கடைசி விவசாயி கடைசி கலெக்ஷனே இவ்ளோ தான்.. புரொட்யூசருக்காக படம் பண்ண மாட்டேன் - விஜய் சேதுபதி!
சென்னை: கடந்த வாரம் சூரி, சந்தானம் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடித்த படங்கள் திரைக்கு வந்தன. அதில், சந்தானம் மற்றும் சூரி நடித்த படங்கள் 10 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளன. சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை விட சூரியின் மாமன் படம் சற்றே வசூலில் முந்தியிருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு வசூல் அறிவிப்பு போஸ்டரையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், இந்த வாரமும் பல சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகின்றன. டொவினோ தாமஸ், சேரன் நடிப்பில் உருவாகியுள்ள 'நரி வேட்டை' படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த் நடித்துள்ள 'ஏஸ்' திரைபப்டமும் இந்த வாரம் வெளியாகிறது.

'ஏஸ்' படத்தை புரமோட் செய்யும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், புரொட்யூசர்கள் பெரிய பட்ஜெட்டில் படம் பண்ண சொன்னால், படம் பண்ணுவீங்களா என்கிற கேள்விக்கு, புரொட்யூசருக்காக படம் பண்ண மாட்டேன். இயக்குநர்கள் மற்றும் கதைக்காகத்தான் ஒரு படத்தை பண்ணுவேன் எனக் கூறிய விஜய் சேதுபதி கடைசி விவசாயி படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
வசூலை வாரிக்கொடுத்த மகாராஜா: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சாச்சனா உள்ளிட்ட பலர் நடித்த மகாராஜா திரைப்படம் இந்தியாவை கடந்து சீனாவிலும் பல ரசிகர்களை கண்ணீர் கடலில் மூழ்க செய்தது. 150 கோடி அளவுக்கு அந்த படம் வசூல் செய்து விஜய் சேதுபதியை மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் மகாராஜாவாக அவரது 50வது படத்தில் அமர்த்தியது. ஆனால், அவர் நடிப்பில் விமர்சன ரீதியாக வெற்றிப் பெற்ற கடைசி விவசாயி படம் 1 கோடி ரூபாய் கூட வசூல் செய்யவில்லை என்பதை வெளிப்படையாக பேசியுள்ளார் மக்கள் செல்வன்.

கடைசி விவசாயி கடைசி கலெக்ஷன்: காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கிய இயக்குநர் எம். மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான 'கடைசி விவசாயி' படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால், அந்த படத்தின் மொத்த பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் வெறும் 65 லட்சம் ரூபாய் தான் என சமீபத்தில் 'கலாட்டா' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி வெளிப்படையாக பேசியுள்ளார். மக்கள் அந்த படத்தை தாமதமாக கொண்டாடினார்கள். படம் வெளியான போதே விமர்சகர்கள் முழு ஆதரவையும் அளித்தனர் என்றார்.
தயாரிப்பாளர்களும் அதை பண்ண மாட்டார்கள்: ஒரு பெரிய தயாரிப்பாளர் 300, 400 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் டேட் கொடுங்க என்று கேட்டால், கொடுப்பீங்களா என விஜய் சேதுபதியை பார்த்து தொகுப்பாளர் கேள்வி எழுப்ப, புரொட்யூசருக்காக எப்பவுமே படம் பண்ண மாட்டேன். இயக்குநருக்காகவும் கதைக்காகவும் தான் படம் பண்ணுவேன். புரொட்யூசர்களும் அப்படி நடிகர்களுக்காக பணத்தை வாரி இரைக்க மாட்டார்கள். இயக்குநர் சொல்லும் அந்த கதை மீது நம்பிக்கை ஏற்பட்டால் தான் பணம் போடுவார்கள் என அழகான விளக்கத்தை கொடுத்துள்ளார். இந்த வாரம் வெளியாகவுள்ள 'ஏஸ்' திரைப்படம் விஜய் சேதுபதிக்கு இன்னொரு மகாராஜா படமாக மாறுமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











