நள்ளிரவில் உயிர் பிரிந்தது.. கடைசி வரை நிறைவேறாத ஷிஹான் ஹுசைனியின் ஆசை!
சென்னை: ரத்த புற்றுநோய் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 60. இவரது மறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த நேரத்தில் அவர் ஒருவரை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அந்த ஆசை கடைசி வரை நிறைவேறவே இல்லை என அவரது ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர்.
மதுரையை சேர்ந்தவர் கராத்தே மாஸ்டரான ஹுசைனி கே.பாலச்சந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, வேலைக்காரன், வேடன், விஜய் நடித்த 'பத்ரி' படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்திருந்தார். கடைசியாக இவர் விஜய் சேதுபதி நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஜெயலலிதா மீது அதீத அன்பு கொண்ட இவர், 2005 ஆம் ஆண்டு அவரது 56 வது பிறந்த நாளில், தனது ரத்தத்தை பயன்படுத்தி 56 ஓவியங்களை வரைந்தார்.

ஷிஹான் ஹுசைனி: அண்மையில் இவர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்தனர். தனது சிகிச்சைக்காக யாரிடமும் கையேந்த போவதில்லை என்றும் தனது சொத்துக்களை விற்று அதன் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாகவும் கூறி இருந்தார். ஆனால், நேற்று நள்ளிரவு சிகிச்சை பலன் அளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது. ஹுசைனி மருத்துவமனையில் இருக்கும் போது விஜய்யை பார்க்க வேண்டும் என்றும், வில்வித்தையை தமிழகம் முழுவதும் பரப்ப விஜய் முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால், கடைசி வரை அந்த ஆசை நிறைவேறாமலே அவர் உயிர் பிரிந்தது.

கண்கலங்கும் பதிவு: மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த போது, அவரது உடலை தானம் செய்வதாக அறிவித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல், கோழைக்கு பலமுறை சாவு, ஆனால் வீரனுக்கு ஒரு முறை தான் சாவு. யாரும் நான் இறந்துவிட்டால் வருத்தப்பட வேண்டாம். நான் வாழ்ந்த காலங்களில் மிகவும் கொண்டாட்டமாக வாழ்ந்து விட்டேன். இதனால், என்னுடைய மரணமும் கொண்டாட்டமாக இருக்க வேண்டும். யாராவது என்னை மிஸ் செய்தால், என்னுடைய சோஷியல் மீடியாவை பாருங்கள், நான் எவ்ளோ ஃபன் பண்ணி இருக்கேன் என்று, அதைப் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கு நல்லாவே புரியும். வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் தான். என்று பேசி பலரை கண் கலங்க வைத்திருந்தார். பலரும் இவர் எப்படியாவது குணமடைந்து வரவேண்டும் என பிராத்தனை செய்து வந்த நிலையில் நேற்று இரவு அவரது உயிர் பிரிந்தது. தற்போது, அவரது உடல் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு கராத்தே மற்றும் வில்வித்தை விளையாட்டு வீரர்கள், திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











