குஷ்பு மகள் திருமணத்திற்கு ஏன் போகல? காரணத்தை உடைத்துச் சொன்ன ராதாரவி.. என்ன பிரச்னை?
சென்னை: நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு - இயக்குநர் சுந்தர்.சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் அண்மையில் கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமண விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில், அந்த திருமணத்திற்கு தனக்கு அழைப்பு வராதது குறித்து நடிகர் ராதாரவி அளித்துள்ள பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் நடிகர் நாசர் தனது மனைவி கமீலாவுடன் கலந்து கொண்டார். அதேபோல் நடிகர் பாக்யராஜ், நடிகைகள் த்ரிஷா, தமன்னா உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டதால், இந்த திருமணம் கடந்த வாரம் கோலிவுட்டில் அதிகம் பேசப்பட்ட நிகழ்வாக மாறியது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ராதாரவியிடம், "குஷ்பு - சுந்தர்.சி மகள் திருமணத்திற்கு நீங்கள் ஏன் செல்லவில்லை?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "என்னை அவர்கள் அழைக்கவே இல்லை. அழைக்காத இடத்திற்கு நான் எப்படி போவேன்? மதியாதார் தலைவாசல் மிதிக்க மாட்டேன்," என்று வெளிப்படையாக கூறினார். அதோடு தனது வருத்தத்தையும் பகிர்ந்த ராதாரவி, "ஒரு காலத்தில் குஷ்புவும் நானும் அதிமுகவில் இருந்தோம். அப்போது அவர் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்காக நான் நேரில் சென்று பிரச்சாரம் செய்திருக்கிறேன். அதேபோல் சுந்தர்.சி தேர்தலில் போட்டியிட்டபோதும் அவருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தேன். வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்தினேன். அந்த அளவுக்கு எங்களுக்கு நல்ல பழக்கம் இருந்தது," என்றார்.

மேலும் பேசிய அவர், "சுந்தர்.சி கண்டிப்பாக மகள் திருமணத்திற்கு என்னை அழைப்பார் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அழைப்பு வரவில்லை. இப்போது அவர்களுடைய வட்டாரமும், பழகும் வட்டமும் பெரியதாகிவிட்டது போல. அவர்கள் முக்கியமானவர்களின் பட்டியலில் நான் இல்லாமல் போயிருக்கலாம். அதற்கு மேல் என்ன சொல்ல முடியும்," என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
நன்றி சொன்ன குஷ்பு: இதோடு நெகிழ்ச்சியான ஒரு பழைய சம்பவத்தையும் ராதாரவி நினைவுகூர்ந்தார். "ஒரு முறை ஒகேனக்கல்லில் படப்பிடிப்பு முடிந்து குஷ்பு சேலம் செல்ல வேண்டியிருந்தது. அப்போது கடுமையான காற்று வீசியதால் காரை ஓட்டவே அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அந்த சூழ்நிலையில் நான் அவரை என்னுடைய காரில் பாதுகாப்பாக அழைத்துச் சென்று விட்டேன். அப்போது குஷ்பு, 'அண்ணா, ரொம்ப நன்றி. நீங்கள் மட்டும் இல்லையென்றால் நான் எப்படி வந்திருப்பேன் என்று தெரியவில்லை' என்று நெகிழ்ச்சியுடன் கூறியதை இன்னும் மறக்க முடியவில்லை," என்றும் ராதாரவி கூறினார்.
நீண்டகால நட்பு இருந்தும் மகள் திருமணத்திற்கு அழைப்பு வராதது குறித்து ராதாரவி வெளிப்படையாக மனக்குமுறலை பகிர்ந்திருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அவரது இந்த பேட்டிக்கு ஆதரவாகவும், எதிராகவும் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வரும் நிலையில், கோலிவுட்டிலும் இந்த விவகாரம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications