அங்குசம் இசை வெளியீட்டு விழா- வந்தவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்ட புத்தம் பரிசு!
சென்னை: அங்குசம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த அனைவருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த புத்தகத்தைப் பரிசாக வழங்கினர் படக்குழுவினர்.
மனுஸ்ரீ பிலிம்ஸ் சார்பாக பானுமதி யுவராஜ் மற்றும் மனுக்கண்ணன் தயாரித்து, மனுக்கண்ணன் இயக்கியிருக்கும் அங்குசம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இருபகுதிகளாக நடைபெற்ற இந்த விழாவின் ஒரு பகுதியாக மூத்த வழக்குரைஞர்கள், சமூக நல ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிப் பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக்க் கலந்து கொண்டார் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் துணைத் தலைவர் வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜ்.
அவர் பேசுகையில், "சுவீடன் நாட்டில் 1766 லிலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. நம் நாட்டில் 2002ல் அதற்கான அடித்தளம் போடப்பட்டு 2003 இல் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.
நகர்ப்புறத்தில் 30 சதவீதம் பேருக்கும் கிராமப் புறங்களில் 20 சதவீதம் பேருக்கும் தான் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப் பற்றித் தெரிந்திருக்கிறது. தகவல் அறியும் சட்டத்தால் பல ஊழல்கள் வெளியே வருகின்றன என்று அஞ்சும் அரசாங்கம் இந்தச் சட்டத்தைப் பலவீனமாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.
நடைமுறையில் இருக்கும் எந்த ஒரு சட்டத்திலும் திருத்தம் கொண்டுவந்தால் அதனைத் தட்டிக்கேட்கும் அதிகாரம் நீதி மன்றங்களுக்கு இருக்கிறது... அதனால் தங்களது முயற்சிகள் பலனளிக்காது என்று உணர்ந்த அரசியல் வாதிகள் என்றுமில்லாத செயலாக தேசிய நீதிக் கமிஷன் (NJC) என்று ஒன்றினை ஆரம்பிக்கிறார்கள். தங்களுக்கு வேண்டியவர்களை அதில் உறுப்பினர்களாக நியமித்து தங்களுக்குச் சாதகமானதாக சட்டத்தை வளைத்துக் கொள்ளப் பார்க்கின்றார்கள்.
இதுபோன்ற சட்டங்கள் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கமே நிறைய செலவிடுகிறது.. எனினும் சினிமாவின் தாக்கம் இன்று அதிகமாக இருக்கின்றது... சினிமாவின் மூலம் தகவல் அறியும் சட்ட்த்தினைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினால் அது அனைவரையும் சென்றடையும்..." என்றார்.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஆன்ந்த கணேஷ் பேசும் போது, "தகவல் அறியும் சட்டத்திற்குட்பட்டக் கட்சியாக ஆம் அத்மி கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் இருக்கின்றன. இந்தச் சட்டத்திற்குத் தங்களை உட்படுத்திக் கொண்ட கட்சிகளை மட்டும் எதிர்காலத்தில் மக்கள் ஆதரிக்க வேண்டும்," என்றார்.
இவர்களுடன் கவிஞர் சல்மா, வழக்கறிஞர்கள் நன்மாறன், ஜேசு, கிருஷ்ணகுமார், ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி அய்யம்பெருமாள் மற்றும் தகவல் அறியும் உரிமை அமைப்பின் ரத்னபாண்டியன் ஆகியோரும் பேசினர்.


Click it and Unblock the Notifications











