தாத்தான்னு கூப்ட்றாதீங்கப்பா!- இளம் இயக்குநர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள்
சென்னை: மூத்த கலைஞன் என்பதால் இளம் இயக்குநர்கள் என்னை அப்பா என்கிறீர்கள். அத்தோடு நிறுத்திக் கொள்ளவும், தாத்தா என்று அழைத்துவிட வேண்டாம், என்றார் இயக்குநர் பாரதிராஜா.
மைனா, சாட்டை படங்களைத் தந்த ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள அடுத்த படம் மொசக்குட்டி. இந்தப் படத்தில் புதுமுகம் வீரா நாயகனாவும், சாட்டை நாயகி மகிமா நாயகியாகவும் நடித்துள்ளனர். ஜீவன் இயக்கியுள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சத்யம் சினிமாஸில் நடந்தது.

விஞ்ஞானம்
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "இன்றைய சினிமா நிறைய மாறிவிட்டது. டிஜிட்டல்மயமாகிவிட்டது. விஞ்ஞான வளர்ச்சி உங்களுக்கெல்லாம் கைகொடுக்கிறது. நிறைய படித்துவிட்டு சினிமா எடுக்க வருகிறீர்கள்.

தாத்தான்னு கூப்பிட்றாதீங்க
மூத்த கலைஞன் என்பதால் என்னை ‘அப்பா' என்று அழைப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ‘தாத்தா' என்று அழைத்து விடாதீர்கள். காரணம் நானும் உங்களோடு போட்டி போட வருகிறேன், இன்னும் இரு ஆண்டுகளில்.

ஜீவன்
இந்த ‘மொசக்குட்டி' படத்தின் இயக்குனர் ஜீவன், என் மதுரை மண்ணில் இருந்து வந்திருக்கிறான். காய்ந்த பூமியிலிருந்து வந்தவன். புகைப்பட கலைஞனாக, ஒளிப்பதிவாளனாக இருந்தவன், இப்போது இயக்குனராக வந்திருக்கிறான்.

மண்வாசனையோடு
மண்வாசனையோடு படங்களை எடுக்க வேண்டும். தாய்ப்பால், தாய்ப்பால்தான். அதற்கு நிசமான மாற்று கிடையாது. நம் மண்ணின் வாழ்க்கையை நாம்தான் மீட்டெடுக்க வேண்டும். நமது கலாச்சாரம், பண்பாடு, மண் சார்ந்த படங்களை எடுக்க வேண்டும்.

நோ செகன்ட் இன்னிங்ஸ்
இயக்குனர் பிரபு சாலமன் இங்க பேசும்போது ‘நான் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிக்கணும்'னு சொன்னார், நான் என்னவோ சினிமாவைவிட்டே போயிட்டமாதிரி. நான் சினிமாவை விட்டு ஒண்ணும் ஒதுங்கிப் போகல. சினிமாக் கலைஞனுக்கு ஒரே இன்னிங்க்ஸ்தான். ரெண்டாவது இன்னிங்க்ஸ் எல்லாம் கெடையாது.

என் படங்களை வியக்கிறேன்
இப்போதும் என் பழைய படங்களை பார்க்கிறபோது வியப்பாகத்தான் இருக்கு. உங்களோட நானும் நிச்சயமா போட்டி போடுவேன். அடுத்த இரு ஆண்டுகளில் ஒரு மூணு படங்கள் தரப் போகிறேன்... அப்புறம் சொல்லுங்க!," என்றார்.


Click it and Unblock the Notifications











