ஷங்கரின் ஐ பட இசை வெளியீடு... ஜாக்கி சான், அர்னால்ட் பங்கேற்பது உறுதி
ஷங்கரின் ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை மற்றும் ஹைதராபாதில் நடக்கிறது.
இந்த விழாக்களில் சர்வதேச அளவில் முன்னணி நட்சத்திரங்களான ஜாக்கி சானும் அர்னால்ட் ஸ்வார்ஷ்நெக்கரும் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
ஷங்கரும் விக்ரமும் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் ஐ. எமி ஜாக்சன் நாயகியாக நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

2 ஆண்டுகள்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடந்தது. படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவற்றில் எது உண்மை, எது மிகையான சமாச்சாரம் என்பதையெல்லாம் சொல்ல வேண்டிய ஷங்கரோ, அமைதி காக்கிறார்.

ரூ 150 கோடி
இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ 150 கோடி என்கிறார்கள். இந்தத் தொகையை முததல் வாரத்துக்குள் அள்ள வேண்டும். எனவே அதிக அரங்குகளில் வெளியிடுகிறார்கள். 4000 அரங்குகள் என ஒரு தரப்பு சொல்லிக் கொண்டிருக்க, சில நாளிதழ்கள் 15000 அரங்குகள் என குறிப்பிட்டுள்ளன.

இசை வெளியீடு
இந்தப் படத்தின் இசையை கனடாவில் வெளியிடப் போவதாகவும் அதில் அர்னால்ட் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என்றும் முதலில் அறிவித்திருந்தனர். ஆனால் இப்போது அதில் மாற்றம். இந்தியாவிலேயே இசை வெளியீட்டை நடத்தப் போகிறார்கள்.

சென்னையில்
ஐ படத்தின் தமிழ்ப் பாடல்களை சென்னையில் பிரமாண்டமாக நடத்துகிறார்கள். சென்னையில் பாடல்களை வெளியிடப் போகிறவர், டெர்மினேட்டர் புகழ் அர்னால்ட் ஸ்வார்ஷ்நெக்கர்.

ஹைதராபாதில்
ஐ தெலுங்குப் படத்தின் பாடல்களை ஹைதராபாதில் வெளியிடப் போகிறவர் ஆக்ஷன் நாயகன் ஜாக்கி சான். ஏற்கெனவே ஆஸ்கர் ரவிச்சந்திரன் அழைப்பின் பேரில், சென்னையில் தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று கலக்கியவர் ஜாக்கி சான்.
விழா நடக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











