ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த முதல் தமிழ் ராப் பாடகரின் புது ஆல்பம்!
ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த முதல் தமிழ் ராப் பாடகர் என்ற பெருமையைப் பெற்ற ஹிப் ஹாப் தமிழன் ஆதி, தனது இரண்டாவது இசை ஆல்பத்தை விரைவில் வெளியிடுகிறார்.
'க்ளப்புல மப்புல திரியிற பொம்பள என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டுல...' என்ற பாடல் மூலம் பிரபலமானவர் ஆதி.

கோவையைச் சேர்ந்த இளைஞர். எஞ்ஜினியரிங் முடித்துவிட்டு, வெளிநாட்டு வேலைக்கெல்லாம் போகாமல், இசைத் துறையைத் தேர்வு செய்தவர்.
சினிமா தவிர்த்து, தனி இசை ஆல்பங்கள் பெரும்பாலும் தமிழில் பெரிய அளவில் எடுபடுவதில்லை. அந்தப் போக்கை கடந்த ஆண்டு உடைத்தார் ஆதி. இவரது ஹிப் ஹாப் தமிழா சர்வதேச அளவில் ஹிட்டானதுடன், இந்தியாவின் முதல் தமிழ் ஆல்பம் என்ற பெருமையையும் பெற்றது.
இதைத் தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை படங்களில் அனிருத் இசையில் எதிர் நீச்சலடி, சென்னை சிட்டி கேங்ஸ்டா பாடல்களைப் பாடினார்.
ஹாலிவுட் படமான ஸ்மர்ப் 2-ல் இடம்பெற்ற நா நா நா பாடலுக்கு இவர்தான் இசையமைத்தார். இதன் மூலம் ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த முதல் தமிழ் ராப் பாடகர் என்ற பெருமை ஆதிக்கு கிடைத்தது.

இப்போது ரெமி மார்ட்டின் ஹிப் ஹாப் அமைப்புடன் இணைந்து இரண்டாவது ஆல்பத்தை வெளியிடுகிறார் ஆதி. இந்த ஆல்பத்துக்கு சூட்டப்பட்டுள்ள தலைப்பு 'இன்டர்நேஷனல் தமிழன்'.
இந்த ஆல்பத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ஆதி, 'இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் சிறப்பு விருந்தினர்கள் என்று யாரையும் அழைக்கவில்லை. காரணம், நான் இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளேன். எனக்கு எல்லாமே மீடியாதான். அந்த ஆதரவுதான் என்னை ஹாலிவுட் வரை அழைத்துப் போனது. இந்த இரண்டாவது ஆல்பத்தை ரெமி மார்ட்டின் ஹிப் ஹாப் மூலம் வெளியிடுவது பெருமையாக உள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications











