தெலுங்கு சினிமாவுல பொக்கிஷம் மாதிரி பார்த்துக்குறாங்க.. தமிழில் அப்படி இல்லை - வரலட்சுமி சரத்குமார்
சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர். அண்மையில் இவரே இயக்கி நடித்த படமான எஸ். சரஸ்வதி படம் நேரடியாக தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி இருக்கையில் அவர் அளித்துள்ள பேட்டியில், தெலுங்கு சினிமாவில் அதிகம் நடிக்க காரணம் என்ன என்பது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவரது பேட்டியில்,போடா போடி படம் 2009இல் எடுக்கப்பட்டு, 2012ஆம் ஆண்டு வெளியானது, எனக்கு அந்த காலகட்டத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை, பல குழப்பங்களை எதிர் கொண்டேன், அதில் இருந்து வெளியேறினேன். அதன் பின்னர் தமிழில் சில படங்களில் நடித்தேன். பாலா சாரின் தாரை தப்பட்டை, விஜய் சார் உடன் சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்தேன். மேலும் சில படங்களில் நடிக்க கூட முயற்சி எடுத்தேன். ஆனால் எனது நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு எதுவும் அமையவில்லை. அது இதுவரைக்கும் அமையவில்லை.

மதிக்கிறாங்க: ஆனால் தெலுங்கு சினிமாவில் நான் அதிகம் கவனம் செலுத்த காரணம், அங்கு திறமைசாலிகளை மதிக்கிறார்கள், அவர்களுக்காக நல்ல கதாபாத்திரங்களை எழுதுகிறார்கள். நடிகர்கள் நடிகைகள் குறித்து மரியாதையாக எழுதுகிறார்கள். ஆனால் தமிழில் அப்படி இல்லை. தமிழ்நாடு தான் எனது சொந்த மண், ஆனால் எனக்கான வாய்ப்பும் எனது திறமைக்கான அங்கீகாரமும் கிடைக்கும் இடத்தில் நான் இருப்பது தானே சரியானதாக இருக்கும்? அதனால் தான் ஹைதராபாத்தில் இருக்கிறேன். எனது கணவரும் விரைவில் ஹைதராபாத்திற்கு குடிபெயர முடிவு செய்துள்ளார்" என்று கூறியுள்ளார்.
ராதிகா அறிவுரை: ஏற்கனவே இவரது எஸ் சரஸ்வதி படத்தின் புரோமோசனில் பேசும் போது, நடிகை ராதிகா, " வரலட்சுமியை நான் தான் தெலுங்கு சினிமாவில் நடிக்க முயற்சி எடுக்கச் சொன்னேன். அதற்கு காரணம் தெலுங்கு சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகளை மதிப்பார்கள் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சே பலரது கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், தற்போது வரலட்சுமி சரத்குமாரும் தெலுங்கு சினிமாவில் தனக்கு மதிப்பு கொடுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

திறமைசாலி: வரலட்சுமி சரத்குமாரைப் பொறுத்தவரையில், பெரிய கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தால் தான் மார்க்கெட் என்று நினைக்கும் பல கதாநாயகிகளுக்கு மத்தியில், ஒரு இன்றியமையாத நடிகையாக மாறி உள்ளார். சில கதாபாத்திரங்கள் எல்லாம் இவரைத் தவிர வேறு யாராலும், செய்ய முடியாது, வரலட்சுமி சரத்குமாரின் தேதிகள் எப்போது கிடைக்குமோ, அப்போது படத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று தீர்க்கமாக இயக்குநர்களே முடிவு எடுக்கும் அளவுக்கு திறமைசாலி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications