கும் அப்பா ஒப்புதல் அளித்தார். ஆனால், தனது முதல் படம் 'நிழல்கள்' என்றும் முதல் பாடல் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" தான் என வைரமுத்து அளித்த பேட்டி அப்பாவை கடுப்பாக்கி விட்டது என்றார்.
சாகுற வரை மன்னிக்கல: அதன் பின்னர் பல படங்களை தயாரித்து இயக்கினார். ஆனால், ஒரு படத்திற்கும் வைரமுத்துவை பாடல் எழுத அழைக்கவில்லை. சாகுற வரை வைரமுத்துவை அப்பா மன்னிக்கல. நானே ஒருமுறை அப்பாவிடம் நம்முடைய புதிய படத்துக்கு வைரமுத்து சாரை எழுத கூப்பிடலாமே என்றேன். ஏனென்றால் அவரது பாடல்கள் எல்லாம் அப்படி ஹிட் ஆகி வந்தன. ஆனால், அதன் பின்னர் தான் எனக்கே இந்த விவரங்களை அவர் கூறினார். சூலம் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியானது. நிழல்கள் திரைப்படம் ஒரு மாதத்திற்கு முன்னதாக நவம்பர் மாதம் 6ம் தேதி வெளியானது. ஆனால், தான் எழுதிய முதல் பாடல் சூலம் படத்திற்கான பாடல் என வைரமுத்து ஏன் சொல்லவில்லை என எனக்குத் தெரியவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











