அந்த பாட்டுக்காக மண்டியிட்டு அழுதார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.. கண்கலங்கி உருகும் வித்யாசாகர்!
சென்னை: எஸ்.பி. பாலசுப்ரமணியம் நினைவுகளை நமது ஒன் இந்தியா நேயர்களுடன் பகிர்ந்து கொண்ட இசையமைப்பாளர் வித்யாசாகர், எஸ்.பி. பாலசுப்ரமணியம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
Recommended Video
உடல் நலக் குறைவு காரணமாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் இயற்கை எய்தியது ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரை பிரபலங்களையும் துயரக் கடலில் ஆழ்த்தி உள்ளது.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் நினைவலைகளை ஏகப்பட்ட பிரபலங்கள் நம்முடன் பகிர்ந்து வருகின்றனர். வித்யாசாகர் அளித்துள்ள பிரத்யேக பேட்டி குறித்து பார்ப்போம்.

இறைவனால் அனுப்பப்பட்ட தேவதூதன்
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவால் மனம் நொந்து இருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர் கண்ணீர் மல்க கொடுத்துள்ள பேட்டி வெளியாகி உள்ளது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஒரு தேவதூதன் என்றும், இறைவனால் இத்தனை கோடி மக்களை மகிழ்விக்க வேண்டும் என அனுப்பப்பட்டவர் என்றும் கூறி நெகிழ்ந்தார்.

ஈ, எறும்புக்கும்
யாரிடமும் கோபம் கொள்ள மாட்டார். சிறுவர்களையும் மதிக்கும் பண்பாளர், பாடகரை தாண்டி நல்ல மனிதர். ஈ, எறும்புக்கும் துரோகம் மனதாலும் நினைத்திருப்பாரா என்று கூட தெரியவில்லை. அந்த அளவுக்கு அன்பும் பாசமும் நிறைந்த நல்ல மனுஷன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் எனக் கூறியுள்ளார்.

6 மணிக்கு மேல பாட மாட்டேன்
அர்ஜுன் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் "மலரே மெளனமா" பாடல் பதிவிற்காக நான் அவரை அழைத்த போது, இப்ப எல்லாம் 6 மணிக்கு மேல மாலையில் பாடுவதில்லை என்றார். ஒரு முறை பாட்டை கேட்டுப் பாருங்க, நாளைக்கு காலையில கூட ரெக்கார்டிங் வச்சுக்கலாம் என்று அவரை அழைத்தேன்.

பாடிக் கொண்டே இருந்தார்
அந்த பாடலின் இசையை கேட்டதும் அவருக்கு என்ன தோன்றியது என்றே தெரியவில்லை. பாடிக் கொண்டே இருந்தார். நான் எப்பவோ ஓகே பண்ணிட்டேன். எனக்கு புடிச்சிருக்கு நான் பாடுறேன். நீ எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கோ, எது நல்லா இருக்கோ அதை ஓகே பண்ணு என இரவு 10.30 வரைக்கும் பாடினார் எஸ்.பி.பி என்ற மறக்க முடியாத தகவலை வித்யாசாகர் பகிர்ந்துள்ளார்.

மண்டியிட்டு அழுதார்
ஃபைனல் கம்போசிங் முடிந்து பாடலை கேட்பதற்கு ரெக்கார்டிங் தியேட்டர் வந்த அவர், பாடலை கேட்டு விட்டு, மண்டியிட்டு அழுதார். இந்த பாடல் குறிஞ்சி மலர் போல, அத்தி பூத்தது போல எப்போதாவது தான் கிடைக்கும் என்றார். மேலும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் இதனை அழகாக படமாக்குங்கள், கொச்சைப்படுத்தி விட வேண்டாம், பல காலம் நிலைத்திருக்கும் என கணித்த தீர்க்கத்தரிசி மறைந்து விட்டாரே என கதறினார் வித்யாசாகர்.


Click it and Unblock the Notifications