பிஸ்லரி வாட்டர்ல குளிக்கிறேன்னு சொல்லி சமாதி கட்டிட்டாங்க.. செல்லமே இயக்குநர் காந்தி கிருஷ்ணா பகீர்!
சென்னை: இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றிய இயக்குநர் காந்தி கிருஷ்ணா தான் ஒரு மிகப்பெரிய இயக்குநராக ஜொலிக்காமல் போனது ஏன் என்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களை கூறியுள்ளார்.
இந்தியன், சிவாஜி, இந்தியன் 2 வரை படங்களுக்கு ஷங்கருடன் இணைந்து இவர் பணியாற்றி உள்ளார். இன்ஜினியர் எனும் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாக நினைத்த காந்தி கிருஷ்ணாவுக்கு அவரது முதல் படமே டிராப் ஆகிவிட்டது.

விஷாலை வைத்து செல்லமே படத்தை இயக்கி வெற்றி பெற்ற காந்தி கிருஷ்ணா அதன் பின்னர் ஆனந்த தாண்டவம் படத்தை இயக்கினார். அந்த படம் சொதப்பிய நிலையில், அதன் பின்னர் எந்த ஒரு படமும் அவர் இயக்கவில்லை.
ஷங்கரின் உதவி இயக்குநர்: ஆரம்ப காலத்திலிருந்து இயக்குநர் ஷங்கருக்கு வலது கையாக இருந்தவர் காந்தி கிருஷ்ணா. ஜென்டில்மேன் மற்றும் காதலன் படங்களுக்கு பாலகுமரன் கதையாசிரியராக இருந்த நிலையில், இவர்தான் சுஜாதாவை இந்தியன் படத்துக்கு ஷங்கரிடம் அறிமுகம் செய்து வைத்ததாக கூறியுள்ளார். இந்தியன் படத்துக்கு ரஜினிகாந்த் முதலில் ஷங்கர் மைண்டில் இருந்த நிலையில், கமல்ஹாசன் தான் தன்னுடைய மைண்டில் இருந்ததாக காந்தி கிருஷ்ணா கூறியுள்ளார்.
செல்லமே இயக்குநர்: விஷாலை தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகப்படுத்தியது காந்தி கிருஷ்ணா தான். தனது முதல் படம் இன்ஜினியர் டிராப் ஆன நிலையில், விஷாலை வைத்து கமர்சியல் வெற்றி கொடுக்க வேண்டும் என செல்லமே படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். ஆனால், அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு காந்தி கிருஷ்ணாவை விஷால் கண்டுக்கவே இல்லை என்றும் கூறியுள்ளார்.
விஷால் பிரதமர் ஆனால் கூட என்ன?: விஷாலை வைத்து மீண்டும் படம் இயக்கலாம் என நினைத்து அவரை சந்திக்க சென்றபோது கேரவனில் அமர்ந்து கொண்டிருந்த விஷால் வெளியே உட்காரும்படி உத்தரவிட்டதாகவும், சில மணி நேரம் கழித்து வெளியே வந்தவர் தன்னை சந்தித்து விட்டு சீக்கிரம் படம் பண்ணலாம் என்றார். ஆனால் அந்த நாள் இன்னமும் வரவில்லை. விஷால் அரசியலுக்கு வருவது அரசியலுக்கு வந்த முதலமைச்சர் அல்லது பிரதமர் ஆனால், கூட எனக்கு என்ன கவலை. அவருடன் உறவு முடிந்துவிட்டது எனக் கூறியுள்ளார்.
சமாதி கட்டிட்டாங்க: இயக்குநராக மிகப்பெரிய அளவில் வருவேன் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், படப்பிடிப்பில் பிஸ்லரி வாட்டரில் குளிக்கிறேன் என்றெல்லாம் கதை கட்டிவிட்டு தயாரிப்பாளருக்கும் தனக்கும் பிரச்சினை ஏற்படுத்தியதாகவும் அதன் பின்னர் எந்த கம்பெனிக்கு போனாலும் சிக்கல்களை சிலர் கொடுத்து எனக்கு சமாதி கட்டிட்டாங்க என உருக்கமாக காந்தி கிருஷ்ணா பேசியுள்ளார்.
கரிகாலன் டிராப்: சியான் விக்ரமை வைத்து கரிகாலன் படத்தை இயக்க திட்டமிட்டேன். சில நாட்கள் படப்பிடிப்பும் தொடங்கியது. ஆனால், நான் கேட்ட பட்ஜெட்டை தயாரிப்பாளர்கள் கொடுக்க தயாராக இல்லாத நிலையில், அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டேன். அது அப்படியே டிராப் ஆகி விட்டது என்றும் காந்தி கிருஷ்ணா கூறியுள்ளார். இயக்குநராக ஆக முடியவில்லை என்றாலும் இணை இயக்குநராக பணியாற்றுவதில் தனக்கு எந்தவொரு ஈகோவும் இல்லை எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











