இசை வெளியீட்டு விழாக்களைப் புறக்கணிக்கும் நடிகைகள் காஜல், சரண்யா மோகனுக்கு கண்டனம்
சென்னை: ஆல் இன் ஆல் அழகுராஜ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்காத காஜல் அகர்வால் மற்றும் கோலாகலம் படத்தில் பங்கேற்காத சரண்யா மோகன் ஆகியோருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
படங்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் அப்படங்கள விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் ஹீரோக்கள் மட்டும்தான் பங்கேற்கிறார்கள்.
நடிகைகள் மற்றும் காமெடியன்கள் சுத்தமாக பங்கேற்பதே இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக நடிகைகள் பங்கேற்றுத் தீர வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் தீர்மானமே நிறைவேற்றியுள்ளது.
ஆனாலும் இதனை நடிகைகள் காஜல் அகர்வால், சரண்யா மோகன் இருவரும் பொருட்படுத்தவில்லை.
காஜல்அகர்வால் ஆல் இன் ஆல் அழகுராஜா படவிழாவுக்கும், சரண்யாமோகன் கோலாகலம் படவிழாவுக்கும் வராமல் புறக்கணித்து விட்டனர். இருவரையும் சென்னையில் நடந்த கோலாகலம் பாடல் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கண்டித்தனர்.

விக்ரமன்
இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் பேசும்போது, "கோலாகலம் படத்தில் கதாநாயகியாக சரண்யா மோகன் நடித்துள்ளார். இந்த விழாவுக்கு தயாரிப்பாளர் அவரை அழைத்த போது வர முடியாது என மறுத்துள்ளார். நடிப்பதுதான் என் வேலை படத்தை விளம்பரம் செய்வது என் பணி அல்ல என்று சொல்லி உதாசீனப்படுத்தி உள்ளார். இப்படி ஒத்துழைப்பு தராத நடிகைகளுக்கு நாம் எப்படி ஒத்துழைப்பு தரமுடியும்," என்றார்.

ஞானவேல் ராஜா
கார்த்தி, காஜல் அகர்வால் நடிக்கும் ஆல் இன் ஆல் அழகு ராஜா படதயாரிப்பாளரும் தயாரிப்பாளர் சங்க செயலாளருமான ஞானவேல் ராஜா விழாவில் பேசும்போது ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வராமல் புறக்கணித்த காஜல் அகர்வாலை கண்டித்தார்.

தயாரிப்பாளர் சங்கம்
தயாரிப்பாளர் சங்க பொருளாளர் ராதாகிருஷ்ணன் பேசும்போது படவிழாக்களில் பங்கேற்காத நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கேயார் எச்சரிக்கை
இறுதியில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் பேசும்போது பட விழாக்களுக்கு நடிகைகள் வராதது பற்றி இங்கே குறைபட்டார்கள். சொந்த குரலில் டப்பிங் பேசாத நடிகைகள் படப்பிடிப்பு முடிந்ததுமே முழு சம்பளத்தையும் வாங்கிவிட்டு போய்விடுகின்றனர்.
படங்களை விளம்பரபடுத்தும் பொறுப்பு நடிகைகளுக்கு இருக்கிறது. நடிகைகள் சம்பளத்தில் 20 சதவீதத்தை பிடித்தம் செய்து அவற்றில் 10 சதவீதத்தை பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிறகு கொடுக்கவும் மீதி 10 சதவீதத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு நடிகர் சங்கத்தின் ஒத்துழைப்பை கேட்டு இருக்கிறோம்," என்றார்.

மன்னிச்சி விட்டுடுங்க...
ஆனால் இயக்குநர் எஸ்பி முத்துராமன் பேசுகையில், "சரண்யா மோகன் போன்ற நடிகைகள் இந்த விழாவுக்கு வராததால் நஷ்டம் அவர்களுக்குத்தான். அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை வேண்டாம். மன்னித்து விட்டுவிடுங்கள்," என்றார்.


Click it and Unblock the Notifications











