சேது இல்லன்னா நாங்க அஞ்சு பேருமே இல்ல - அமீர் பேச்சு
சென்னை: பாலா இயக்கிய சேது படம் மட்டும் இல்லையென்றால் நாங்கள் ஐந்து பேர் இயக்குநராகியிருக்க முடியாது என்று இயக்குநர் அமீர் கூறினார்.
அமீரிடமும், சசிகுமாரிடமும் உதவியாளராகப் பணியாற்றிய துரைவாணன் இயக்குநராக அறிமுகமாகும் படம் யாசகன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது.
படத்தின் இசைத் தகடுகளை அமீர் வெளியிட சசிகுமார் பெற்றுக்கொண்டார்.

எப்போதாவது பார்த்துக் கொள்வோம்
விழாவில் அமீர் பேசும்போது, "யாசகன் என் படம் மாதிரி. பாலா, அமீர், சசிகுமார், சமுத்திரக்கனி என நாங்கள் அனைவரும் காலையில் எழுந்ததிலிருந்து பல் தேய்ப்பது, சாப்பிடுவது என அனைத்தையும் ஃபோனில் பேசிக்கொள்வதாக நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல. நாங்கள் இப்படி ஏதாவது நிகழ்ச்சியில் பார்த்துக் கொண்டால் தான் உண்டு.

காலரைத் தூக்கிவிட்டுக் கொண்ட பாலா
நாங்கள் 5 பேர் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து சினிமா என்றால் என்னவென்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது திரையுலகில் மதிக்கக்கூடிய இடத்தில் இருக்கிறோம்.
நான் மௌனம் பேசியதே படம் எடுக்கும் போது, பாலா நான் அவர் பெயரைக் கெடுத்து விடுவேனோ என்று நினைத்தார். ஆனால் நான் அவரது பெயரை அடுத்தடுத்த படங்களில் காப்பாற்றிவிட பருத்திவீரன் படத்தை பார்த்துவிட்டு 'இவன் என் அசிஸ்டண்ட்' என காலரை தூக்கிவிட்டுக் கொண்டார்.

நானும் பயந்தேன்
சசிகுமார் படமெடுக்கும்போது எனக்குப் பயமாக இருந்தது. சுப்ரமணியபுரம் திரைப்படம் பார்த்தபிறகு நானும் காலரை தூக்கிவிட்டுக் கொண்டேன். இப்போது சசிகுமாரின் அசிஸ்டண்டுகள் வந்து இயக்குகின்றனர்.

ரஜினி படத்தை வெளியிட்ட சன் இப்போ..
ரஜினி படத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் சசிகுமார் நடித்த படத்தை வெளியிடுவது எனக்கு பெருமையான விஷயம். பொதுவாகவே உதவியாளர்கள் சினிமாவில் ஜெயிக்கும்போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் இருக்காது.
இந்த மேடை சேது கொடுத்த வெற்றி தான். சேது தோல்வி அடைந்திருந்தால் பாலா கிடையாது, அமீர் கிடையாது, சசிகுமார் கிடையாது, எஸ்.ஆர்.பிரபாகரன் கிடையாது, துரைவாணன் கிடையாது. கிளைகளாக நாங்கள் இருக்கிறோம். அதற்கு வேர் சேது படத்தின் வெற்றி தான். சேது இல்லை என்றால் நாங்கள் 5 பேர் இல்லை," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











