மாவட்டந்தோறும் நயன்தாராவுக்கு எதிரான போராட்டம்! - இந்து மக்கள் கட்சி
சென்னை: சீதை வேடத்தில் நயன்தாரா நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதுப்படம் தயாராகிறது. ராமாயண கதையை இதில் படமாக்குகின்றனர்.
இதில் ராமர் வேடத்தில் பாலகிருஷ்ணா நடிக்கிறார். சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
பாஸ் என்ற பாஸ்கரன் படத்துக்கு பின் சில நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார். சினிமாவுக்கு அவர் முழுக்கு போட்டு விட்டதாகவும் தகவல் பரவின.
இந்த நிலையில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிக்க கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஏற்கெனவே ஆந்திராவிலும் எதிர்ப்பு கிளம்பி அடங்கிய நிலையில், தமிழகத்தில் இந்து மக்கள் கட்சி மீண்டும் எதிர்ப்பைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
"ராமனையும், சீதையையும் இந்துக்கள் கடவுளாக வணங்குகிறார்கள். சீதை பெண் இனத்துக்கு முன் மாதிரியாக போற்றப்படுகிறார். ராமாயணம் பெண் ஆசை கூடாது, ஏகபத்தினி விரதன் என்றெல்லாம் போதித்த காவியம்.
ஆனால் நயன்தாராவோ இன்னொரு பெண்ணின் கணவரை அபகரிக்க முயற் சிக்கிறார். அவர் சீதை வேடத்தில் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக அமையும். சீதையாக நயன்தாரா நடிக்கக்கூடாது. அவர் இந்த வேடத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
முதல்கட்டமாக கோவை, திருப்பூரில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
படிப்படியாக அனைத்து மாவட்டங்களில் நயன்தாராவுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்படும்."
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications











